பெண்கள் பள்ளிக்குச் செல்லலாமா?

ரமழான் காலங்களில் பெண்கள் மஸ்ஜிதுக்குச் செல்கின்றனர். பெண்கள் மஸ்ஜிதுக்குச் சென்று தொழுவது ஆகுமானதா? என்ற ஐயம் பலருக்கும் எழலாம்.

பொதுவாக ரமழான் காலத்திலும் சரி, ஏனைய காலங்களில் ஐவேளைத் தொழுகைக்கும் சரி பெண்கள் பள்ளிக்குச் செல்ல அனுமதி உள்ளது. ஆனால், பெண்கள் பள்ளியில் தொழுவதை விட வீட்டில் தொழுவதே சிறந்ததாகும்.

நபி(ச) அவர்களது காலத்தில் பெண்கள் ஐவேளைத் தொழுகைக்கும் பள்ளிக்குச் சென்றுள்ளனர். நபி(ச) அவர்கள் பெண்கள் பள்ளிக்கு வருவதைத் தடுக்கவும் இல்லை, ஆர்வமூட்டவும் இல்லை. அவர்கள் பள்ளிக்கு வருவதாயின் பேண வேண்டிய ஒழுங்குகளைப் போதித்தார்கள்.

பெண்கள் பள்ளிக்குச் செல்வதாக இருந்தால் கணவனின் அனுமதி பெற வேண்டும். பெண்கள் அனுமதி கேட்டால் கணவன் தடுக்கக் கூடாது என்று நபி(ச) அவர்கள் கூறினார்கள்.

‘பெண்கள் பள்ளிக்குச் செல்வதைத் தடுக்காதீர்கள். அவர்களின் வீடுகளே அவர்களுக்குச் சிறந்ததாகும்’ என்று நபி(ச) அவர்கள் கூறினார்கள்.
(அஹ்மத், அபூதாவூத்)
‘பெண்கள் பள்ளிக்குச் செல்வதைத் தடுக்காதீர்கள். அவர்கள் வாசனை பூசாமல் பள்ளிக்குச் செல்லட்டும்’ என நபி(ச) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், அபூதாவூத்)

‘உங்களில் ஒருவர் பள்ளிக்குச் செல்வதாயின் வாசனையைத் தொடாதீர்கள்.’ (முஸ்லிம்) என நபி(ச) அவர்கள் பெண்களுக்குக் கூறினார்கள்.

எனவே, பெண்கள் பள்ளிக்குச் செல்வதென்றால் ஆடை மற்றும் வீதி ஒழுங்குகளை முறையாகக் கடைப்பிடித்து பேணிக் கொள்வதுடன் வீண் அலங்காரம் இல்லாமல், ஆடைகளில் மணம் பூசாமல், ஆண்-பெண் கலப்பு இல்லாத முறையில் பள்ளிக்குச் சென்று வருவதில் தப்பில்லை.

சிலர் பெண்கள் பள்ளிக்குச் செல்லவே கூடாது என்று கருதுகின்றனர். இது முற்றிலும் தவறாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.