மூஸா நபியும் இரு பெண்களும் [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-30]

பிர்அவ்னிடமிருந்து தப்புவதற்காக மூஸாநபி ஊரை விட்டு ஓடினார். இறுதியில் அவர் ‘மதியன்’ பிரதேசத்தை அடைந்தார். அந்த இடத்தில் இடையர்கள் தமது ஆடுகளுக்கு நீர் புகட்டிக் கொண்டிருந்தனர். இரண்டு பெண்கள் தமது ஆடுகளை வைத்துக்கொண்டு ஓரமாக நின்று கொண்டிருந்தனர்.

பெண்கள் இருவர் இருக்க இந்த இளைஞர்கள் அவர்களுக்கு இடம் கொடுக்காமல் தமது ஆடுகளுக்கு நீர் புகட்டிக் கொண்டிருப்பது மூஸா நபிக்குப் பிடிக்கவில்லை. அப்போது அவர்கள் அந்த இரு பெண்களிடமும் “என்ன செய்தி?” என்று கேட்டார்கள். அதற்கவர்கள் “இவர்கள் நீர் புகட்டும் வரையில் நீர் புகட்ட முடியாது! எமது தந்தை வயது முதிர்ந்தவர்.
அதனால் இந்தப் பணியை நாங்கள்தான் செய்தாக வேண்டும்” என்று கூறினர். அவர்கள் மீது இரக்கப்பட்ட மூஸா நபி, அப்பெண்களின் ஆடுகளுக்கு தானே நீர் புகட்டினார்கள். பின்னர் ஒரு மரநிழலில் அமர்ந்து “என் இறைவா! நீ எனக்கு எந்த நன்மையைத் தந்தாலும் அதன்பால் தேவையுடைய பகீராக நான் இருக்கின்றேன்” என்று பிரார்த்தித்தார்கள்.

மூஸா நபிக்கு உண்ண உணவும், இருக்க இடமும் தேவைப்பட்டது. அல்லாஹ் மூஸா நபியின் துஆவை அங்கீகரித்தான்.
அந்த பெண்கள் இருவரும் தமது ஆடுகளை சாய்த்துக் கொண்டு வீடு திரும்பினர். வழமையை விட நேர காலத்துடன் வந்த மகள்களிடம் விசாரித்து நடந்ததை தந்தை அறிந்து கொண்டார். அவர் வயது முதிர்ந்தவர். அவருக்கு இரண்டு
பெண் பிள்ளைகள் மட்டுமே இருந்தனர். ஆண் துணை இருக்கவில்லை. நடந்த நிகழ்வை வைத்து மூஸா நபி நல்லவர் என்பதை அந்தப் பெரியவர் அறிந்து கொண்டார். எனவே அவர் மூஸா நபியை அழைத்து வர ஒரு மகளை
அனுப்பினார்.அந்த மகள் மூஸா நபியிடம் நானத்தோடு வந்து “எமது தந்தை நீங்கள் எமது ஆடுகளுக்கு நீர் புகட்டியதற்கு கூலி தர விரும்புகிறார்” என்று கூறியதும் மூஸா நபி முன்னால் நடக்க அந்த பெண் வழிகாட்டினாள்.

இருவரும் இல்லம் வந்து அடைந்தனர். வீடு வந்த மூஸா நபி நடந்ததையெல்லாம் பெரியவரிடம் கூறினார். தான் தற்செயலாகத்தான் அந்த கொலையைச் செய்ததாகவும் விவரித்தார். மூஸா நபியைப் பார்த்த பெரியவர் “பயப்படாதீர்கள். இது அவனது கட்டுப்பாட்டில் உள்ள இடம் அல்ல. நீங்கள் அநியாயக்காரக் கூட்டத்திடமிருந்து தப்பிவிட்டீர்கள்”
என்று ஆறுதல் கூறினார். நடந்த பேச்சு வார்த்தைகளை உள்ளே இருந்து கேட்டுக் கொண்டிருந்த பெண்களில் ஒருவர், “தந்தையே! இவரை நீங்கள் கூலிக்கு வைத்துக் கொள்ளலாமே! இவர் நம்பிக்கையானவராக உள்ளார். பலசாலியாகவும் உள்ளார். எனவே இவர் பணிசெய்ய ரொம்ப பொறுத்தமானவர்” என்று கூறினாள்.

மகளின் பேச்சைக் கேட்ட தந்தை தனது இரு மகள்களும் இவர் மீது நல்லபிப்ராயம் வைத்திருப்பதை உணர்ந்து
கொண்டார். அந்நியர் ஒருவர் வீட்டில் வைத்திருப்பதையும் சங்கடமாகக் கருதினார். எனவே மூஸா நபியைப் பார்த்து,
“எனது ஒரு மகளை உனக்கு நான் மனம் முடித்துத் தருகின்றேன். அதற்காக நீங்கள் 8 வருடங்கள் வேலை செய்ய வேண்டும். விரும்பினால் இரண்டு வருடங்களைக் கூட்டி 10 வருடங்கள் எனது ஆடுகளை நீங்கள் மேய்க்க வேண்டும்” என்றார்.

அதற்கு மூஸா நபி இணங்கினார். “8 வருடமா 10 வருடமா என்பதை நானே தீர்மானிக்கின்றேன். நாங்கள்
பேசிக் கொண்டதற்கு அல்லாஹ்வே பொறுப்பாளன்” என்று கூறினார்.

மூஸா நபிக்கு தங்க இடம் கிடைத்தது. உணவும் கிடைத்தது. உணவுக்காக தொழிலும் கிடைத்தது. அந்த பெரியவருக்கு
ஆண் துணை கிடைத்தது. தந்தையைக் காக்கவும் தமது வாழ்வை ஓட்டவும் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்களுக்கு
ஓய்வும் கிடைத்தது, நம்பிக்கையும் வீரமும் உதவும் மனப்பாங்கும் கொண்ட ஒரு ஆணின் துணையும் கிடைத்தது.

மூஸா நபி அங்கேயே பல ஆண்டுகள் ஆடு மேய்த்து அந்த பெரியவரின் மகளைத் திருமணமும் செய்து கொண்டார்.
(இந்த நிகழ்ச்சியை அல்குர்ஆனில் 22:28- 28 வரையுள்ள வசனங்களில் காணலாம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.