அகீதாவைப் புரிந்துகொள்ள சில அடிப்படைகள் – 2

சென்ற இதழில் அகீதாவின் அடிப்படை அம்சங்களில் ஒன்றான அல்லாஹ்வின் பெயர்கள்-பண்புகள் விடயத்தில் ஈமான் கொள்ளும் போது கடைப்பிடிக்க வேண்டிய சில ஒழுங்குகளைப் பார்த்தோம்.

  • இது ஈமானுக்கு உரிய அம்சம். ஆய்வுகளுக்கும், ஆராய்ச்சிகளுக்கும் அப்பாற்பட்டது.
  • சொல்லப்பட்ட கருத்தை மறுக்கக் கூடாது.
  • மாற்று விளக்கம் கூறக் கூடாது.
  • ஒப்புவமை கூறக் கூடாது.
என்கின்ற நான்கு முக்கிய அடிப்படைகள் குறித்து விரிவாகப் பார்த்தோம். மற்றும் சில அடிப்படைகளை இந்த தொடரில் புரிந்துகொள்ள இருக்கின்றோம்.
5. இப்படித்தான் என கய்பிய்யத் கூறக்கூடாது:
அல்லாஹ்வின் செயல்கள், பண்புகள் என்பவற்றுக்கு இப்படித்தான் அது என நாமாகத் கய்பிய்யத் கூறக் கூடாது. அல்லாஹ்வின் முகம், அல்லாஹ்வின் கை, அல்லாஹ்வின் கால் என்றெல்லாம் அல்குர்ஆனிலும், அல்ஹதீஸிலும் பல பதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அல்லாஹ் வருவான்; அல்லாஹ் முதல் வானத்துக்கு இறங்குவான் என்றெல்லாம் அல்லாஹ்வின் செயற்பாடுகள் பற்றியும் குர்ஆனும், ஹதீஸும் போதிக்கின்றன.
அல்லாஹ் அர்ஷில் இப்படித்தான் இருக்கின்றான் என்றோ, அல்லாஹ் முதல் வானத்துக்கு இப்படித்தான் இறங்குவான் என்றோ யாரும் கூற முடியாது. ஏனெனில் இவற்றை யாரும் கண்டதில்லை; காணவும் முடியாது. இது ஆய்வு செய்து கூறக் கூடிய அம்சமும் அல்ல. இதை யாரும் கற்பனை பண்ணவும் முடியாது; கற்பனை பண்ணவும் கூடாது.
இவ்வாறே, அல்லாஹ்வின் கை இப்படியிருக்கும், அல்லாஹ்வின் முகம் இப்படியிருக்கும் என்று பேசவும் கூடாது; கற்பனை பண்ணவும் கூடாது. அல்லாஹ்வுக்கு அவனது கண்ணியத்துக்கும், அந்தஸ்த்துக்கும் தகுந்த முகம் உண்டு. அதை நாம் நம்புவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.
அல்லாஹ் – அவனது கண்ணியத்துக்கும், அந்தஸ்த்துக்கும் தகுந்த அமைப்பில் அர்ஷின் மேலானான்; முதல் வானத்துக்கு இறங்குவான்; வருவான் என்று நம்புவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். இவை குறித்து மேலதிகமாகச் சிந்திப்பதோ, பேசுவதோ, விவாதிப்பதோ தவிர்க்கப்பட வேண்டும்.
6. “எப்படி?” எனக் கேட்கக்கூடாது:
“இப்படித்தான் இது இருக்கின்றது!” என ஒரு மனிதன் கூற வேண்டிய நிர்ப்பந்தத்தை எப்படி இருக்கின்றது? என்ற கேள்விதான் உருவாக்குகின்றது.

“அல்லாஹ் அர்ஷின் மேலானான்!” என்று குர்ஆன் கூறும் போது, அவன் எப்படி அர்ஷின் மேலிருக்கின்றான்? என்று கேள்வி கேட்கக் கூடாது. “அல்லாஹ் வருவான்!” எனக் குர்ஆன் கூறும் போது, அல்லாஹ் எப்படி வருவான்? எனக் கேள்வி கேட்கக் கூடாது.
காரணம் – இந்தக் கேள்வி அர்த்தமற்றது; கேட்கக் கூடாதது. இந்தக் கேள்வி குழப்பமான மன நிலையையும், சிந்தனைச் சிக்கலையும் ஏற்படுத்தும்.அல்குர்ஆனை எடுத்துப் பார்த்தால் நபி(ஸல்) அவர்களது தோழர்கள் நபி(ஸல்) அவர்களிடம் பல கேள்விகளைக் கேட்டுள்ளனர். மாதத் தீட்டு, பிறை எனப் பல அம்சங்கள் குறித்து வினவியுள்ளனர்.
இவ்வாறே இஸ்லாமியச் சட்டதிட்டங்கள் குறித்து நபி(ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்டு விளக்கம் பெற்றுள்ளனர். அதை நபி(ஸல்) அவர்கள் தடுக்காத அதே வேளை ஊக்குவித்துமுள்ளார்கள். எனினும், நபித் தோழர்களில் எவரும் அல்லாஹ் சம்பந்தப்பட்ட விடயங்களில் கேள்வி கேட்காமல் சொல்லப்பட்டதை அப்படியே நம்பியுள்ளனர். எனவே, அல்லாஹ் சம்பந்தப்பட்ட விடயத்தில் யாரும் கேள்வி கேட்கலாகாது.
இமாம் மாலிக்(றஹ்) அவர்கள், அல்லாஹ் அர்ஷின் மேலானான் என்பது பற்றி விளக்கிக் கொண்டிருந்தார்கள். ஒருவர், “எப்படி அர்ஷின் மேலானான்?” எனக் கேள்வி கேட்டார்.
அதற்கு இமாம் மாலிக்(றஹ்) அவர்கள்;
அல்லாஹ் அர்ஷின் மேலானான் என்பது அறியப்பட்ட விடயம். (ஏனெனில் குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.
அதை நம்புவது கட்டாயக் கடமையாகும்.
எப்படி ஆனான் என்பது அறியப்படாத விடயம். (காரணம் அது குறித்துக் குர்ஆன்-ஸுன்னா எதையும் கூறவில்லை.
எப்படியென அது குறித்துக் கேள்வி கேட்பது ஸுன்னாவுக்கு முரணான பித்அத்தாகும்!” எனக் கூறியதோடு, “இவர் பித்அத் காரர்! இவரை இந்நச் சபையிலிருந்து வெளியேற்றுங்கள்!” என்று குறிப்பிட்டார்கள். எனவே அல்லாஹ் விடயத்தில் கேள்வி கேட்பதைத் தவிர்க்க வேண்டும்.
அடுத்ததாக இந்தக் கேள்விக்கு ஆய்வு செய்தோ, சுயமாக முயற்சி செய்தோ பதில் கூற முடியாது; கற்பனையிலும் பதில் கூற முடியாது. அல்லாஹ் பற்றி அவனும், அவனது தூதர்களும் கூறினாலே தவிர மக்களுக்கு எதுவும் தெரியாது. கூறப்பட்ட விடயத்தில் கேள்வி கேட்டால் பதில் கூறத்தக்க முகாந்திரம் இல்லை. எனவே சொல்லப்பட்டதை அப்படியே நம்ப வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது.
7. ஆதாரத்துக்குட்பட்டது:
அல்லாஹ்வின் பெயர்கள் பண்புகள் குறித்து யாரும் ஆய்வு செய்து கூற முடியாது. அல்லாஹ்வோ அல்லது அவனது தூதர்களோ கூறிய அடிப்படையில்தான் அவனது பெயர்கள்-பண்புகளை நம்ப வேண்டும். இந்த வகையில் அல்லாஹ்வின் அஸ்மா உல் ஹுஸ்னா எனும் அழகுத் திருநாமங்கள் அனைத்தும் ஆதாரத்துக்கு உட்பட்டவையாக இருத்தல் வேண்டும்.

8. அல்லாஹ்வின் பெயர்கள் அனைத்தும் அழகானவை:
“அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றைக் கொண்டே அவனைப் பிரார்த்தியுங்கள். அவனது பெயர்களில் திரிபுபடுத்துவோரை விட்டு விடுங்கள். அவர்கள் செய்துகொண்டிருந்தவற்றிற்;காக அவர்கள் கூலி வழங்கப்படுவார்கள்.” (7:180)

மேற்படி வசனங்கள் அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருப்பதாகக் கூறுகின்றன. அர்த்தம் குறைந்த, தகுதியற்ற பெயர்கள் அல்லாஹ்வுக்கு இல்லை. உதாரணமாக, அல்லாஹ்வுக்கு “அர்ரஹ்மான்” என்ற அழகிய திருநாமம் உள்ளது. இந்தப் பெயர் அல்லாஹ்வின் விசாலமான அருளைக் குறிக்கின்றது. இதன் மூலம் அல்லாஹ்விடம் அருள், அன்பு எனும் பண்பு இருப்பதை அறியலாம்.
சிலர் “முத்தலிப்” என்பது அல்லாஹ்வின் பெயரென்று நம்புகின்றனர். இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மற்றும் சிலர் “மனிதன் என்னைத் திட்டுகின்றான்! அவன் காலத்தைத் திட்டுகின்றான்! நானோ காலமாவேன்! நானே இரவு-பகலை மாறி மாறி வரச் செய்கின்றேன்!” என்ற ஆதாரபூர்வமான ஹதீஸை வைத்து, அல்லாஹ்வுக்கு “அத்தஹ்ர்” (காலம்) என்றொரு பெயர் இருப்பதாக எண்ணுகின்றனர். இதுவும் தவறாகும். இந்த ஹதீஸ், காலத்தைப் படைத்தவன் அல்லாஹ் என்பதால் காலத்தைத் திட்டுபவன் அல்லாஹ்வைத் திட்டுவதாகக் கூறுகின்றது. அவ்வாறில்லாமல் அல்லாஹ்வுக்குக் “காலம்” என்று ஒரு பெயர் இருப்பதாகக் கூறவேயில்லை. காலம் என்பது அழகான பெயருமில்லை. அது எந்தப் பண்பையும் பிரதிபலிக்கவும் இல்லை என்பது கவனிக்கத் தக்கதாகும்.
9. அல்லாஹ்வுக்கு எத்தனை பெயர்களுள்ளன என்பது யாருக்கும் தெரியாது:
“அல்லாஹ்வுக்கு 99 திருநாமங்கள் உள்ளன. யார் அவற்றை மனனமிட்டுக்கொள்கிறாரோ அவர் சுவனம் நுழைவார்!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
;(புகாரி 6410, முஸ்லிம் 2677)

இங்கு 99 என்று எண்ணிக்கை குறிப்பிடப் பட்டுள்ளது. எனினும், நபி(ஸல்) அவர்களது பிரபலமான ஒரு பிரார்த்தனை பின்வருமாறு அமைந்துள்ளது.
(அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத்(ரழி), அஹ்மத் 1ஃ452, 394, இப்னு ஹிப்பான், ஹாகிம்)
கவலை/அச்சம் நீங்குவதற்காக ஓதுவதற்கு நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்த துஆவே இதுவாகும். ஒரு முஸ்லிமுக்குக் கவலை/துக்கம் ஏற்பட்டு, இந்த துஆவை ஓதினால் அவனது கவலை நீங்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மேற்படி துஆவில் “நீ உனது மறைவான அறிவில் மறைத்து வைத்துள்ள பெயர்களைக் கொண்டும் கேட்கின்றேன்!” என நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளதால் மக்களுக்கு வஹீ மூலம் அறிவிக்கப்படாத அழகுத் திருநாமங்களும் அல்லாஹ்வுக்கு உள்ளன. அறிவிக்கப்பட்டவை 99 உள்ளன என்றே நம்ப வேண்டும் 99 மட்டும்தான் அவனது பெயர்கள் என்பதற்கில்லை.
10. ஒவ்வொரு பெயரும் அல்லாஹ்வின் ஒவ்வொரு தாதை (பண்பை) குறிப்பிடுகின்றது:
“அழகப்பன்” என்ற பெயருள்ள எல்லோரும் அழகாக இருப்பார்கள் என்பதற்கு இல்லை. மனிதன் பெயர்களை ஒரு அறிமுகத்துக்காகவும், அடையாளத்துக்காகவும் வைக்கின்றான். எனினும் அல்லாஹ்வின் அழகுத் திருநாமங்கள் அனைத்தும் அவனது சிறப்பான தன்மையையும், உயர்ந்த பண்புகளையும் வெளிப்படுத்துகின்றன. அல்லாஹ்வுக்கு “அல்ஆதில்” (நீதமானவன்) என்றொரு பெயர் உள்ளது. இந்தப் பெயரையும் நம்ப வேண்டும். அவனுக்கு “அத்ல்” (நீதி) என்ற பண்பு இருப்பதாகவும் நம்ப வேண்டும்; நீதிக்கு எதிரான அநீதி என்ற பண்பு அவனிடமில்லை என்றும் நம்ப வேண்டும்.

11. அல்லாஹ்வின் பண்புகள் பரிபூரணமானவை; குறைபாடற்றவை:
அல்லாஹ்வின் அழகுத் திருப் பெயர்களைப் போன்றே அல்லாஹ்வின் பண்புகள் அனைத்தும் புகழத்தக்கவை. பரிபூரணமானவை, உயர்ந்தவை என்றும் நம்ப வேண்டும்.

அல்லாஹ்வுக்குக் குறைவை உண்டுபண்ணும் பண்பு இருப்பதாக நம்புவது (குப்ர்) நிராகரிப்பை ஏற்படுத்தும். மரணம், அறியாமை, இயலாமை, ஊமை, குருடு, செவிடு போன்ற தன்மைகள் இருப்பதாக ஒருவன் நம்பினால் அல்லது அப்படிக் கற்பனை செய்தால் அது குப்ரை ஏற்படுத்தும். அல்லாஹ், “அல் ஆலிம்” (அறிந்தவன்) என்றால், அவனுக்கு “இல்ம்” (அறிவு) என்ற பண்பு இருக்கின்றது. அதே வேளை, அறிவுக்கு எதிரான அறியாமை என்ற பண்பு அறவேயில்லை என்றும் நம்ப வேண்டும். ஒரு மனிதனைப் பொருத்தவரையில் அறியாமை இருக்கும் போதே அவன் அறிஞன் என்றும் கூறப்படலாம். இயலாமை இருக்கும் போதே வல்லவன் என்றும் கூறப்படலாம். அல்லாஹ்வின் பண்புகள் ஒவ்வொன்றும் அதற்கு எதிரான பண்புகளை நிராகரிக்கின்றன.
இதே வேளை, அல்லாஹ்வின் பண்பு போன்று பேசப்படும் ஒரு செய்தி ஒரு கோணத்தில் பார்க்கும் போது உயர்வாகவும், மற்றொரு கோணத்தில் பார்க்கும் போது குறைவாகவும் தென்படலாம்.
உதாரணமாக; “(நபியே!) நிராகரிப்பாளர்கள் உம்மைத் தடுத்து வைத்துக்கொள்வதற்கு அல்லது உம்மைக் கொலை செய்வதற்கு அல்லது உம்மை (மக்காவை விட்டும்) வெளியேற்றி விடுவதற்கு உமக்கெதிராகச் சூழ்ச்சி செய் ததை (எண்ணிப் பார்ப்பீராக!) அவர்கள் சூழ்ச்சி செய் கின்றனர். (அதற்கெதிராக) அல்லாஹ்வும் சூழ்ச்சி செய் கின்றான். சூழ்ச்சி செய்வோரில் அல்லாஹ்வே சிறந் தவன்.” (8:30)
“நிச்சயமாக அவர்கள் கடுமையாகச் சூழ்ச்சி செய்கின்றனர். (அதை முறியடிக்க) நானும் கடும் சூழ்ச்சி செய்வேன்.” (86:15-16)
“நிச்சயமாக நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்றுவதாக நினைக்கின்றனர். அவனோ அவர்களை ஏமாற்றி விடுகின்றான். அவர்கள் தொழுகைக்காக நின் றால் சோம்பேறிகளாகவும், மக்களுக்குக் காட்டுவோராக வுமே நிற்கின்றனர். மேலும், அவர்கள் அல்லாஹ்வைக் குறைவாகவே நினைவு கூருகின்றனர்.” (4:142)
சதி செய்வது, சூழ்ச்சி செய்வது என்பன குறைவான பண்புகளாகத் தோன்றலாம். இதே வேளை, சூழ்ச்சி செய்யும் எதிரியின் சூழ்ச்சியை முறியடிப்பது போற்றத் தக்க பண்பாகவும் இருக்கும். இவை போன்ற செயல்களை அல்லாஹ்வின் பண்புகள் என்றோ, அல்லாஹ்வின் பண்புகளில்லை என்றோ ஒட்டுமொத்தமாகக் கூறி விட முடியாது.
எந்த இடத்தில் இந்தச் செயல்களை அல்லாஹ்வுடன் இணைப்பது அவனுக்குப் பொருந்துமோ, அந்த இடத்தில் மட்டுமே இவற்றை அவனுடன் இணைக்க வேண்டும். மேற்கூறிய மூன்று வசனங்களிலும் எதிரிகளின் தவறுக்குப் பதிலடியாகத்தான் இந்த வினைச் சொற்கள் அல்லாஹ்வுடன் இணைத்துப் பேசப்படுகின்றன என்பது கவனிக்கத் தக்கதாகும்.
எனவேதான் அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல் உதைமீன்(றஹ்) அவர்கள் அல்லாஹ்வைச் சூழ்ச்சியாளன் என வர்ணிக்கலாமா? என உன்னிடம் கேட்டால் “ஆம்!” என்றோ, “இல்லை!” என்றோ கூறாமல் சூழ்ச்சி செய்யப்பட யார் தகுதியாளர்களோ, அவர்களுக்கு அவன் சூழ்ச்சியாளன் என்று கூறுங்கள் எனக் குறிப்பிடுகின்றார்.
12. மாறாததும், நாடினால் நடப்பதும்:
அல்லாஹ்விடம் இருப்பதாகக் குர்ஆன்-ஸுன்னா கூறக் கூடிய பண்புகளை இரண்டாகப் பிரிக்கலாம்.

(1) மாறாத் தன்மை கொண்ட அவனது தாதுடன் சம்பந்தப்பட்டது:

கேள்வி, பார்வை போன்ற அவனது பண்புகளை இதற்கு உதாரணம் கூறலாம்.
(2) அல்லாஹ்வின் நாட்டத்துடன் சம்பந்தப்பட்டது:
இவை அவனது நாட்டத்தின் படி நாடும் போது நடக்கும் அவனது செயற்பாடுகளைக் குறிக்கும். எப்போதும் நடந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்கில்லை.

உதாரணமாக, அர்ஷின் மீதானான் என்ற அவனது செயல் மற்றும் வருதல், சிரித்தல், கோபப்படுதல், மகிழ்வடைதல் இத்தகைய பண்புகளும் அல்லாஹ்வுக்குள்ளன. அவன் நாடும் போது அதைச் செய்வான்.
“தான் நாடுவதைச் செய்பவன்.” (85:16)
இத்தகைய செயற்பாடுகள் அவனது நாட்டத்துக்குட்பட்டதாகும். சில பண்புகள் தாதோடு சம்பந்தப்பட்ட பண்புகளாகவும், செயலோடு சம்பந்தப்பட்டவையாகவும் இருக்கும்.
உதாரணமாக, அல்லாஹ் மன்னிக்கக் கூடியவன். அதே நேரம், மன்னித்தல் என்ற அவனது செயற்பாடு நாடும் போது நாடுபவர்களுக்கு நடக்கும் அல்லாஹ் பேசக் கூடியவன். பேச்சு எனும் அவனது செயல் நாடும் போது நடக்கும்.
இந்த அடிப்படை வித்தியாசங்கள் அஸ்மா ஸிஃபாத் பற்றிய நம்பிக்கையில் அவசியம் புரியப்பட வேண்டியவையாகும். எல்லாம் வல்ல அல்லாஹ் அவன் நம்பச் சொன்ன விதத்தில் நம்பி ஈமான் கொண்ட முஃமின்கள் கூட்டத்தில் நம்மனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக!
(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.