உலகம் சுற்றிய பேரரசர் துல்கர்னைன் – 1 [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-20]

துல்கர்னைன் என்றால் இரண்டு கொம்புகளை உடையவர் என்பது அர்த்தமாகும். இந்த மாமன்னருக்குக் கொம்புகள் இருக்கவில்லை. எனினும், இவர் கண்ட ஒரு கனவிற்கு விளக்கமாகவும் இவரது அந்தஸ்தை உயர்த்திக் காட்டவுமே இவரது மக்கள் இவரை துல்கர்னைன் (இரண்டு கொம்புகளையுடையவர்) என அழைத்தனர்.

இவர் ஒரு அடிமைச் சமூகத்தில் பிறந்து வளர்ந்து வந்தவராவார். இவரது சமூகத்தை அதிகாரமும் ஆணவமுமிக்க ஒரு கூட்டம் அடிமைப்படுத்தி இருந்தது. இவர்களது சகல உரிமைகளும் பறிக்கப்பட்டிருந்தன. அவர்களோ இழந்த உரிமைகளை மீளப் பெறவோ, வருகின்ற பாதிப்புகளிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளவோ திராணியற்று அடிமைகளாக இழிவுடன் வாழ்ந்து வந்தனர். துல்கர்னைன் இளமைப் பருவத்தை அடைந்த போது தனது சமூகத்தின் அடிமைத்தனத்தையும் பலவீனத்தையும் கண்டு கலங்கினார். இந்த அடிமைத்துவ ஆஸ்திகளையெல்லாம் அறுத்தெறிந்து தன் சமூகத்தைச் சுதந்திரமடையச் செய்ய வேண்டும் என்று அவர் மனம் ஆயிரம் விடுத்தம் அடித்துச் சொன்னது.

எனவே மக்களிடம் அடிமைத்தனத்தின் இழிவையும், மனிதன் தன்மானத்துடனும் சுதந்திரத்துடனும் வாழ்வதன் சிறப்பையும் எடுத்துக் கூறினார். இந்த அநியாயக்கார அரசனுக்கெதிராக அணிதிரண்டு தமது உரிமைகளைக் காப்பதன் முக்கியத்துவம் பற்றி விபரித்தார். ஆனால் அந்த மக்களோ இழிவோடு வாழ்ந்து பழகியிருந்தனர். இருக்கும் வரை இப்படியே வாழ்ந்துவிட்டு மடிவதையே அவர்கள் விரும்பினார்கள். அதுமாத்திரமின்றி பெரும் சக்தி வாய்ந்த இந்த அரசை எதிர்த்து நிற்க எம்மால் முடியுமா? இது சரிப்பட்டு வராது என்று கருதினர். எனவே, துல்கர்னைனைப் பார்த்து, “உனக்குத் தேவையில்லாத வேலை. இதை விட்டுவிடு! நீ இப்படிப் பேசுவது அரசனுக்குத் தெரிந்தால் எமக்குத்தான் பாதிப்பு ஏற்படும். அவனது சக்தி மிக்க படை எம்மைத் துவம்சம் செய்துவிடும்” என்று கடிந்துகொண்டனர். அப்போது தான் இளைஞர் துல்கர்னைன் ஒரு உண்மையைத் தெளிவாக உணர்ந்து கொண்டார். இந்த சமூகம் தனது உரிமையையும் சுதந்திரத்தையும் மட்டும் இழக்கவில்லை. ஈமானையும் (இறைநம்பிக்கையையும்) இழந்துவிட்டது. இந்த அக்கிரமக்கார அரசனின் படைப்பலத்தின் மீது வைத்திருக்கும் அளவிற்கு இவர்களின் அல்லாஹ்வின் உதவி மீது நம்பிக்கையில்லை.

அது மட்டுமின்றி இவர்கள் தன்னம்பிக்கையையும் தன்மானத்தையும் இழந்து விட்டனர். இந்த இழிவிலிருந்து விடுதலைப் பெற வேண்டும் என்ற எண்ணமே இவர்களிடம் இல்லை. வெறுமனே உண்டு, பருகி, உறங்கி, உயிர் மடிவவைத் தவிர வேறு இலட்சியம் இவர்களுக்கு இல்லை என்பதை அவர் மிகத் தெளிவாகவே விளங்கிக் கொண்டார். தனது சமூகத்தின் மந்த நிலையைக் கண்ட அவர் சோர்ந்து விடவில்லை. தான் இன்னும் அதிகம் உழைக்க வேண்டியுள்ளது. எனவே இந்த எழுச்சிக்காக முழு அளவில் முயற்சி செய்ய முடிவு செய்தார்.

எந்த ஒரு எழுச்சியும் ஈமானின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்ற உண்மையை உணர்ந்து அவர் தவ்ஹீத் பற்றி மக்களுக்கு ஆழமாய் போதித்தார். அல்லாஹ் ஒருவன்! அவன் ஒருவனுக்கே அஞ்ச வேண்டும். அவனது அனுமதியின்றி எவரும் எமக்கு எதுவும் செய்துவிட முடியாது. எல்லா சக்தியும் அவன் கைவசமே உள்ளது. நாம் அவனை உரிய முறையில் நம்பினால் அவனது உதவி எமக்கு நிச்சயம் கிடைக்கும் என்று மக்களுக்கு உபதேசம் செய்தார். அல்லாஹ் இளைஞர் துல்கர்னைனுக்கு நல்ல ஈமானையும் நல்ல வழியையும் வழங்கினான். அவர் கூரிய புத்தியும், தூர சிந்தனையும் உடையவராகத் திகழ்ந்தார். அவர் தோற்றத்திலும் நல்ல அழகைப் பெற்றிருந்தார். விரிந்த நெஞ்சு, கூரிய பார்வை, கம்பீரமான தோற்றம், கணீரென்ற பேச்சு பலரையும் கவர ஆரம்பித்தது. எனினும் பெரும்பாலான மக்கள் இவரது பேச்சைக் கேட்பதே பெரும் ஆபத்துக்களை விளைவிக்கும் என்று எண்ணி இவரை விட்டும் வெருண்டோடினர். எனினும் அவர் நம்பிக்கை இழக்கவில்லை; நிச்சயமாக அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தன்பணியைத் தொடங்கினார். ஈமானிய ஒளியை இவர்களது இதயத்தில் ஏற்றிவிட்டால் அடிமைத்துவ சிந்தனையை வெகு இலகுவாக வேரறுத்துவிடலாம் என அவர் நம்பினார். எனவே ஈமானியப் போதனைகளை அதிகம் செய்யலானார்.

அப்போது மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இவரது பேச்சைக் கேட்க ஆரம்பித்தனர். இவர் கூறுபவற்றை நம்பலானார். இவரை நேசிக்க ஆரம்பித்தனர். சிந்தனையாளர்கள் இவர் கூறுவது தான் உண்மை என்பதை உணர்ந்து வந்தனர். அடிமைத்துவத்துடன் வாழ்வதைவிட மானத்துடனும், வீரத்துடனும் மரணிப்பது மேல் என உணரத்து துவங்கினர். எனினும் அப்போது கூட இவரைக் கண்டு ஒதுங்கக்கூடிய மக்கள் அவரது சமூகத்தில் இருக்கவே செய்தனர். இப்படியிருக்கையில் ஒரு நாள் இவர் ஒரு கனவு கண்டார். அந்தக் கனவில் சூரியனின் இரண்டு (கொம்புகளையும்) கரங்களையும் தனது வலுவான கரங்களால் பிடிக்கக் கண்டார்.

திடுக்குற்று விழித்த அவர், தான் கண்ட அதிசயக் கனவு பற்றிக் கூறினார். இந்தக் கனவுக்கு அவருடன் இருந்த அறிஞர்கள் அழகான விளக்கத்தினை அறிவித்தனர். இவரது பிரச்சாரம் பலம் பெறும், அதன்மூலம் இவர் அரசராவார். அது மட்டுமின்றி சூரியனின் இரண்டு கொம்புகளான கிழக்கையும் மேற்கையும் இவர் ஆளுவார் என்பதே அந்த விளக்கம். எனினும் அவரது சமூகத்தைச் சேர்ந்த மடையவர்கள் இரண்டு நேர்மாற்றமான விளக்கத்தினைக் கூறினர்.

அநியாயக்கார அரசன் இவரது தலையில் வெட்டுவான், அவரது தலையிலிருந்து இரத்தம் வழிந்து செல்லும் அல்லது இவரைக் கொன்று பாலைவனத்தில் இவரது தலை முடியில் கட்டித் தொங்கப் போடுவான்.

இப்படி சாதகமானதும் பாதகமானதுமான இரு வேறுபட்ட விளக்கங்கள் கூறப்பட்டன. இந்தக் கனவும், அதற்குக் கூறப்பட்ட விளக்கங்களுமே இரண்டு கொம்புடையவர் என்ற பெயருக்குக் காரணமாயின.

குறிப்பு: இஃதல்லாது இன்னும் பல விளக்கங்கள் இவருக்கு இந்தப் பெயர் வந்தமைக்காகக் கூறப்படுகின்றன.
(இன்னும் வரும் இன்ஷாஅல்லாஹ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.