நான் இவருக்கு நன்றி செலுத்துகின்றேன்.
அல்லாஹ் இவருக்கான நற்கூலியை மறுமையில் முழுமையாகவே வழங்க வேண்டும் என்று அவனிடம் பிரார்த்திற்கின்றேன். இவர் எனக்கு மிகப் பெரிய உதவியைச் செய்தார். அதற்காக பிரார்த்தனையைத் தவிர வேறு எந்த கைமாறையும் நான் அவருக்குச் செய்ய வில்லை அவரும் அதை எதிர்பார்க்கவில்லை. இதைச் சொல்வதால் சில நன்மைகள் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பில் விரிவாக விளக்க முற்படுகிறேன்
இவரது பெயர் அலி. அலி நாநா என பொதுவாக அழைக்கப் படுவார். கல்வியில் ஆர்வம் உள்ள ஒரு பொது மகன். எப்போதும் கல்வி பற்றியே பேசிக் கொண்டிருப்பார். ஆரம்ப காலத்தில் எமது மத்ரஸா வாசிக சாலையில் இருந்த அதிகமான தமிழ் நூற்கள் இவரால் அன்பளிப்புச் செய்யப்பட்டதாக இருந்தன.
நான் மத்ரஸாவில் சேரும் போது எமது குடும்ப பொருளாதார நிலை சுமாறாக இருந்தது. எனது தந்தை திருமலை துறைமுகத்தில் பணியாற்றி வந்தார். ஆனால் பின்னாற்களில் ஏற்பட்ட கலவரம் காரணமாக நாம் கண்டியில் உள்ள உடத்தலவின்ன என்ற எமது தாயின் ஊருக்குச் செல்ல நேரிட்டது. அதன் பின்னர்தான் உடத்தலவின்னையில் வீடும் கட்டப்பட்டது. கண்டி வந்து சில நாட்களில் எனது தந்தை பாரிச வாதத்தால் பாதிக்கப் பட்டு படுத்த படுக்கையாகி விட்டார். அதன் பின் அவரால் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
அப்போது சாப்பாட்டுக்கே கஸ்டம் என்ற நிலையில் குடும்ப வண்டி தள்ளாடிக் கொண்டிருந்தது. இச் சந்தர்பத்தில் என்னால் விடுதிக் கட்டனத்தை செலுத்த முடியாத நிலை ஏட்பட்டது. நான் O/L பரிட்சை எழுத இருந்த சந்தர்ப்பத்தில் விடுதிக்கட்டணம்
செலுத்தாதவர்கள் பரிட்சை எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என மத்ரஸாவில் இருந்து கடிதம் போனது. (அப்படித்தான் போடுவார்கள் ஆனால் கட்டணம் செலுத்தாததற்காக யாரும் பரிட்சை எழுத விடாமல் தடுக்கப்பட்டதில்லை)
கடிதத்தைக் கண்டதும் எனது தந்தை தங்கச்சியின் நகை எதையோ அடகு வைத்துவிட்டு பணத்தை செலுத்த அவரே வந்தார். (தந்தை தங்கை இருவருமே இப்போது இல்லை. அல்லாஹ் அவர்களின் மறுமை வாழ்வை ஒளிமயமாக்குவானாக) எனது தந்தை அச்சப்பட்டால் கைகள் நடுங்கும் பேச முடியாமல் பதட்டப்படுவார். எனக்குப் பரிட்சை எழுத முடியாமல் போய் விடும் என்ற பயத்தாலும் பதட்டத்தாலும் அவர் கைகள் நடுக்கம் எடுத்தது இன்னும் என் கண்களில் கண்ணீருடன் கலந்திருக்கிறது
குடும்பம் ரொம்ப கஸ்டத்தில் இருந்தது. எனது தாய்தான் குடும்பத்தை சுமந்தார். கடையப்பம் செய்து விற்றுத்தான் காலம் ஓடியது. எனது தம்பி பாடசாலை செல்லும் போது புத்தகப்பையுடன் கூடவே அப்பக் கூடையையும் சுமந்து செல்வான். வறுமையால் தங்கை படிப்பை நிருத்தி விட்டு தாய்க்குத் துணையாக கஸ்டப்பட்டாள். நான் மட்டும் அனைவருக்கும் சுமையாக இருந்தேன். எனது விடுதிக் கட்டணம் போக ஆஸ்த்துமா வியாதியால் நான் அவஸ்தைப் பட்டதால் மாதாந்தம் மருந்துக்கும் அதிகம் செலவு செய்ய நேரிட்டது. இது எனது மனதுக்கு உறுத்தலாக இருந்தது.
மத்ரஸாவில் இருந்து நின்று விடுபோம் என நான் நினைத்துக் கொண்டிருந்தேன். இச் சந்தர்ப்பத்தில் நான் இங்கு ஓதுவதை விரும்பாத எனது உறவினர் ஒருவர் மடவலையில் ஒரு பள்ளி இருக்கிறது. 2000 சம்பளம் தருவார்கள் போகிறாயா எனக் கேட்டார். (அவரும் இப்போது இல்லை. நான் தவறான ஒரு மத்ரஸாவில் ஓதுகிறேன் அதிலிருந்து என்னை மீற்க வேண்டும் என நல்லெண்ணம் வைத்து அவர் இப்படிக் கேட்டிருக்கலாம்)
எனது தாய் இதை விரும்பினார். ஆனால் தந்தை மட்டும் பிச்சையெடுத்தாவது உன்னைப் படிப்பிப்பேன் என்று உறுதியாகக் கூறுவார்.
நான் மத்ரஸாவுக்கு வந்தாலும் மனதில் ஒரே குழப்பமாகவும் வீட்டைப் பற்றிய கவலையாகவுமே இருந்தது. படிப்பதா இல்லையா என நான் குழம்பிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில்தான் என் வாழ்வில் இவர் வந்தார்.
ஒரு நாள் கல்லூரி செயலாளர் கலீலுர் ரஹ்மான் சேர் என்னை அழைத்து உங்களுக்கு அலி நாநா போடின் பீஸ் கட்டுவதாகச் சொல்கிறார் என்றார். அப்போது சேர் என்னை விட கஸ்டப் படுகிறவர்கள் இருப்பாங்களே என்றேன். அதற்கு அவர் உங்களுக்கு கட்டத்தான் விரும்புகிறார் என்றார். நானும் சரி என்று சொன்னேன். அன்றிலிருந்து சில வருடங்களாக நான் ஓதி முடியும் வரை அலி நாநா தான் எனக்கு விடுதிக்கட்டணம் செலுத்தினார். அவர் தானாக முன் வந்து எனக்கு உதவி செய்ததால் படிப்பதா இல்லையா என்று குழப்பம் அடங்கிப் போனது.
அல்லாஹ்வின் நாட்டப் படி அவர் செய்த இந்த உதவியால் நான் உங்கள் முன்னால் இருக்கிறேன். நான் படிப்பை இடையில் நிருத்தியிருந்தால் என் வாழ்கைப் பயணத்தின் திசை எப்படி அமைந்திருக்கும் என்று கற்பனை கூட பன்ன முடியாது. இந்த வகையில் அவர் செய்த இந்த உதவி சாதாரணமானது அல்ல. அல்லாஹ் இதற்கான நற்கூலியை நிறப்பமாக அவருக்கு வழங்குவானாக. இதை வாசிக்கும் பொருள் வளம் படைத்த சகோதரர்களும் இது போன்ற நல்ல பணிகள் மூலமாக அளவற்ற கூலியைப் பெற முயற்ச்சிக்கலாம்
அல்லாஹ் அலி நாநாவுக்கும் அவர் குடும்பத்திற்கும் அருள்புரிவானாக அவர்களுக்கு மகத்தான மறுமைப் பாக்கியத்தை வழங்குவானாக!
Leave a Reply