முஃதஸிலாக்கள் ஓர் விளக்கம் (5) | முஃதஸிலாக்களும் குர்ஆன் படைக்கப்பட்டது என்ற முரட்டு வாதமும் | கட்டுரை.

குர்ஆன் ஒரு பொருளா (ஷைஉன்) இல்லையா? என்று கேட்பர். அதை ஒரு பொருள் என்று கூற நேரிடும். அதை ஒரு பொருள் இல்லையென்றால் ஒன்றுமில்லை என்றாகிவிடும். இந்தக் கேள்விக்கு இஸ்லாமிய அறிஞர்கள் ‘ஹுவ ஷைஉன் லைஸ கல் அஷ்யாஇ” அது ஒரு பொருள் தான். ஆனால், ஏனைய பொருள் போன்றதல்ல எனப் பதில் கூறினர். மற்றும் சிலர் அது பொருள் அல்ல, ‘அம்ர்” அல்லாஹ்வின் கட்டளை எனப்பதில் கூறினர். எப்படிக் கூறினாலும்,

ذَٰلِكُمُ اللَّـهُ رَبُّكُمْ ۖ لَا إِلَـٰهَ إِلَّا هُوَ ۖ خَالِقُ كُلِّ شَيْءٍ فَاعْبُدُوهُ ۚ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ وَكِيلٌ

‘அவனே உங்கள் இரட்சகனாகிய அல்லாஹ். (உண்மையாக) வணங்கப்படத் தகுதியானவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை. அவனே யாவற்றை யும் படைத்தவன். எனவே அவனையே நீங்கள் வணங்குங்கள். அவன் யாவற்றின் மீதும் பொறுப்பாளன்.”
(6:102)

‘அவனே யாவற்றையும் படைத்தவன்” (6:102) என குர்ஆன் கூறுகின்றது. அல்லாஹ் ‘குல்லு” என்ற சொல்லைப் பாவித்துள்ளான். இதற்குள் அனைத்துமே அடங்கிவிடும். எதுவும் இதை விட்டு விதிவிலக்காகாது. இந்த அடிப்படையில் அனைத்தையும் படைத்தவன் என்ற வாசகத்திற்குள் குர்ஆனும் வந்துவிடும். எனவே, குர்ஆனும் படைக்கப்பட்டது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை என முஃதஸிலாக்கள் அடித்துக் கூறினர்.

அஹ்லுஸ்ஸுன்னா அறிஞர்களின் பதில்:

‘குல்லு” அனைத்தும் என்ற சொல் பயன்படுத்தப்பட்டால் அது எதையும் விட்டு வைக்காமல் அனைத்தையும் குறித்தேயாக வேண்டும் என்ற அவசியம் இல்லை. விதிவிலக்கும் இருக்கலாம்.

‘அது தனது இரட்சகனின் கட்டளைப் பிரகாரம் அனைத்துப் பொருட்களையும் அழித்துவிடும். அவர்களது குடியிருப்புக்களைத் தவிர (வேறெதுவும்) காணப்படாதவாறு அவர்கள் காலையை அடைந்தனர். குற்றவாளிகளான இக்கூட்டத்தாருக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப்போம்.” (46:25)

இந்த வசனத்திலும் ‘குல்லு” – அனைத்தையும் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அனைத்தையும் அழித்ததாகக் கூறிவிட்டு அடுத்த வார்த்தையிலே அவர்களது குடியிருப்புக்கள் அழிக்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது.

‘ஆத் சமூகத்திடமும் (அத்தாட்சி இருக்கின்றது.) மலட்டுக் காற்றை நாம் அவர்கள் மீது அனுப்பிய போது, அது எதன் மீது பட்டாலும் அதனை அது உக்கிப் போன எலும்பைப் போலாக்காமல் விட்டு விடவில்லை.”
(51:41-42)

காற்றுப் பட்டதும் அனைத்துமே உக்கிப் போன எலும்புகள் போல் ஆனதாக இந்த வசனம் கூறுகின்றது. எந்த ஒன்றையும் விட்டு வைக்கவில்லை என்று கூறப்படுகின்றது. ஆனால், அந்தக் காற்று பூமி, மலைகள், வீடுகள், மரங்கள் மீதும் பட்டது. இருப்பினும் அவை உக்கிப்போன எலும்புகளாக மாறவில்லை. எனவே, விதிவிலக்குகள் இருக்கின்றன.

‘அவர்களை ஆட்சி செய்யும் ஒரு பெண்ணை நிச்சயமாக நான் கண்டேன். அவள் (தேவையான) அனைத்துப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளாள். மேலும், அவளுக்கு மகத்தானதொரு சிம்மாசனமும் உள்ளது.” (27:23)

ஸபா நாட்டு இளவரசிக்கு அனைத்தும் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. அவளுக்குக் கொடுக்கப்படாத விதிவிலக்கான எவ்வளவோ அம்சங்கள் உண்டென்பது அனைவரும் அறிந்ததே!

அல்லாஹ் அனைத்தையும் படைத்தான் என்ற பதத்திற்குள் குர்ஆனும் வரும். அதை விட்டும் எதுவும் வெளியேற முடியாது. என வாதிட்டால் ஏற்படும் விளைவுகளைப் பாருங்கள்.

وَاصْطَنَعْتُكَ لِنَفْسِي

‘இன்னும் எனக்காக உம்மை(த் தூதராக) நான் தேர்ந்தெடுத்தேன்.” (20:41)

وْمَ تَجِدُ كُلُّ نَفْسٍ مَّا عَمِلَتْ مِنْ خَيْرٍ مُّحْضَرًا وَمَا عَمِلَتْ مِن سُوءٍ تَوَدُّ لَوْ أَنَّ بَيْنَهَا وَبَيْنَهُ أَمَدًا بَعِيدًا ۗ وَيُحَذِّرُكُمُ اللَّـهُ نَفْسَهُ ۗ وَاللَّـهُ رَءُوفٌ بِالْعِبَادِ

‘ஒவ்வொரு ஆத்மாவும் தான் செய்த நன்மையையும், தான் செய்த தீமையையும் (தனக்கு) முன் கொண்டு வரப்பட்டதாகக் காணும் நாளில் (தீமை செய்த ஆத்மா) தனக்கும், அதற்குமிடையில் நீண்ட தூர இடைவெளி இருக்க வேண்டுமே என்று ஆசைப்படும். அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறான். மேலும், அல்லாஹ் அடியார்களுடன் பெரும் கருணையாளனாவான்.” (3:30)

قُل لِّمَن مَّا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۖ قُل لِّلَّـهِ ۚ كَتَبَ عَلَىٰ نَفْسِهِ الرَّحْمَةَ ۚ لَيَجْمَعَنَّكُمْ إِلَىٰ يَوْمِ الْقِيَامَةِ لَا رَيْبَ فِيهِ ۚ الَّذِينَ خَسِرُوا أَنفُسَهُمْ فَهُمْ لَا يُؤْمِنُونَ

‘வானங்கள் மற்றும் பூமியில் உள்ளவை யாருக்குரியன? என்று (நபியே) நீர் கேட்டு, ‘அல்லாஹ்வுக்கே உரியவை” என்று நீரே கூறுவீராக! அவன் தன்மீது கருணையைக் கடமையாக்கிக் கொண்டான். மறுமை நாளில் நிச்சயமாக அவன் உங்களை ஒன்று திரட்டுவான். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எவர்கள் தமக்குத் தாமே நஷ்டமிழைத்துக் கொண்டார்களோ அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்.” (6:12)

وَإِذَا جَاءَكَ الَّذِينَ يُؤْمِنُونَ بِآيَاتِنَا فَقُلْ سَلَامٌ عَلَيْكُمْ ۖ كَتَبَ رَبُّكُمْ عَلَىٰ نَفْسِهِ الرَّحْمَةَ ۖ أَنَّهُ مَنْ عَمِلَ مِنكُمْ سُوءًا بِجَهَالَةٍ ثُمَّ تَابَ مِن بَعْدِهِ وَأَصْلَحَ فَأَنَّهُ غَفُورٌ رَّحِيمٌ

‘எமது வசனங்களை நம்பிக்கை கொண்டோர் உம்மிடம் வந்தால், ‘உங்கள் மீது சாந்தி உண்டாவதாக!” என்று கூறுவீராக! உங்களது இரட்சகன் கருணை காட்டுவதைத் தன்மீது கடமையாக்கிக் கொண்டான். நிச்சயமாக உங்களில் யார் அறியாமையின் காரணமாக ஏதேனும் ஒரு தீமையைச் செய்து, இதன் பின்னரும் பாவமன்னிப்புக் கேட்டு, (தன்னைச்) சீர்படுத்திக் கொண்டால் நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையவன்.” (6:54)

وَإِذْ قَالَ اللَّـهُ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ أَأَنتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُمِّيَ إِلَـٰهَيْنِ مِن دُونِ اللَّـهِ ۖ قَالَ سُبْحَانَكَ مَا يَكُونُ لِي أَنْ أَقُولَ مَا لَيْسَ لِي بِحَقٍّ ۚ إِن كُنتُ قُلْتُهُ فَقَدْ عَلِمْتَهُ ۚ تَعْلَمُ مَا فِي نَفْسِي وَلَا أَعْلَمُ مَا فِي نَفْسِكَ ۚ إِنَّكَ أَنتَ عَلَّامُ الْغُيُوبِ

‘மர்யமின் மகன் ஈஸாவே! ‘அல்லாஹ்வையன்றி என்னையும் எனது தாயையும் இரு கடவுள்களாக எடுத்துக் கொள்ளுங்கள்” என்று மனிதர்களுக்கு நீர் கூறினீரா? என அல்லாஹ் கேட்கும் போது, அ(தற்க)வர் ‘நீ மிகத் தூய்மையானவன்; எனக்கு உரிமை இல்லாதவற்றை நான் சொல்வதற்கு எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. நான் அவ்வாறு கூறியிருந்தால் நிச்சயமாக அதை நீ அறிந்திருப்பாய். என் உள்ளத்தில் இருப்பதை நீ அறிவாய். ஆனால், உன் உள்ளத்தில் இருப்பதை நான் அறியமாட்டேன். நிச்சயமாக நீயே மறைவானவற்றை நன்கறிந்தவன்” என்று கூறுவார்.”
(5:116)

இந்த வசனங்கள் எல்லாம் அல்லாஹ்வுக்கு ‘நப்ஸ்” உண்டு என்று கூறுகின்றது. அல்லாஹ்வுக்கு ‘நப்ஸ்” உண்டு என்பதை ஏற்கின்றீர்களா? என முஃதஸிலாக்களிடம் கேட்ட போது ஏற்பதாகக் கூறினர். அப்படியென்றால் இந்த வசனத்தை வைத்து நீங்கள் உங்கள் வாதத்தை அளந்து பாருங்கள்.

كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ

‘ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தைச் சுவைக்கக் கூடியதே! ” (3:185)

எல்லா ஆத்மாக்களும் மரணத்தை ருசித்தே தீரும் என இந்த வசனம் கூறுகின்றது. அல்லாஹ்வுக்கும் ‘நப்ஸ்” – ஆன்மா உண்டு.

குர்ஆன் ஒரு பொருள்தானே! அனைத்துப் பொருட்களையும் அல்லாஹ் படைத்தான் என்ற வசனத்தின் அடிப்படையில் குர்ஆனும் படைக்கப்பட்டதே! ‘குல்லு” என்பதை விட்டு எதுவும் விதி விலக்காகாது என்ற உங்கள் வாதப்படி அல்லாஹ்வுக்கும் நப்ஸ் உள்ளது! எல்லா நப்ஸுகளும் மரணத்தை சுவைத்தே தீரும் என்றால் அல்லாஹ் வின் நப்ஸும் மரணத்தை சுவைக்கும் என்று கூறப் போகின்றீர்களா? உங்கள் வாதப்படி இந்த வசனத்தை அணுகினால் இஸ்லாத்தை விட்டே வெளியேற நேரிடும் என இந்த வாதத்தின் அடிப்படையைத் தகர்த்தனர்.

அடுத்து, அல்லாஹ்வின் படைப்புக்கள் வேறு, அவனது ‘அம்ர்” – ஏவல், ‘கவ்ல்” – வார்த்தை வேறு என்பதைக் குர்ஆனே பிரித்துக் காட்டுகின்றது.

‘நிச்சயமாக உங்களது இரட்சகனாகிய அல்லாஹ்தான் வானங்கள் மற்றும் பூமியை ஆறு நாட்களில் படைத்து, பின்னர் (தன் தகுதிக்கேற்றவாறு) அர்ஷின் மீதானான். அவன் இரவைப் பகலால் மூடுகிறான். அது (இரவாகிய) அதை வேகமாகத் தொடர்கிறது. சூரியனையும் சந்திரனையும் நட்சத்திரங்களையும் தனது கட்டளைக்கு வசப்படுத்தப்பட்டவைகளாக(ப் படைத்துள்ளான்.) அறிந்து கொள்ளுங்கள்! படைத்தலும், கட்டளையிடுதலும் அவனுக்கே உரியனவாகும். அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ் பாக்கியமுடையவனாகி விட்டான்.” (7:54)

இந்த வசனத்தில் அல்லாஹ்வின் படைப்புக்கள் பற்றி கூறப்படுகின்றது. அத்துடன் ‘அல்அம்ர்” – ஏவல் என்ற வார்த்தை அதாவது அதன் மூலம்தான் அவன் படைப்புக்களைப் படைத்தான். அது பற்றியும் கூறப்படுகின்றது. அவனது படைப்பு வேறு, அவனது ‘அல் அம்ர்” – ஏவல் வேறு என்பது இதில் இருந்து விளங்குகின்றது.

அல்லாஹ்வின் ‘குன்” – ஆகுக! என்ற வார்த்தை மூலமே அனைத்தும் படைக்கப்பட்டது என குர்ஆனின் ஏராளமான வசனங்கள் கூறுகின்றன. படைப்பு வேறு ‘குன்” என்ற வார்த்தை வேறு என்பது இங்கே தெளிவாகின்றது.

‘நிச்சயமாக உங்களது இரட்சகனாகிய அல்லாஹ்தான் வானங்கள் மற்றும் பூமியை ஆறு நாட்களில் படைத்து, பின்னர் (தன் தகுதிக்கேற்றவாறு) அர்ஷின் மீதானான். அவன் இரவைப் பகலால் மூடுகிறான். அது (இரவாகிய) அதை வேகமாகத் தொடர்கிறது. சூரியனையும் சந்திரனையும் நட்சத்திரங்களையும் தனது கட்டளைக்கு வசப்படுத்தப்பட்டவைகளாக(ப் படைத்துள்ளான்.) அறிந்துகொள்ளுங்கள்! படைத்தலும், கட்டளையிடுதலும் அவனுக்கே உரியனவாகும். அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ் பாக்கியமுடையவனாகி விட்டான்.” (7:54)

படைப்புக்களும் அல்லாஹ்வுக்கே உரியன, ஏவலும் அவனுக்கே உரியது என இந்த வசனம் தெளிவாகக் கூறுவதால் அல்லாஹ்வின் ஏவல் ‘அம்ர்” என்பது படைப்புக்குள் வராது. இவ்வாறு கூறியதுடன் குர்ஆன் அல்லாஹ்வின் அம்ருக்குள் அடங்கும் என்பதற்கு என்ன நேரடியான ஆதாரம் என அடம்பிடித்தனர்.

இதற்கு இஸ்லாமிய அறிஞர்கள் சுற்றி வளைத்து விளக்கும் ஏராளமான வசனங்களைக் காட்டிய அதே நேரம் நேரடியாகக் குறிக்கும் வகையில் பின்வரும் வசனத்தைக் காட்டினர்.

‘இது அல்லாஹ்வின் கட்டளையாகும். இதை அவனே உங்களுக்கு இறக்கினான். எவர் அல்லாஹ்வை அஞ்சுகின்றாரோ அவரை விட்டும் அவரது தீமைகளை அவன் போக்கி அவருக்குரிய கூலியை மகத்தானதாக ஆக்குவான்.” (65:5)

இது குர்ஆன் குறித்தே பேசுகின்றது. எனவே, ‘அல் அம்ர்” என்பதில் அடங்கக் கூடிய குர்ஆன் படைக்கப்பட்டது அல்ல என்பது உறுதியாகின்றது என ஆணித்தரமாக சத்தியத்தை எடுத்து வைத்து குர்ஆன் படைக்கப்பட்டது என்ற வழி கெட்ட கொள்கைக்கு சாவு மணியடித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.