மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (தொடர் 05)

நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டிருந்தால் அதைக் காஃபிர்கள் விமர்சனம் செய்திருப்பார்கள். அப்படி விமர்சனம் செய்ததாக எந்தத் தகவல்களும் இல்லை. எனவே, விமர்சனம் இல்லை என்பதே நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்படவில்லை என்பதற்கான சான்றாகத் திகழ்கின்றது என்ற அடிப்படையில் சகோதரர் நபியவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஆதாரப்பூர்வமான ஹதீஸை மறுக்கின்றார்.
உள்ளதை வைத்து விமர்சனம் செய்வதுதான் நியாயமான விமர்சனமாகும். ஆனால், அவர் இந்த வாதத்தை பல்வேறுபட்ட மிகைப்படுத்தல்கள் செய்து ஹதீஸில் கூறப்படாத செய்திகளை மேலதிகமாக இணைத்தே வலுப்படுத்த முனைகிறார்.
எதிரிகள் விமர்சனம் செய்யாதது ஏன்?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் அவர்கள் கொண்டு வந்த வேதத்தையும் பொய்யென நிலை நாட்ட எதிரிகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.
நபிகள் நாயகத்துக்குச் சூனியம் வைக்கப்பட்டு ஆறு மாத காலம் அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால் எதிரிகள் இது குறித்து நிச்சயம் விமர்சனம் செய்திருப்பார்கள். (பக்:1298)
நபி(ஸல்) அவர்களுக்குச் செய்யப்பட்ட சூனியத்தால் மனைவியருடன் தாம்பத்தியத்தில் ஈடுபடாமலேயே தாம்பத்திய உறவில் ஈடுபட்டதாக நபி (ஸல்) அவர்களுக்குப் போலி உணர்வு ஏற்பட்டது! 6 மாதம் அல்ல, 6 வருடம் இந்த நிலை ஏற்பட்டால் கூட இதை எதிரிகள் விமர்சனம் செய்யமாட்டார்கள். விமர்சனம் செய்யவும் முடியாது! ஏனெனில், இது வெளி உலகுக்குத் தெரியும் சமாச்சாரமல்ல.
அவர்களுடனும், அவர்களது மனைவியருடனும் மட்டுப்படுத்தப்பட்ட பிரச்சினை இது! இதனை எப்படி எதிரிகள் விமர்சனம் செய்ய முடியும்? எனவே, சூனியம் செய்யப்பட்டிருந்தால் எதிரிகள் விமர்சனம் செய்திருப்பார்கள், விமர்சனம் செய்யாததினால் சூனியம் செய்யப்பட்டது என்பது பொய்யான தகவல் என அவர் வாதிடுவது எவ்வளவு தவறான கண்ணோட்டம் என்று சிந்தித்துப் பாருங்கள்!
காஃபிர்கள் விமர்சனம் செய்திருப்பார்களே! என்ற அர்த்தமற்ற-நியாயமற்ற-நபி(ஸல்) அவர்களுடைய சமூக வாழ்வில் சம்பந்தப்படாத சங்கதியை வைத்து, யூகம் செய்து, அந்த யூகத்தின் அடிப்படையில் ஆதாரபூர்வமான ஹதீஸை மறுப்பது எவ்வளவு தவறான அணுகுமுறை என்பதை நடுநிலையோடு சிந்தித்துப் பாருங்கள்!
அவர்களுக்கு இது குறித்த எவ்வித அறிவும் இல்லை. அவர்கள் வெறும் யூகத்தையே பின்பற்றுகின்றனர். நிச்சயமாக வெறும் யூகம் உண்மைக்கு எந்தப் பயனும் தராது. (53:28)
அவர்கள் வெறும் யூகத்தையும் தங்கள் மனம் விரும்புவதையுமே பின்பற்றுகின்றனர். நிச்சயமாக அவர்களது இரட்சகனிடமிருந்து நேர்வழி அவர்களிடம் வந்தே இருக்கின்றது.’ (53:23)
வெறும் யூகங்களைப் பின்பற்றுவது எந்த வகையிலும் சத்தியத்திற்கு துணை நிற்காது எனும் போது, யூகத்தின் அடிப்படையில் ஆதாரபூர்வமான ஹதீஸை மறுக்கும் இவரின் வாதத்தின் உண்மை நிலையை மக்கள் சிந்திக்க வேண்டும்.
மிகைப்படுத்தலும், இட்டுக்கட்டலும்:
முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார், செய்ததைச் செய்யவில்லை என்கிறார், செய்யாததைச் செய்தேன் என்கிறார், இவர் கூறுவதை எப்படி நம்புவது?’ என்று நிச்சயம் விமர்சனம் செய்திருப்பார்கள். இந்த வாய்ப்பை நிச்சயம் தவற விட்டிருக்க மாட்டார்கள். (பக்:1298)
ஹதீஸில் சொல்லப்படாத செய்திகளைத் தானாகக் கற்பனை பண்ணி, நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதால், அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதாகவும், செய்ததைச் செய்யவில்லையென்றும்-செய்யாததைச் செய்ததாகவும் கூறியதாகச் சித்தரிக்க முனைகின்றார். நபி(ஸல்) அவர்கள் குறித்தல்லவா பேசுகின்றோம் என்ற அச்சமோ, கண்ணிய உணர்வோ கொஞ்சம் கூட இல்லாது ஹதீஸை விமர்சிக்கின்றோம் என்ற எண்ணம் துளி கூட இன்றி இவ்வாறு சொந்தக் கருத்தை ஹதீஸின் கருத்தாக முன்வைக்கலாமா?
இந்தப் பாதிப்பு ஓரிரு நாட்கள் மட்டும் இருந்து நீங்கியிருந்தால் அது எதிரிகளின் கவனத்திற்குச் செல்லாமல் இருக்க வாய்ப்புண்டு. ஆறு மாத காலம் நீடித்த இந்தப் பாதிப்பு நிச்சயம் மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்காமல் இருக்க முடியாது.
மக்களோடு மக்களாகக் கலந்து பழகாத தலைவர் என்றால் ஆறு மாத காலமும் மக்களைச் சந்திப்பதைத் தவிர்த்து இந்தக் குறையை மறைத்திருக்கலாம்.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தினமும் ஐந்து வேளை பள்ளிவாசலில் தொழுகை நடத்தினார்கள். எந்த நேரமும் மக்கள் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பை வழங்கியிருந்தார்கள். எனவே நபிகள் நாயகத்துக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டிருந்தால் எதிரிகள் அறிந்திருப்பார்கள். இதை மையமாக வைத்து பிரச்சார யுத்தத்தை நடத்தியிருப்பார்கள். (பக்:1298)
இல்லறத்தில் ஈடுபடாமலேயே ஈடுபட்டதாக எண்ணியது எதிரிகளுக்கு அல்ல, நபித் தோழர்களுக்கே தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை எனும் போது, எதிரிகளுக்குத் தெரிந்திருக்கும், அவர்கள் நிச்சயமாக விமர்சித்திருப்பார்கள் என்று கூறுவது அர்த்தமற்ற வாதமாகும். இந்தப் பந்தியிலும் இந்தப் பாதிப்பு நிச்சயமாக மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்காமல் இருக்க வாய்ப்பு இல்லை என்ற யூகத்தையே அவர் முன்வைத்துள்ளார்.
5 வேளை அல்ல, 50 வேளை மக்களுக்குத் தொழுகையை நடத்தினாலும் அவருக்கு ஏற்பட்டதாக ஹதீஸ் கூறும் பாதிப்பு வெளி உலகுக்குத் தெரிவதற்கான வாய்ப்பே இல்லை எனும் போது, இவ்வாதம் அர்த்தமற்றுப் போகின்றது. இந்தப் பந்தியிலும் அவர் யூகத்தைத்தான் முன்வைக்கின்றார்.
6 மாதம் இந்தப் பாதிப்பு நீடித்தது என்ற அடிப்படையில்தான் இந்த வாதத்தையே வலுப்படுத்துகின்றார். ஆனால், சூனியம் 6 மாதம் நீடித்தது என்ற கால அளவு ஆதாரபூர்வமானதல்ல. எனவே, இந்தப்பாதிப்பு ஓரிரு நாட்கள் இருந்து நீங்கியிருந்தால் அது எதிரிகளின் கவனத்திற்குச் செல்லாமல் இருக்க வாய்ப்புண்டு என்ற அவரின் வாசகப்படியே அவரின் இந்த வாதம் அடிபட்டுப் போகின்றது.
எனவே, நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்படவும் இல்லை. மனநிலை பாதிப்பு ஏற்படவும் இல்லை என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது.
பல யூகங்களை முன்வைத்து, சில மேலதிக கருத்துக்களையும் சேர்த்துக் கொண்டு இறுதி முடிவை மட்டும் திட்டவட்டமாகத் தெரிவித்து விடுகின்றார். பலவீனமான அறிவிப்பாளர்கள் பலர் ஒரு செய்தியைச் சொன்னாலும், அது பலவீனமானதுதான் எனக் கூறும் இவர், பல யூகங்கள் சேர்ந்து திட்டவட்டமான உண்மைஎன்ற நிலையை அடையாது என்பதை அறியாதிருப்பது ஆச்சரியமாகவுள்ளது!
நல்லறிஞர்கள் ஏன் விமர்சனம் செய்யவில்லை:
எதிரிகள் விமர்சனம் செய்யாததற்கு நாம் விளக்கம் கூறி விட்டோம். இது நபி(ஸல்) அவர்களது குடும்ப விவகாரத்துடன் சம்பந்தப்பட்ட பிரச்சினை. எனவே எதிரிகளுக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. எனவே விமர்சித்திருக்க முடியாது என்பதே அந்த நியாயமான பதிலாகும்.
இப்போது நியாயமான ஒரு கேள்வியை முன்வைக்க விரும்புகின்றோம்.
இந்த ஹதீஸ் ஆதாரபூர்வமான அறிவிப்பாளர் தொடருடன் புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட பல்வேறுபட்ட அறிஞர்களின் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்த ஹதீஸ் இடம்பெற்ற நூற்களுக்கு விளக்கவுரைகளும் எழுதப்பட்டுள்ளன.
இந்த ஹதீஸ் முஸ்லிம் அறிஞர்கள் அனைவரும் அறிந்த மஸ்ஹூர்-பிரபலமான அறிவிப்பாகவும் திகழ்கின்றது.
நம்பத் தகுந்த நல்லறிஞர்கள் யாரும் ஏன் இந்த ஹதீஸை விமர்சிக்கவில்லை? அவர்கள் இந்த ஹதீஸை விமர்சிக்காதது இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது என்பதற்கான சான்றாகத் திகழ்கின்றதல்லவா?
அவர்கள், இந்த ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கருதவில்லை, பகுத்தறிவுக்கு முரண்பட்டதாகக் கருதவில்லை.
சூனியம் பற்றிய குர்ஆனின் நிலைப்பாட்டிற்கு முரண்பட்டதாகக் கருதவில்லை, இந்த ஹதீஸை ஏற்றுக்கொண்டால் குர்ஆனில் சந்தேகம் ஏற்படும் என்று கருதவில்லை.
இப்படி இருக்க, இவருக்கு மட்டும் இப்படியெல்லாம் தோன்றுகின்றது என்றால் அவர்கள் அத்தனை பேரையும் அறிவிலிகள் என்பதா? குர்ஆன்-ஸுன்னாவைப் புரிந்துகொள்ளத் தெரியாதவர்கள் என்பதா? அல்லது இவர், தான் புரிந்துகொள்வதில் ஏதோ கோளாறு விடுகின்றார் என்று கருதுவதா? இதை ஒவ்வொரு கொள்கைச் சகோதரனும் நிதானமாகச் சிந்திக்க வேண்டும்.
காஃபிர்கள் விமர்சனம் செய்யவில்லை, எனவே, சூனியம் செய்யப்பட்டதாக வந்த ஹதீஸ் பொய் என்று கூறுவதா?
அல்லது முஸ்லிம் அறிஞர்கள் இந்த ஹதீஸை விமர்சிக்கவில்லை, எனவே, இந்த ஹதீஸ் உண்மையானது என்பதா? எது வலுவான நியாயமான வாதம்? என்பதைச் சிந்திக்க வேண்டும். இப்படிச் சிந்திக்கும் போது இவர் தவறான கோணத்தில் அணுகி பிழையான அடிப்படையில் விமர்சித்து, அர்த்தமற்ற வாதங்களை முன்வைத்து, அந்த ஹதீஸை மறுக்க முயல்வதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்.
இந்த வாதத்திற்கு வலு சேர்க்க அவர் இன்னும் பல யூகங்களைத் துணை வாதங்களாக முன்வைக்கின்றார். அவற்றிற்கான விளக்கங்களையும் அறிந்துகொள்வது அவசியமாகும்.
இறைத் தூதர்களுக்கு அவர்கள் அல்லாஹ்வின் தூதர்கள்தான் என்பதை நிரூபிக்க அற்புதங்கள் வழங்கப்பட்டன என்பதை நிரூபிக்கவும், சாதாரண மனிதர்களை நபியாக ஏற்க மக்கள் மறுத்தனர் என்பதை விளக்கவும் அவர் பல குர்ஆன் வசனங்களை ஆதாரமாகக் காட்டுகின்றார். 17:94, 36:15, 26:186, 26:154, 25:7, 23:33, 23:47, 21:31, 3:184, 7:101, 35:25, 10:74, 10:13, 40:22, 9:76, 64:6, 40:50, 57:25 இவ்வளவு வசனங்களின் கருத்தையும் 1299-1301 பக்கங்களில் பதிவு செய்து இந்த முடிவு நிறைய வசனங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்ற எண்ணத்தை மக்கள் மனதில் பதிக்கிறார். இவ்வளவு வசனங்களை வைத்தும் அவர் வைக்கும் வாதம் என்னவென்றால்….
இந்த நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு யூதர்கள் சூனியம் வைத்து அவர்களையே மந்திர சக்தியால் முடக்கிப் போட்டிருந்தால் இறைத் தூதரை விட யூதர்கள் செய்து காட்டியது பெரிய அற்புதமாக மக்களால் கருதப்பட்டிருக்கும். (பக்:1301)
நபி(ஸல்) அவர்களுக்குச் செய்யப்பட்ட சூனியத்தால் அவர் முடக்கிப் போடப்பட்டதாக ஹதீஸ் கூறவில்லை. இது தேவையில்லாத மிகைப்படுத்தலாகும். தொடர்ந்து வரும் பந்திகளிலும் சூனியத்தால் நபி(ஸல்) அவர்கள் முடக்கப்பட்டதாகவும், வீழ்த்தப்பட்டதாகவும் சித்தரிக்கின்றார். இது ஹதீஸில் கூறப்படாததைக் கூறி, மிகைப்படுத்தி, அதன் பின் அந்த ஹதீஸை மறுக்கும் தவறான அணுகுமுறையாகும். இப்படி மிகைப்படுத்தினால்தான் மறுக்கும் மனநிலைக்கு மக்களைக் கொண்டு வரலாம் என்பதற்காக, அவர் மறுக்கும் எல்லா ஹதீஸ்களிலும் இந்த மிகைப்படுத்தும் தவறான போக்கைக் கைக்கொள்கின்றார்.
இறைவனால் தேர்வு செய்யப்பட்டவரையே முடக்கிப் போட்டார்கள் என்றால் அன்று எத்தகைய விளைவுகள் ஏற்பட்டிருக்கும்?
நம்மைப் போன்ற மனிதராக இவர் இருந்தும் இவர் செய்து காட்டிய சில அற்புதங்களைக் கண்டு இறைத் தூதர் என்று நம்பினோம், இன்று அவரது மனநிலையையே பாதிக்கச் செய்து விட்டார்களே, இவரை விட யூதர்கள் அல்லவா ஆன்மீக ஆற்றல் மிக்கவர்கள்என்று அம்மக்களில் கணிசமானவர்கள் எண்ணியிருப்பார்கள்.
நபி(ஸல்) அவர்களுக்கு சூனியத்தால் ஏற்பட்ட பாதிப்பு அவர்களுக்கும், அவர்களது மனைவியருக்கும் மட்டும் தெரிந்த செய்தி என்று ஏற்கனவே நாம் விளக்கி விட்டோம். அத்துடன் சூனியம் செய்யப்பட்ட செய்தி அறியப்பட்ட பின்னர் கூட இந்த செய்தி மக்கள் மத்தியில் பரவி தீமை உருவாகி விடக் கூடாது என நபி(ஸல்) அவர்கள் விரும்பினார்கள்.
அத்தோடு நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்ட செய்தி அவர்களுக்கே இறுதியில்தான் தெரிந்தது. தெரிந்த உடனேயே பரிகாரமும் கிடைத்து விட்டது. இப்படித்தான் ஹதீஸ் கூறுகின்றது.
இப்படி இருக்க, நபி(ஸல்) அவர்களுக்கு யூதர்கள் சூனியம் செய்து நபியையே முடக்கிப் போட்டார்கள். எனவே, நபியை விட யூதர்களே ஆன்மீக ஆற்றல் பெற்றவர்கள் எனச் சிலர் எண்ணியிருப்பார்கள், இதை விமர்சித்திருப்பார்கள், இஸ்லாத்தை விட்டும் வெளியேறியிருப்பார்கள் என்று யூகத்தின் அடிப்படையில் கேள்வி எழுப்புவது எப்படி நியாயமாகும்?
அடுத்து, சூனியம் செய்த யூதர்களை ஆன்மீக ஆற்றல் மிக்கவர்கள் என்று எண்ணியிருப்பார்களாம்.
சூனியத்தை ஆன்மீகமாகவோ, அற்புதமாகவோ மக்கள் கருதவில்லை. அதைத் தீய சக்திகளின் துணையுடன் செய்யும் ஒரு தீய வேலையாகத்தான் மக்கள் கருதினர்.
இவர் குறிப்பிட்டுள்ள வசனங்களில்,
அவர்களின் உள்ளங்கள் அலட்சியம் செய்கின்றன. இவர் உங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு யார்? பார்த்துக்கொண்டே இந்த சூனியத்திடம் செல்கிறீர்களா?’ என்று அநீதி இழைத்தோர் மிகவும் இரகசியமாகப் பேசுகின்றனர் (21:3)
என்பதும் ஒன்றாகும்.
சூனியம் செய்வோரைச் சாதாரண மனிதர்களாகத்தான் அன்றைய மக்கள் கருதியுள்ளனர் என்பதை இந்த வசனம் தெளிவாக உணர்த்துகின்றது. எதையும் மிகைப்படுத்திப் பேசிப் பழகியதால், சூனியத்தையும் அற்புதம்-ஆன்மீகம் என்று மிகைப்படுத்தி, மறுக்கும் மனநிலைக்கு மக்களைக் கொண்டுவர முயற்சிக்கின்றார்.
இவர் செய்து காட்டிய அற்புதத்தை விட யூதர்கள் பெரிய அற்புதம் செய்து காட்டி விட்டார்கள். அற்புதம் செய்தவரையே மந்திர சக்தியால் வீழ்த்தி விட்டார்கள்என்று ஒருவர் கூட விமர்சனம் செய்யவில்லை. அதைக் காரணம் காட்டி ஒருவர் கூட இஸ்லாத்தை விட்டு விட்டு மதம் மாறிச் செல்லவில்லை.
எவ்வித சாதனத்தையும் பயன்படுத்தாமல் சீப்பையும், முடியையும் பயன்படுத்தி இறைத் தூதரை வீழ்த்தினார்கள்என்பது தவறான தகவல் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.
இந்தப் பந்தியிலும் சூனியத்தின் மூலம் நபியவர்கள் வீழ்த்தப்பட்டதாகவும் ஒருவரும் விமர்சிக்கவில்லை, இஸ்லாத்தை விட்டும் வெளியேறவில்லை. எனவே, சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் பொய்யானது என்கிறார்.
நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதால், இல்லறத்தில் ஈடுபடாமலேயே ஈடுபட்டதாக நினைத்தார்கள். இது அவர்களது மனைவிமாரைத் தவிர வேறு எவருக்கும் தெரியவராது. எனவே எவரும் விமர்சிக்கும் நிலையோ, இதைக் காரணம் காட்டி இஸ்லாத்தை விட்டும் வெளியேறும் நிலையோ ஏற்பட வாய்ப்பு இல்லை.
அடுத்து, தனக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்பது நபிக்கே இறுதியில்தான் தெரிய வந்தது. அப்படியிருக்க யூதர்கள் இவரை வீழ்த்தி விட்டனர் என மக்கள் விமர்சித்திருப்பார்கள், இவர் செய்த அற்புதத்தால் இவரை நம்பினால் யூதர்கள் இவரை விட பெரிய அற்புதத்தைச் செய்து விட்டார்களே என முஸ்லிம்கள் எண்ணி இருப்பர் என்ற வாதங்களும், யூகங்களும் அர்த்தமற்றவைகளாகும்.
இறைத் தூதர்களுக்கு எதிராக இத்தகைய அற்புத சக்தியை எதிரிகளுக்கு வழங்கி, நம்பிக்கை கொண்ட மக்களை அல்லாஹ் நிச்சயம் தடம்புரளச் செய்திருக்க மாட்டான் என்பதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டிருக்கவே முடியாது என்பதில் ஐயமில்லை.
எல்லா விடயத்திலும் யூகம் செய்தவர், தற்போது அல்லாஹ்வின் விஷயத்திலும் யூகம் செய்கிறார். அதுவும் பிழையான யூகம்!
முதலில் சூனியத்தை ஆன்மீகம்-அற்புதம் என்கிறார். சூனியத்தால் நபி(ஸல்) அவர்கள் முடக்கப்பட்டார்கள்-வீழ்த்தப்பட்டார்கள் என்று சித்தரிக்கின்றார். பின்னர், இறைத் தூதருக்கு எதிராக இத்தகைய அற்புத சக்தியை எதிரிகளுக்கு அல்லாஹ் வழங்கியிருக்க மாட்டான் என்ற யூகத்தை முன்வைக்கின்றார். முடிவை மட்டும் நபிகள் நாயகத்திற்கு சூனியம் வைக்கப்பட்டிருக்கவே முடியாது என்பதில் ஐயமில்லை என்று உறுதியாகக் கூறி விடுகின்றார். தனது கருத்தை மக்கள் மனதில் பதியவைக்க அவர் கையாளும் தந்திரங்களில் இதுவும் ஒன்று.
நபி(ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட இஸ்ரா மிஹ்ராஜ்என்ற அற்புதமே பலரைத் தடம்புரளச் செய்துள்ளது. இது குறித்து அவரே பேசியுமுள்ளார். அப்படி இருக்கும் போது இப்படி வாதம் செய்வது நியாயமா?
தஜ்ஜால்எனும் இஸ்லாத்தின் மிகப் பெரிய எதிரிக்கு அல்லாஹ் பல அற்புதங்களை வழங்குவான். அவன் வானத்தைப் பார்த்து, ‘மழை பொழிஎன்றால் மழை பொழியும், அவனை ஏற்ற மக்களின் ஊர்கள் செழிப்படையும், ஏற்காதோரின் ஊர்கள் வரண்டு செழிப்பற்றுப் போகும் என்றெல்லாம் ஹதீஸ்கள் கூறுகின்றன. இஸ்லாத்தின் எதிரிக்கு அல்லாஹ் அற்புதத்தை(?) வழங்க மாட்டான் என்று எப்படிக் கூறமுடியும்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஏதாவது சமாளிப்புப் பதில்களை அளிப்பது அவருக்குச் சாத்தியமானதே! எனினும், அவர் மறுக்க முடியாத அல்லாஹ்வின் விடயத்தில் அவர் செய்த யூகம் தவறானது என்பதை நிரூபிக்கத்தக்க சான்று ஒன்றை முன்வைக்க விரும்புகின்றேன்.
மூஸா(அலை) அவர்கள் தூர்சீனா மலைக்குச் செல்கின்றார்கள். ஹாரூன்(அலை) அவர்கள் சமூகத்திற்குத் தலைமை தாங்குகின்றார்கள். சாமிரி என்பவன் ஜிப்ரீல்(அலை) அவர்களின் காலடி மண்ணையும், நகைகளையும் ஒன்று சேர்த்து ஒரு காளைக் கன்றைச் செய்கிறான். அது மாடு கத்துவதைப் போன்று கத்துகின்றது.
அவன் அவர்களுக்குக் காளைக் கன்றின் உருவத்தை வெளிப்படுத்தினான். அதற்கு மாட்டின் சப்தமும் இருந்தது. உடனே, (மக்கள்) இதுதான் உங்கள் இரட்சகனும், மூஸாவின் இரட்சகனும் ஆகும். ஆனால், அவர் மறந்து விட்டார்என அவர்கள் கூறினர்.’ (20:88)
(குறிப்பு: இந்த வசனத்தில் சாமிரி காளைக் கன்றைச் செய்ததும், (மக்கள்) இதுதான் உங்கள் கடவுள், மூஸாவின் கடவுள்என்றனர் என்று குர்ஆன் கூறுகின்றது. பகாலூ’-அவர்கள் கூறினார்கள் என்று இருப்பதை கால’-அவன் கூறினான் என்ற அடிப்படையில் தவறான மொழியாக்கம் செய்துள்ளார்.)
அப்பொழுது மக்கள் காளைக் கன்றை வணங்குகின்றனர். ஹாரூன் நபி, ‘இதை வணங்காதீர்கள்என்று எவ்வளவோ எடுத்துச் சொல்கின்றார். மக்கள் அவரைக் கொலை செய்ய முற்படுகின்றனர். இந்த நிலையிலும் ஹாரூன் நபியால் இதற்கு மாற்றமாக அல்லது இதை மிகைக்கும் வண்ணம் அற்புதம் செய்து அவனைத் தோற்கடிக்க முடியவில்லை. இது குறித்து-கராமத் முஃஜிஸாபற்றிப் பேசும் போது இவரே விரிவாகவே பேசியுள்ளார்.
இங்கே எதிரிக்கு அல்லாஹ் அற்புதத்தை வழங்கியுள்ளான். நபிக்கு எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் பலரும் தடம்புரண்டு, நபியையே எதிர்க்கும் நிலைக்குச் சென்றுள்ளனர். இப்படி இருக்க, இறைத் தூதர்களுக்கு எதிராக இத்தகைய அற்புத சக்தியை எதிரிகளுக்கு வழங்கி நம்பிக்கை கொண்ட மக்களை, அல்லாஹ் நிச்சயமாகத் தடம்புரளச் செய்திருக்க மாட்டான் என்ற இவரின் யூகம் குர்ஆனுக்கு முரண்பட்டது. அல்லாஹ்வின் விடயத்தில் குர்ஆனுக்கு மாற்றமாக இப்படி யூகம் செய்யும் அதிகாரத்தை இவருக்கு வழங்கியது யார்?
இந்தத் தவறான யூகத்தினதும், வாதத்தினதும் அடிப்படையில் நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஹதீஸை மறுக்கும் அவரது வாதம் தவறானது என்பதை எவரும் எளிதில் உணரலாம்.
அடுத்து, சூனியம் வைக்கப்பட்டவர் அல்ல என்று குர்ஆன் கூறுகின்றது என்ற அடிப்படையில் அவர் வைக்கும் வாதத்தில் அவர் குர்ஆனுக்கும், அவரது சொந்த வாதங்களுக்கும் முரண்படும் விதத்தைத் தொடர்ந்து நோக்குவோம்.

இன்ஷா அல்லாஹ்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.