புனித பூமி பலஸ்தீனும் முதல் கிப்லா மஸ்ஜிதுல் அக்ஸாவும்

பலஸ்தீன் பூமியை இஸ்லாம் புனித பூமி என்று கூறுகின்றது. அங்குள்ள மஸ்ஜிதுல் அக்ஸா என்பது முஸ்லிம்களின் முதல் கிப்லாவாகும். இது குறித்த சில குறிப்புக்களை இந்த ஆக்கத்தில் முன்வைக்க விரும்புகின்றோம்.

01. அருள் வளம் பொருந்திய பூமி:
பலஸ்தீன் பூமி இஸ்ரவேல் சமூம் உருவாக முன்னரே பரகத் பொருந்திய பூமி என அழைக்கப்பட்டது.

“அகிலத்தாருக்கு எப்பூமியில் நாம் பாக்கியம் அளித்தோமோ, அதன்பால் அவரையும் லூத்தையும் (அனுப்பிக்) காப்பாற்றினோம்.” (21:71)
இந்த வசனத்தில் அகிலத்தாருக்காக அருள் பொழியப்பட்ட பூமி என பலஸ்தீன பூமி அழைக்கப்படுகின்றது.
“எனது சமூகத்தினரே! அல்லாஹ் உங்களுக்கு விதித்த பரிசுத்தமான இப்பூமியில் நுழையுங்கள். நீங்கள் புறமுதுகிட்டு ஓடாதீர்கள். அவ்வாறெனில், நீங்கள் நஷ்ட மடைந்தவர்களாகவே திரும்புவீர்கள் (என்றும் மூஸா கூறினார்.)” (5:21)
இந்த வசனமும் பலஸ்தீன பூமி புனித பூமியென்று கூறுகின்றது.
02. மிஃராஜின் பூமி:
நபி(ச) அவர்களது வாழ்வில் நடந்த மிகப்பெரும் அற்புத நிகழ்வே இஸ்ராவும் மிஃராஜுமாகும். நபி(ச) அவர்கள் ஓர் இரவில் மக்காவில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து பலஸ்தீனிலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு அற்புதமாக அழைத்துச் செல்லப்பட்டார்கள். இது “இஸ்ராஃ” என்று கூறப்படும். பின்னர் அங்கிருந்து ஏழு வானங்களையும் தாண்டி விண்ணுலகப் பயணத்திற்காக அழைத்துச் செல்லப் பட்டார்கள். இது “மிஃராஜ்” என்று கூறப்படும். அவர்களது இஸ்ராஃ, மிஃராஜுக்குரிய புனித பூமியாக பலஸ்தீனும் மஸ்ஜிதுல் அக்ஸாவும் அமைந்துள்ளது.

“(முஹம்மதாகிய) தனது அடியாரை மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, நாம் சுற்றுப்புறச் சூழலைப் பாக்கியம் பொருந்தியதாக ஆக்கிய அந்த மஸ்ஜிதுல் அக்ஸா வரை இரவில் அழைத்துச் சென்றவன் தூய்மையானவன். நமது அத்தாட்சிகளிலிருந்து அவருக்கு நாம் காண்பிக்கவே (இவ்வாறே செய்தோம்) நிச்சயமாக அவன் செவியுறுபவன்ளூ பார்ப்பவன்.” (17:1)
இந்த வசனத்திலும் மஸ்ஜிதுல் அக்ஸாவைச் சூழவுள்ள பகுதி அருள்வளம் பொழியப்பட்ட பூமியென்று கூறப்பட்டுள்ளது. சூழவுள்ள பகுதி பரகத் செய்யப்பட்டது என்றால் மஸ்ஜிதுல் அக்ஸா அதைவிட அதிகம் அருள் வளம் பொழியப்;பட்டது என்பதை எவரும் எளிதில் உணரலாம்.
03. இரண்டாவது மஸ்ஜித்:
அபூதர்(வ) அவர்கள் கூறுகின்றார்கள். “அல்லாஹ்வின் தூதரே! முதலாவது அமைக்கப்; பட்ட மஸ்ஜித் எது? என்று கேட்டேன். (மக்காவில் அமைந்துள்ள) மஸ்ஜிதுல் ஹராம் என்று நபி(ச) அவர்கள் கூறினார்கள். அடுத்து எது? எனக் கேட்ட போது (ஜெரூஸலத்தில் உள்ள) மஸ்ஜிதுல் அக்ஸா எனப் பதிலளித்தார்கள்.” (புஹாரி: 3425)

இந்த ஹதீஸின் அடிப்படையில் உலகில் அமைக்கப்பட்ட இரண்டாவது புனித மஸ்ஜிதாக பைதுல் முகத்தஸ் மஸ்ஜித் குறிப்பிடப் படுகின்றது.
04. மூன்றாவது புனித பூமி:
சிறப்பு என்ற அடிப்படையில் நோக்கினால் மஸ்ஜிதுல் அக்ஸா மூன்றாவது தரத்தில் அமைந்திருப்பதை ஹதீஸ்கள் உறுதி செய்கின்றன.

  1. முதல் அந்தஸ்த்தில் இருப்பது மஸ்ஜிதுல் ஹராம்.
  2. இரண்டாவது அந்தஸ்த்தில் இருப்பது மஸ்ஜிதுந் நபவி.
  3. மூன்றாவது அந்தஸ்த்தில் இருப்பது மஸ்ஜிதுல் அக்ஸாவாகும்.
05. முதலாவது கிப்லா:
முஸ்லிம்கள் மதீனாவுக்குச் சென்றதிலிருந்து சுமார் 16 அல்லது 17 மாதங்களாக மஸ்ஜிதுல் அக்ஸாவை நோக்கியே தொழுது வந்தனர். அதன் பின்னர்தான் இன்று நாம் முன்னோக்கித் தொழும் மஸ்ஜிதுல் ஹராம் பள்ளியை நோக்கித் தொழுமாறு ஏவப்பட்டனர்.

பராஃ இப்னு ஆஸிப்(வ) அவர்கள் அறிவிக்கின்றார்கள். “நபி(ச) அவர்கள் 16 அல்லது 17 மாதங்கள் பைத்துல் முகத்தஸ் நோக்கித் தொழுதார்கள்…..” (புஹாரி: 399)
இந்த வகையில் மஸ்ஜிதுல் அக்ஸா முஸ்லிம்களின் முதல் கிப்லாவாகத் திகழ்கின்றது.
06. இறைத் தூதர்களால் கட்டப்பட்ட மஸ்ஜித்கள்:
இன்று பூமியில் இருக்கும் மஸ்ஜித்களில் இறைத்தூதர்களால் கட்டப்பட்ட நான்கே நான்கு மஸ்ஜித்கள் மட்டுமே உள்ளன.

  1. மஸ்ஜிதுல் ஹராம்.
  2. மஸ்ஜிதுன் நபவி.
  3. பைதுல் முகத்தஸ்.
  4. மஸ்ஜிதுல் குபா
இவற்றில் மஸ்ஜிதுன் நபவி, குபா மஸ்ஜித் என்பன நபி(ச) அவர்களால் கட்டப்பட்டன. அந்த வகையில் இந்த மஸ்ஜித் சிறப்புப் பெறுகின்றது.
07. நன்மை நாடி பயணம் செய்ய அனுமதிக்கப்பட்ட மஸ்ஜித்:
“மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுன் நபவி, மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று மஸ்ஜித்களைத் தவிர (அதிக நன்மை நாடி) பயணம் மேற்கொள்ளக் கூடாது என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.”
அறிவிப்பவர்: அபூஹுரரா(வ)
ஆதாரம்: புஹாரி: 1189

நன்மையை நாடிப் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்ட மஸ்ஜித்களில் ஒன்றாக மஸ்ஜிதுல் அக்ஸா திகழ்வதை இந்த ஹதீஸ் உறுதி செய்கின்றது. ஏனைய பொதுவான மஸ்ஜித்களில் தொழுவதை விட மஸ்ஜிதுல் அக்ஸாவில் தொழுவது அதிக நன்மை பயக்கக் கூடியது என்பதையும் அறியலாம்.
08. முன்னறிவிப்புச் செய்யப்பட்ட மஸ்ஜித்:
நபி(ச) அவர்களது காலத்தில் இந்த மஸ்ஜித் அமைந்திருந்த பிரதேசம் முஸ்லிம்கள் வசமிருக்கவில்லை. இந்தப் பகுதி முஸ்லிம் களால் வெற்றிகொள்ளப்படும் என நபி(ச) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்கள்.

“தபூக் போரின் போது நபி(ச) அவர்களிடம் நான் சென்றேன். அவர்கள் ஒரு தோல் கூடாரத்தில் இருந்தார்கள். அப்போது மறுமை ஏற்படுவதற்கு முன்னர் ஆறு (முக்கிய) நிகழ்வுகள் ஏற்படும். அவற்றை எண்ணிக்கொள் என்று கூறிவிட்டு,
  1. எனது மரணம்
  2. பைதுல் முகத்தஸ் வெற்றி எனக் கூறினார்கள்.”
அறிவிப்பவர்: அவ்ப் இப்னு மாலிக்(வ) ஆதாரம்: புஹாரி- 3176
நபி(ச) அவர்களது இந்த முன்னறிவிப்பு உமர்(வ) அவர்களது ஆட்சிக் காலத்தில் நடந்தேறியது. இந்த முன்னறிவிப்பு நபி(ச) அவர்களது தூதுத்துவத்தின் உண்மைத் தன்மையையும், பைதுல் முகத்தஸ் முஸ்லிம்களது கையில் இருக்க வேண்டிய ஒன்று என்பதையும் உறுதி செய்கின்றது.
09. தஜ்ஜாலிடமிருந்து பாதுகாக்கப்பட்ட பகுதி:
தஜ்ஜாலின் பித்னா குறித்து நபியவர்கள் அதிகமதிகம் எச்சரிக்கை செய்துள்ளார்கள். அவ்வாறு எச்சரிக்கப்படும் போது பல செய்திகளையும் கூறிவிட்டு,

“நான்கு மஸ்ஜித்கள் (இருக்கும் பகுதி) தவிர மற்றைய பகுதியெல்லாம் அவனது அதிகாரம் வியாபித்திருக்கும். அந்த நான்கு மஸ்ஜித்களாவன, மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுர் ரஸுல், மஸ்ஜிதுல் அக்ஸா, தூர் என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.”
அறிவிப்பவர்: ஜுனாதா இப்னு அபூ உமையா(ரஹ்),
ஆதாரம்: அஹ்மத்: 24083-23683

(ஷுஅய்ப் அல் அர்னாஊத் இந்த அறிவிப்பை ஸஹீஹானது எனக் கூறியுள்ளார்கள்.)
எனவே, தஜ்ஜாலின் பித்னாவிலிருந்து பாதுகாப்புப் பெற விரும்புபவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய ஒரு இடமாகவும் இது திகழ்கின்றது.
10. மீண்டும் முஸ்லிம்கள் கையில் வரும் மஸ்ஜித்:
உலக முடிவின் போது நிச்சயமாக மஸ்ஜிதுல் அக்ஸாவும், பலஸ்தீன் புனித பூமியும் முஸ்லிம்களின் கைகளுக்கு வந்தே தீரும். இது குறித்தும் நபி(ச) அவர்கள் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள். அந்த இறுதி முன்னறிவிப்பு நடக்கும் முன்னர் மஸ்ஜிதுல் அக்ஸா கைமாறலாம். அந்த இறுதி முன்னறிவிப்பு பற்றியே இங்கே நாம் கூறுகின்றோம்.

பலஸ்தீன பூமியில் வைத்துத்தான் ஈஸா நபியால் தஜ்ஜால் அழிக்கப்படுவான். தஜ்ஜாலுடன் சேர்ந்து சத்தியத்திற்கு எதிராகப் போராடிய யூதர்கள் முஸ்லிம் போராளிகளால் தோற்கடிக்கப்படுவார்கள். இது குறித்து நபி(ச) அவர்கள் கூறும் போது,
“முஸ்லிம்கள் யூதர்களுடன் போர் செய்து யூதர்கள் கற்களுக்கும் மரங்களுக்கும் பின்னால் மறைந்திருந்து அந்தக் கல்லும் மரமும் முஸ்லிமே! அல்லாஹ்வின் அடியானே! இதோ எனக்குப் பின்னால் ஒரு யூதன் இருக்கின்றான். வந்து அவனைக் கொன்றுவிடு எனக் கூறும் நாள் வரும் வரை உலகம் அழியாது என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.” (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(வ), ஆதாரம்: முஸ்லலிம்: 2922-82)
அந்த மகத்தான நாள் வரும் வரை யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் மோதலும் முறுகலும் தொடர்ந்து கொண்டே இருக்கும். இதில் முஸ்லிம்கள் சந்திக்கும் இழப்புக்கள் ஷஹாதத் எனும் வீர மரணமாகவே அமையும். அந்த நல்ல நாள் வரும் வரை இந்தப் போராட்டம் தொடர்ந்து கொண்டேயிருக்கும். இதில் சில போது முஸ்லிம்களும் சில போது அவர்களும் வெற்றியையும் தோல்வியையும் சந்திக்கலாம். ஆனால் இறுதி வெற்றி முஸ்லிம்களுக்குத்தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.