சிரியா – ஒரு போராட்ட பூமி.

சிரியாவில் பஷ்ஷாரின் ஷியா படையும், ரஷ்யாவின் நாஸ்தீகப் படையும், அமெரிக்காவின் கூலிப் படைகளும் நிகழ்த்தி வரும் கொடூர போர்க்களத்தில் அப்பாவிகள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர். போர்க் களத்தில் சிறுவர்களையும், பெண்களையும் கொலை செய்வதைத் தடை செய்துள்ளது இஸ்லாம். ஆனால், இந்தப் போரில் கொத்துக் கொத்தாக குண்டு மழை பொழியப்பட்டு சிறுவர்கள் அப்பாவிகள் கொன்று குவிக்கப்படுகின்றனர். உலக ஊடகங்கள் இந்தக் கொடிய போரை முஸ்லிம்கள், ஷியா – சுன்னா பிரிவுகளாகப் பிரிந்து மோதிக் கொள்வதாக சித்தரிக்கின்றன. ஆனால் உண்மை அது மட்டுமல்ல. பஹ்ரைன், குவைத், சவூதி போன்ற எல்லா நாடுகளிலும் ஷியாக்களும் உள்ளனர். அங்கு வராத பிரச்சினைகள் ஏன் இங்கு இப்படி பூதாகரமானது என்பது கவனிக்கத்தக்கதாகும்.

நாட்டைத் துண்டாடிய நரிகள்:
ஹதீஸ்களில் ‘ஷாம்’ நாடு பற்றி சிறப்பித்துப் பேசப்பட்டுள்ளது. ஈஸா நபியின் வருகைக்குரிய இடமாகவும் (அந்திக் கிறிஸ்து) தஜ்ஜால் அழிக்கப்படும் பூமியாகவும் அது அமைந்துள்ளது. ‘ஷாம்’ என்றால் இன்றைய சிரியா, ஜோர்தான், லெபனான், பாலஸ்தீன் சட்டவிரோதமாக பலஸ்தீனில் உருவாக்கப்பட்ட இஸ்ரேல் என அனைத்துப் பகுதியையும் உள்ளடக்கியதாகும். நபியர்களது காலத்தில் இருந்து சுமார் 70 ஆண்டுகள் வரை இப்படித்தான் இருந்தது. ஸியோனிஸ சக்திகளாலும் பிரிட்டிஷ், பிரான்ஸ் நரித்தன நாடுகளாலும் ஷாம் துண்டாடப்பட்டு நான்காகக் கூறு போடப்பட்டன. பலஸ்தீனில் சட்டவிரோதமாக இஸ்ரேல் உருவாக்கப்பட்டது. ஏற்கனவே இருந்தது போல் ‘ஷாம்’ ஒரு பரந்த பூமியாக இருந்தால் இஸ்ரேலை உருவாக்கி இருக்க முடியாது. எனவே நான்காகக் கூறுபோட்டு ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனிப் பிரச்சினைகள் உருவாக்கப்பட்டது. இஸ்ரேல் பிரச்சினை பலஸ்தீனப் பிரச்சினையாக்கப்பட்டது.

வளைகுடாவில் இஸ்ரேலை உருவாக்கி தொடர்ந்து அந்தப் பகுதியில் அச்சநிலையைத் தக்கவைத்தால்தான், முஸ்லிம் நாடுகள் எப்போதும் தங்கள் தயவில் இருப்பார்கள் என அமெரிக்கா கணக்குப் போட்டது. இஸ்ரேல் அருகே உள்ள நாடுகள் ஒரே சிந்தனைப் போக்குடையதாக இருந்தால் இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவார்கள். எனவே, அவர்களுக்குள்ளேயே ஷியா-சுன்னா பிரச்சினை பூதாகரமாக்கப்பட்டது. ஷியா சிந்தனைப் போக்குடைய இன்றைய சிரியா ஜனாதிபதியின் தந்தை, இராணுவப் புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்தார். இந்தப் புரட்சியில் நிச்சயமாக இஸ்ரேல் மட்டும் முஸ்லிம் விரோத சக்திகளின் கை மறைந்திருக்கும்.

லெபனானில் ‘ஹிஸ்புல்லாஹ்’ என்ற பெயரில் இயங்கும் ‘ஷியா ஆயுதக் குழு’ ஆயுத ரீதியில் வளர்க்கப்பட்டது. ஷியா-சுன்னா பிரச்சினை ஏற்கனவே உள்ள பிரச்சினை. ஷியாவை வளர்ப்பதன் மூலம் முஸ்லிம்கள் பலவீனப்படுத்தப்பட்டனர். உள்மோதலில் ஈடுபடவே நேரமும் வளமும் போதாது என்ற நிலையில், அவர்கள் இஸ்ரேலுக்கு எதிராகப் போராடப் போவதும் இல்லை. இந்த இருதரப்பு மோதலில் அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் நலம் பெற்றன.

ஷியா சிரியாப் படை ரஷ்யாவுடன் கூட்டுச் சேர்ந்தது. சவூதி சார்பு சுன்னா சிந்தனைப் போக்குடைய நாடுகள் அமெரிக்கா சார்பு நிலையை எடுத்தன. ஆக இந்தப் பிரிவின் மூலம் இரு ஆதிக்க சக்திகளும் ஆதாயம் அடைகின்றன. இஸ்ரேல் இடைஞ்சல் இல்லாமல் தன் வழியே பயணித்துக் கொண்டிருக்கின்றது.

உலக நாடுகளின் அசமந்தம்:
சதாமிடம் ரசாயன ஆயுதங்கள் இருப்பதாகக் கூறி ஈராக் மீது ஒரு அநியாயப் போர் நடத்தப்பட்டது. இங்கு தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் அப்பாவிகள் மீது பயன்படுத்தப்பட்டும் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை? ஈராக், குவைத்தை ஆக்கிரமித்த போது எடுக்கப்பட்ட நடவடிக்கை ஏன் சிரியா மீது தொடுக்கப்படவில்லை? உண்மையில் சிரியா பிரச்சினை தீரக்கூடாது என்பதுதான் அமெரிக்கா, ரஷ்யா, ஐ.நா. ஏன் சில முஸ்லிம் நாடுகளின் மனநிலையும் அதுதான்.

அரபு வசந்தம்:
முஸ்லிம் நாடுகளில் அரபு வசந்தம் எனும் பெயரில் சூறாவளி உருவாக்கப்பட்டது. அகீதாவுக்கு முரணான சில இஸ்லாமிய அமைப்புக்கள் அதை ஊக்குவித்தன. இதன்மூலம் சில ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்தன. ஆனால் எந்த நன்மையும் ஏற்படவில்லை. இந்தத் தொடரில் தான் சிரியாவிலும் புரட்சி உருவானது. அந்தப் புரட்சி அடக்கப்பட்டது. அதன் எதிரொலியாக சிரியாவில் ஆயுதப் போராட்டம் வெடித்தது. சிரியாவின் அலெப்போ பகுதி புரட்சியாளர்களால் கைப்பற்றப் பட்டது.

இந்த மாற்றம் தொடர்ந்தால் சிரிய புரட்சியாளர்கள் நிச்சயமாக அமெரிக்கா, ரஷ்யா சார்புடையவர்களாக இருக்க மாட்டார்கள். எனவே அமெரிக்கா, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை உள்ளே களமிறக்கியது. அவர்கள் உள்ளே சென்று கிலாபத்தை அறிவித்தனர். அதை ஏற்காதவர்களை எதிரிகளாக்கினர். போராட்டக் குழுக்களுக்கிடையே மோதல் வெடித்தது. இதனால் சிரியாவுக்கு இலாபமானது. போராட்டக் குழுக்களை அமெரிக்கா ஊக்குவிக்க, சிரிய இராணுவத்திற்கு ரஷ்யா உதவி செய்ய எல்லா திசைகளிலும் செத்து மடிவது எமது சமூகம்தான். ஹதீஸ்களைப் பார்க்கும் போது சிரியா பிரச்சினை ஓயாது! அங்கு போராட்டம் தொடரும் போலுள்ளது. சிரியாவின் ‘அல்மல்மஹதுல்குப்ரா’ என்று ஹதீஸ்கள் கூறும் அவலங்கள் நிறைந்த ஒரு பெரிய போக்கு நடக்கும். சிரியாவுக்கு எதிராக நடக்கும் மிகப்பெரிய ஒரு போரில் சிரிய மக்களுக்கு உதவி செய்ய மதீனாவில் இருந்து ஒரு படை செல்லும். அந்தப் போரில் 1/3 பகுதியினர் தப்பி ஓடுவார்கள். 1/3 பகுதியினர் உயிர்த் தியாகம் செய்வார்கள். 1/3 பகுதியினர் வெற்றி இலக்கை அடைவார்கள் என்றெல்லாம் ஹதீஸ்கள் கூறுகின்றன.

சிரியாவுக்கு நற்செய்தி:
நபி(ச) அவர்கள் ஷாமுக்கு நற்செய்தி உண்டாகட்டும் என மூன்று முறை கூறினார்கள். காரணம் கேட்டபோது ஷாமுக்கு மேலே அல்லாஹ்வின் மலக்குகள் தமது இறக்கைகளை விரித்துள்ளனர் என்று கூறினார்கள். (திர்மிதி)

‘நீங்கள் பல குழுக்களாகப் பிரிந்து போராடுவீர்கள். ஈராக்கில் ஒரு படை, யமனில் ஒரு படை, ஷாமில் ஒரு படை என நபி(ச) அவர்கள் கூறியபோது ‘அப்போது நான் இருந்தால் எந்தப் படையுடன் சேர்ந்து கொள்ள வேண்டும்?’ எனக் கேட்டபோது ஷாமின் படையுடன் சேர்ந்துகொள் என்று நபி(ச) அவர்கள் கூறினார்கள்.’ (ஹாகிம், அஹ்மத்)

‘ஷாம்வாசிகளின் நிலை சீர்கெட்டு விட்டால் உங்களில் எந்த நன்மையும் இல்லை என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.’ (திர்மித், அஹ்மத்)

‘இவ்வாறு சிரியா சிறப்பிக்கப்பட்டுள்ளது. சிரியா மக்கள் போராட்டத்தின் மூலம் புடம் போடப்படுகின்றனர். போர்க் களத்து நிலைமைகள் அவர்களின் ஈமானிய பலத்தைப் பறைசாட்டுகின்றன.’

ஒரு சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். மயக்க மருந்து இல்லை. அவனுக்கு அறுவை சிகிச்சை நடைபெறுகின்றது. வலியைத் தாங்க அவன் குர்ஆனை ஓதுகின்றான்.

ஒரு சிறுமி மூச்சுத்திணறலின் போது ஒட்சிசன் கருவியை தனது தங்கைக்கு சுவாசிக்கக் கொடுத்து விட்டு தன் உயிரை அர்ப்பணிக்கிறாள். பசியோடு இருக்கும் ஒரு குழந்தை உணவு உண்டு கொண்டிருக்கிறது. அவனை ஒருவர் போட்டோ பிடிக்கும் போது தனது கையில் உள்ள உணவை அவருக்கு நீட்டுகின்றது அக்குழந்தை.

ஒரு தந்தை அழுகிறார். மூன்று வயது மதிக்கத்தக்க மகன் தந்தையைப் தடவி ஆறுதல் சொல்கிறான். ஒரு வீடு உடைந்து அதில் இருந்து ஒரு பெண் வருகிறாள். முழு ஆடையுடன் வருகிறாள். ஆண்கள் சிலர் அவளுக்கு உதவ முன்வரும்போது அந்நிலையிலும் அந்நிய ஆண்கள் தன்னைத் தொடுவதை விரும்பாத அவள் எனக்கு ஒன்றும் இல்லை என கைகளால் சைகை செய்து அவர்கள் தன்னைத் தொடுவதைத் தடுக்கிறாள்.

இப்படியான ஈமானியக் காட்சிகள் தொடர்ந்து வந்து கொண்டுள்ளன. இதுதான் சிரியாவுக்கான சுபச்செய்தியாகும். அந்த மக்களின் ஈமானிய பலத்திற்கும் ஈடேற்றத்திற்குமாக அல்லாஹ்விடம் பிரார்த்திப்போமாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.