குழந்தைகளின் ஆளுமை விருத்திக்கு அண்ணல் நபியின் அழகிய வழிகாட்டல் (தொடர்-1)

இஸ்லாமிய நெறியில் குழந்தை வளர்ப்பு எனும் போது அவர்களது லௌகீக நலன் நாடிய ஆளுமைகள் மட்டுமன்றி, அவர்களின் ‘ஹிதாயத்’ எனும் ஆன்மிக ஆளுமை விருத்தியும் நோக்கமாகக் கொள்ளப்படும். இந்த வகையில் குழந்தைகளின் ஆன்மிக-லௌகீக முன்னேற்றத்திற்கு நபி(ஸல்) அவர்கள் கொடுத்த முக்கியத்துவம், அதற்காக அவர்கள் காட்டிய வழிமுறைகளை இங்கே சுருக்கமாகத் தொகுத்துத் தர விரும்புகின்றோம்.

1. பிரார்த்தனை:
நபி(ஸல்) அவர்கள் தமது எதிரிகளின் குழந்தைகளின் எதிர்கால முன்னேற்றத்திற்காகக் கூடப் பிரார்த்தனை செய்துள்ளார்கள். இது எதிர்கால சந்ததிகளின் சீர்திருத்தத்திற்கு அவர்கள் வழங்கிய முக்கியத்துவத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

நபி(ஸல்) அவர்கள் தாயிப் நகருக்குப் பிரச்சாரத்திற்குச் சென்ற போது, அம்மக்கள் நபி(ஸல்) அவர்களைத் துரத்தித் துரத்தித் தாக்கினர். நபி(ஸல்) அவர்களின் பொன்னான மேனியில் ஏற்பட்ட காயங்களிலிருந்து வடிந்த இரத்தத்தால் அவர்களின் பாதணிகள் தோய்ந்து போகும் அளவுக்குத் தாக்கப்பட்டார்கள்.
அப்போது அவர்கள் செய்த பிரார்த்தனை உருக்கமானதாகும். அப்போது அல்லாஹ்தஆலா நபியவர்கள் விரும்பினால் அந்த மக்களை அழித்து விட மலைக்குப் பொறுப்பான மலக்கை அனுப்பினான்.
எனினும் நபி(ஸல்) அவர்கள்;
‘இவர்கள் இல்லாவிட்டாலும் இவர்களின் சந்ததிகளில் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் அவன் ஒருவனை மட்டும் வணங்குபவர்கள் உருவாக வேண்டும் என்றே நான் விரும்புகின்றேன்’ எனக் கூறினார்கள்.

தனது எதிரிகளின் குழந்தைகள் கூட அல்லாஹ்வை மட்டும் வணங்குபவர்களாக உருவாக வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்துள்ளார்கள். நாம், ‘நமக்குச் சந்ததி தேவை!’, ‘எனக்குப் பேரப்பிள்ளை தேவை!’, ‘எனக்கு ஆண் பிள்ளை தேவை! என்றுதான் ஆசைப்படுகின்றோம்; அதற்காகத்தான் பிரார்த்திக்கின்றோம்; நேர்ச்சை செய்கின்றோம். என்றாவது, ஒரு நாளாவது ‘அல்லாஹ்வுக்கு இணை வைக்கக் கூடாது!’, ‘அவன் ஒருவனை மட்டுமே வணங்கும் சந்ததி தேவை!’ என்று பிரார்த்தித்துள்ளோமா? எனச் சற்று சிந்தித்துப் பாருங்கள்!
நபி(ஸல்) அவர்கள் குழந்தையின் உருவாக்கம் ஷைத்தானியத்திலிருந்து உருவாகாமல், ஆன்மிகத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் என்று வழிகாட்டினார்கள்.
உங்களில் ஒருவர் தன் மனைவியிடம் தாம்பத்தியத்திற்காகச் சென்றால்;

بسم الله اللهم جنبتا الشيطان وجنب الشيطان مارزقتنا

‘பிஸ்மில்லாஹ்! ஜன்னிப்னஷ் ஷைத்தான வஜன்னிபிஷ் ஷைத்தான மா ரஸக்தனா’
பொருள்:- எம்மை விட்டும், எமது (இந்த உறவின் மூலம்) எமக்கு நீ வழங்கும் குழந்தையை விட்டும் ஷைத்தானைத் தூரப்படுத்துவாயாக!’ என்று ஓதினால் அவர்களுக்குக் கிடைக்கும் குழந்தையை ஷைத்தான் அடைய மாட்டான் என்று கூறினார்கள்.
இந்த துஆவை ஓதி எமது சந்ததிகளை ஆன்மிகத்தின் அடித்தளத்தில் உருவாக்கினோமா? அல்லது ஷைத்தானின் அடிப்படையில் உருவாக்கினோமா? என்பதை அனைவரும் ஒரு முறை சிந்தித்துப் பார்ப்பது சிறந்ததாகும்.
கருவறைக் குழந்தைக்கும் துஆ:
கருவில் குழந்தை நீர்த் துளியாக இருக்கும் போதே நபி(ஸல்) அவர்கள் அதற்காகப் பிரார்த்தித்துள்ளார்கள்.

அபூதல்ஹா(ரழி) அவர்கள் பயணத்தில் இருக்கும் போது அவரது குழந்தை மரணித்து விட்டது. அவர் வீட்டுக்கு வந்ததும், அவரது மனைவி மரணச் செய்தியைக் கூறாது, அவருக்கு உணவளித்து, அன்று இல்லறத்திலும் ஈடுபட்டனர். ஈற்றில் மரணச் செய்தியைக் கூறினார்கள். இது குறித்து அபூதல்ஹா நபி(ஸல்) அவர்களிடம் கூறிய போது, ‘உங்கள் இருவரின் இரவிலும் அல்லாஹ் அருள் செய்வானாக!’ என்று பிரார்த்தித்தார்கள்.
நண்பரின் குழந்தை கருவில் உருவான போதே அதற்காகப் பிரார்த்தித்துள்ளார்கள். இந்தப் பிரார்த்தனையின் பலனை அவர் அடைந்தார் என்று வரலாறு கூறுகின்றது.
கருவறையிலிருந்தே கரிசணை ஆரம்பம்:
இன்று ‘சிறுவர் உரிமை’ பற்றிப் பலவாறு பேசுகின்றனர். குழந்தை கருவில் இருக்கும் போதே அதன் நலன் குறித்து நபி(ஸல்) அவர்கள் அக்கறை செலுத்தியுள்ளார்கள். இஸ்லாமிய சட்ட வரையறைகளும் இதை எமக்கு உணர்த்துகின்றன.

தண்டனையைத் தள்ளிப் போடல்:
ஒரு பெண் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்து அவள் கர்ப்பிணியாகவும் இருந்தால், குழந்தையின் நலன் நாடி அவளது தண்டனை தள்ளிப் போடப்படும்.

ஒரு பெண் தான் விபச்சாரம் செய்ததாகவும், அதனால் தான் கருவுற்றுள்ளதாகவும் கூறுகின்றாள். நபி(ஸல்), அவளுக்குத் தண்டனையளிக்காது ‘குழந்தையைப் பெற்று விட்டு வா!’ என்கின்றார்கள். பெண்ணின் பொறுப்புதாரியை அழைத்து, ‘இந்தப் பெண்ணுடன் நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டும்!’ என்றும் கூறுகின்றார்கள்.
அந்தப் பெண், குழந்தையைப் பெற்ற பின்னர் வந்த போது குழந்தை பால் மறந்ததன் பின்னர் வரச் சொன்னார்கள். குழந்தைக்குப் பால் மறந்து உரொட்டி உண்ணும் பருவத்தில் அந்தப் பெண் வந்த போது அவளுக்குத் தண்டனை அளிக்கப்பட்டது.
தாய் செய்த தவறுக்குத் தண்டனை அளிக்கும் போது, தவறுடன் சம்பந்தப்படாத குழந்தை பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதில் நபியவர்கள் காட்டிய அக்கறை இந்த ஹதீஸ் மூலம் தெளிவாகின்றது. அத்துடன் குழந்தையின் தாய்ப்பால் அருந்தும் உரிமைக்கு இஸ்லாம் கொடுத்த முக்கியத்துவமும் இங்கு தெளிவாகின்றது. ஆனால் இன்றைய சூழலில் ஒரு தாய் தவறு செய்து விட்டு தனது தவறுக்குக் கருவறையையே கல்லறையாக்கிக் குழந்தையைக் கொல்கிறாள். பெற்ற பிள்ளையைக் காட்டிலும், கழிவு நீர் ஓடும் காண்களிலும் வீசி எரிகிறாள். கழுத்தை நெறித்துக் கொல்கிறாள். கருணையின் உறைவிடமான கர்ப்பப் பைக்குள்ளேயே இப்படியும் கொடூரமா?
கடமைகளை நீக்குதல்:
இஸ்லாம் விதித்த கடமைகள் சிலவற்றைக் கூட குழந்தை நலன் நாடித் தாய்க்கு இஸ்லாம் நீக்கி விடுகின்றது. ஒரு பெண் கர்ப்பிணியாக இருந்து அல்லது பாலூட்டும் தாயாக இருந்து, தான் நோன்பு நோற்பதால் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படும் எனில் அவள் நோன்பை விட்டு விட இஸ்லாம் அனுமதித்துள்ளது. இவ்வாறே ஜமாஅத் தொழுகை நடக்கும் போது குழந்தைகளின் அழுகுரல் கேட்டால் நபி(ஸல்) அவர்கள் ஓதுவதைச் சுருக்கி விடுவார்கள் என்பதை ஹதீஸ் மூலம் அறிகிறோம்.

சலுகை அளித்தல்:
ஒரு பெண்ணை அவளது கணவன் முதல் இரு தலாக் கூறினால், அவளுக்கு இத்தாக் காலம் முடியும் வரை செலவு கொடுக்க வேண்டும். மூன்றாம் தலாக் கூறி விட்டால் செலவு கொடுக்க வேண்டியதில்லை. இருப்பினும் மூன்றாம் தலாக் கூறப்பட்ட பெண் கர்ப்பிணியாக இருந்தால், குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை அவளுக்கு அவன் வாழ்வாதாரம் அளிக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் சட்டமாகும். இது ‘சிறுவர் உரிமை’ கருவறையில் இருந்தே ஆரம்பிக்கின்றது என்பதையும், சிறுவர் நலனில் இஸ்லாம் எவ்வளவு அக்கறை செலுத்துகின்றது என்பதையும் தெளிவுபடுத்துகின்றது.

ஆணோ, பெண்ணோ குழந்தை என்பது அருளே!
சிலர் பெண் குழந்தையென்றதும் முகம் சுளிக்கின்றனர். குழந்தை ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அல்லாஹ்வின் மிகப் பெரும் அருள்தான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். குழந்தைப் பராமரிப்பில் ஆண்-பெண் பேதம் என்பது இருக்கவே கூடாது.

சிலர் ‘அதிக குழந்தை அபாக்கியம்!’ என எண்ணி, உருவான கருவையும் கலைத்து விடத் துடிக்கின்றனர். அல்குர்ஆன் குழந்தை பற்றிக்கூறும் இடங்களில் நற்செய்தி (19:7, 11:61, 16:59) என்றே கூறுகின்றது. எனவே, குழந்தைச் செல்வத்தைப் பாக்கியமாகப் பார்க்க வேண்டும். ஆண், பெண் பேதம் பார்க்கலாகாது.
நபிகளாரின் தஹ்னீக்:
நபி(ஸல்) அவர்கள் குழந்தைகள் விடயத்தில் காட்டிய அக்கறையைத் தெளிவுபடுத்தும் அம்சங்களில் இதுவும் ஒன்றாகும். தஹ்னீக் என்பது ஈத்தப்பழம் அல்லது இனிப்பான ஒரு பொருளை வாயில் மென்று மென்மைப்படுத்தி பிறந்த குழந்தையின் வாயில் வைப்பதைக் குறிக்கும். நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு குழந்தைகளுக்குச் செய்து அவர்களின் பரகத்திற்காக துஆவும் செய்துள்ளார்கள். இவ்வாறு இனிப்பூட்டுவது குழந்தைகளுக்கு நலனளிக்கின்றது. என்றும் அவர்களின் தாங்கும் சக்தியை அதிகரிக்கின்றது என்றும் நவீன மருத்துவம் கூறுகின்றது.

விபச்சாரத்தில் பிறந்த குழந்தை என்றாலும் உரிமை பரிக்கப்படக்கூடாது
நபி(ஸல்) அவர்கள் குழந்தைகளின் உரிமை விடயத்தில் அவதானமாக நடந்துகொள்ளுமாறு ஏவியுள்ளார்கள். ஏற்கனவே நாம் குறிப்பிட்ட ஹதீஸில் விபச்சாரத்தில் பிறந்த ஒரு குழந்தை என்றாலும் அல்லாஹ்வின் தண்டனையை நிறைவேற்றுவதால் கூட தாயின் பாலைக் குடிக்கும் உரிமையை இழந்துவிடக் கூடாது என்பதிலே கரிசனை காட்டியுள்ளார்கள்.

இன்று சில தந்தையர்கள் தமது மனைவியரின் மரணத்தின் பின்னர் மறுமணம் புரிகின்றனர். இரண்டாவது மனைவி முதல் மனைவியின் குழந்தைகளைக் கொடுமைப் படுத்துவதைப் பார்க்கின்றோம். பூனையைக் கொடுமைப்படுத்திய பெண் நரகம் சென்றாள் எனக் கூறும் மார்க்கத்தில் இருந்துகொண்டு தாயில்லாக் குழந்தைகளை அதுவும் தனது கனவனின் குழந்தைகளைக் கொடுமை செய்யும் பெண்ணின் நிலை என்னவாகும் என்பதை இத்தகையவர்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
அகீகா வழங்குதல்:
குழந்தையின் ஆன்மீக ஆளுமையையும் அல்லாஹ்வின் அருளையும் பெற அகீகா எனும் விருந்தோம்பல் வழி செய்கின்றது.

நாம் ஜாஹிலிய்யாக் காலத்தில் குழந்தை பிறந்தால் ஆட்டை அறுத்து அதன் இரத்தத்தைக் குழந்தையின் தலையில் பூசுவோம். இஸ்லாம் வந்த பின்னர் ஆட்டை அறுத்துப் பகிர்வோம். குழந்தையின் தலையை மழித்து அதற்கு குங்குமத்தைப் பூசுவோம் என அபூபுரைதா (ரழி) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே, குழந்தை பிறந்து 7ம் நாளில் ஆட்டை அறுத்து விருந்து வழங்குதல் அல்லது மாமிசத்தைப் பகிர்தல் நபிவழியாகும்.
‘ஒவ்வொரு குழந்தையும் ஆகீகாவுக்கு அடகு வைக்கப்பட்டுள்ளது. ஏழாம் நாளில் அதற்காக அறுக்கப்பட்டு தலை மழிக்கப்படும். குழந்தைக்குப் பெயர் சூட்டப்படும்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மதி, நஸஈ)
எனவே அகீகா வழங்கி அல்லாஹ்வின் அருளைப் பெறுவதும் குழந்தை வளர்ப்புடன் சம்பந்தப்பட்டதாகும்.
அழகிய பெயர் சூட்டல்:
குழந்தைகளுக்குச் சூட்டப்படும் பெயர்கள் அழகானதாக இருக்க வேண்டும். நல்ல அர்த்தம் கொண்டதாகவும், அசிங்கமான உச்சரிப்பு அற்றதாகவும் இருக்க வேண்டும்.

குழந்தைகளின் பெயர்கள் வித்தியாசமாக அமைந்து விட்டால் அதுவே அவர்களுக்குப் பட்டப் பெயராக மாறி விடும். தனது தரக்குறைவான பெயரைக் கூறும் போதே அவன் கூனிக் குறுகிக் குற்ற உணர்வுடன் வாழும் நிலை உருவாகும். எனவே பெயர் அழகாகவும், நல்ல அர்த்தமுடையதாகவும், எடுப்பாகவும் இருக்க வேண்டும்.
நபிமார்களின் பெயர்களைச் சூட்டுங்கள். உங்கள் பெயர்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது ‘அப்துல்லாஹ்’, ‘அப்துர்ரஹ்மான்’ என்பதாகும். ஹாரிஸ் – حارث உழைப்பாளி, ஹும்மாம் – حمام முயற்சிப்பவன் என்பன மிகவும் உண்மையானவையாகும். ஹர்ப் (போர்), முர்ரா (கசப்பு) என்பன மிகவும் வெறுக்கத்தக்கவையாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(இப்னு உமர்(ரழி) – அபூதாவூத், நஸஈ)

இவ்வாறே சில பெயர்களைக் குறிப்பிட்டு அந்தப் பெயர்களை வைக்க வேண்டாம் என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
எனவே குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும் போது விழிப்புடன் இருக்க வேண்டும். இன்று சிலர் தமது பிள்ளைகளின் பெயர் ஆங்கில உச்சரிப்புக்கு ளவலடந ஆக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆயினும் அதன் அர்த்தம் பற்றி அவர்கள் அலட்டிக்கொள்வதில்லை. ஆரம்ப காலத்தில் இருந்தது போல் நபிமார்களின் பெயர்களைச் சூட்டும் வழக்கமும் அருகி வருகின்றது. அவை பழைய பெயர்களாகப் பார்க்கப்படுகின்றன. இவ்வாறே முக்கிய ஸஹாபாக்களின் பெயர்கள் கூட பழைய பெயர் என்ற காரணத்தால் புறக்கணிக்கப்படுவதையும் அவதானிக்கலாம். இதனால் இஸ்லாமிய வரலாற்றை மறந்த சந்ததிகளாக எதிர்கால சந்ததியினர் மாறும் அபாயம் உள்ளது.
சிகை அலங்காரத்தில் கவனம் செலுத்துதல்:
நபி(ஸல்) அவர்கள் குழந்தை பிறந்து 7 ஆம் நாளில் அதன் தலைமுடி மழிக்கப்பட வேண்டும் என்று கூறுகின்றார்கள். இதன் மூலம் குழந்தையை விட்டும் தொல்லைகள் அகற்றப்படும் என்றும் கூறுகின்றார்கள். இவ்வாறான நிலையில் கைக் குழந்தைகளுக்கு மொட்டை அடிப்பது அதற்கு இராகத்தையும், சுகத்தையும் அளிக்கும்.

வளர்ந்த சிறுவர்-சிறுமியர் என்றால், ‘சிறுவர் தானே!’ என அவர்களின் சிகை அலங்காரத்தில் கவனம் செலுத்தாது இருக்க முடியாது. அவர்களின் தோற்றம் கோமாளித்தனமானதாகவோ, வெகுளித்தனத்தை வெளிப்படுத்துவதாகவோ அமைந்து விடக் கூடாது. இது அவர்களின் ஆளுமையைப் பாதிக்கும். தன்மானச் சிக்கலை உண்டுபண்ணும்.
இப்னு உமர்(ரழி) அவர்கள் இது குறித்துக் கூறும் போது, ‘நபி(ஸல்) அவர்கள் ‘அல்கஸஃ’ வைத் தடுத்தார்கள்’ என்று குறிப்பிட்டார்கள். ‘அல்கஸஃ என்றால் என்ன?’ எனக் கேட்ட போது, ‘சிறுவர்களின் தலையில் ஒரு பகுதியைச் சிரைத்து, மறுபகுதியை விட்டு விடுவதாகும்’ எனக் குறிப்பிட்டார்கள்.
(புகாரி, முஸ்லிம்)

பிள்ளைகளின் பெயரால் புனைப்பெயர் சூட்டல்:
ஒருவருக்கு அப்துல்லாஹ் என்றொரு குழந்தை இருந்தால், அவர் தன்னை அபூ அப்துல்லாஹ் என அடையாளப்படுத்திக்கொள்வதை இது குறிக்கும். இது குழந்தையிடத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

எனது பெயரால்தான் என் தந்தை அறியப்படுகின்றார் என அறியும் போது, தான் தவறு செய்தால் தனது குடும்பத்தின் பெயர் கெட்டு விடும் என்ற உணர்வை ஏற்படுத்தும். நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் கூட அவரது மகன் காசிமின் பெயரால் அபுல் காசிம் என அழைக்கப்பட்டுள்ளார்கள்.
அபூ ஷுறைஹ்(ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்;
‘தாம் வெளியூரில் இருந்து நபி(ஸல்) அவர்களைச் சந்திப்பதற்காகத் தமது தூதுக்குழுவினருடன் வந்திருந்த வேளை எனது கூட்டத்தினர் என்னை அபுல் ஹகம் (அறிவின் தந்தை) என அழைப்பதை நபி(ஸல்) அவர்கள் செவியுற்றார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் என்னை அழைத்து, ‘அல்லாஹ்தான் ஞானம் மிக்கவன். அவனிடமே அனைத்து ஞானங்களும் மீளும். எனவே, நீ உன்னை ‘அபுல் ஹகம்’ என்று புனைப் பெயர் சூட்டிக்கொள்ளாதே!’ என்றார்கள். அதற்கு நான், ‘அல்லாஹ்வின் தூதரே! எனது கூட்டத்தினருக்கு மத்தியில் ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் என்னிடம் வருவார்கள். நான் அளிக்கும் தீர்ப்பை இரு சாராரும் திருப்தியுடன் ஏற்பார்கள்!’ என்று கூறினேன். இது கேட்ட நபி(ஸல்) அவர்கள், ‘இது எவ்வளவு அழகான விடயம்!’ என்று கூறி விட்டு, ‘உனக்குக் குழந்தைகள் இருக்கின்றார்களா?’ எனக் கேட்டார்கள். ‘ஷுரைஹ், முஸ்லிம், அப்துல்லாஹ் என்று மூவர் உள்ளனர்!’ என்றேன். ‘அவர்களில் மூத்தவர் யார்?’ என நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான், ‘ஷுரைஹ்!’ என்றேன். ‘அப்படியாயின் நீ அபூஷுரைஹ்!’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அபூதாவூத்)

எனவே, குழந்தைகளின் பெயரைக் கொண்டு தந்தை ‘அபூ’ என்றும், தாய் ‘உம்மு’ என்றும் அழைக்கப்படுவது குழந்தைகளுக்கும் குடும்பத்திற்குமிடையில் நெருக்கத்தை உண்டுபண்ணுவதுடன் அவர்களிடத்தில் பொறுப்புணர்ச்சியையும் ஏற்படுத்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.