குழந்தைகளின் ஆளுமை விருத்திக்கு அண்ணல் நபியின் அழகிய வழிகாட்டல் (தொடர்-4)

சிநேகம் கொள்ளுதல்:
பெரியவர்களிடமிருந்து அறிவையும், ஒழுக்கத்தையும், சமூகப் பண்பாட்டையும் பெற்றுக்கொள்ளும் விதமாகச் சிறுவர்கள் பெரியவர்களுடன் சினேகம் கொள்ளும் உரிமையைப் பெற்றுள்ளனர். இளம் பிராயத்தினருடன் சமூக அந்தஸ்த்துப் பெற்ற பெரியவர்கள் நெருக்கமாகப் பழகும் போது அவர்கள் மகிழ்வடைகின்றனர். அதைத் தமக்குக் கிடைத்த கௌரவமாகக் கருதுகின்றனர். தாமும் சமூகத்தில் மதிக்கத்தக்க பிரஜையாக மாறிவிட்டதாக உணர்கின்றனர். இந்த வகையில் சமூக-சமயப் பெரியவர்கள் சிறுவர்களுடன் சிநேகம் கொள்வது அவர்களது ஆளுமையை விருத்தி செய்யும். இந்த வகையில் நபி(ஸல்) அவர்கள் இளம் சிறுவர்களுடன் சிநேகமாகப் பழகியுள்ளார்கள். அவர்களது அறிவுக்கும், ஆற்றலுக்கும் ஏற்ப அவர்களுக்குப் போதனை செய்துள்ளார்கள். அனஸ், இப்னு உமர், இப்னு அப்பாஸ், இப்னு மஸ்ஊத் என நபி(ஸல்) அவர்களின் சினேகத்தைப் பெற்ற சிறுவர்கள் ஏராளம் உள்ளனர்.

ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களைத் தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பயணிக்கும் போது, ‘சிறுவனே! நான் உனக்குச் சில வார்த்தைகளைக் கற்றுத் தருகின்றேன். நீ அவற்றைப் பேணிக்கொள்! அல்லாஹ் உன்னைப் பாதுகாப்பான். நீ அவற்றைப் பேணிக்கொள்! அவனை உன் முன்னால் காண்பாய். நீ பிரார்த்தித்தால் அல்லாஹ்விடம் மட்டுமே கேட்க வேண்டும். நீ பாதுகாவல் தேடினால் அல்லாஹ் ஒருவனிடம் மட்டுமே பாதுகாவல் தேட வேண்டும். அறிந்துகொள்! மனித சமூகம் ஒன்றுசேர்ந்து உனக்கு உதவ முற்பட்டாலும் அல்லாஹ் உனக்கு எழுதியதைத் தவிர அதிகமாக எந்த உதவியையும் செய்திட முடியாது. அவ்வாறு மனித சமூகம் உனக்குத் தீங்கு செய்ய எண்ணி விளைந்தாலும் உனக்கென அல்லாஹ் விதித்ததைத் தவிர அதிகமாக எந்தத் தீங்கையும் அவர்களால் செய்து விட முடியாது. பேனைகள் உயர்த்தப்பட்டு விட்டன. ஏடுகள் காய்ந்து விட்டன’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இவ்வாறே ஒரு முறை பழ்ல் இப்னு அப்பாஸ்(ரழி) என்ற சிறுவர் நபியவர்களுடன் வாகனத்தில் இருந்தார். ஒரு பெண் நபி(ஸல்) அவர்களிடம் மார்க்க விடயம் தொடர்பாகக் கேள்வி கேட்டார். பழ்ல் அந்தப் பெண்ணையே பார்த்துக்கொண்டிருந்தார். நபி(ஸல்) அவர்கள் அந்த இளைஞரின் முகத்தை மறுபக்கம் திருப்பி விட்டார்கள் என்றெல்லாம் ஹதீஸ்களில் காண முடிகின்றது. இவை நபி(ஸல்) அவர்கள் இளம் ஸஹாபாக்களுடன் கொண்டிருந்த இறுக்கமான சினேகத்திற்குச் சான்றுகளாகத் திகழ்கின்றன.
சிறுவர்களின் உள்ளத்தை ஈர்க்கும் வார்த்தைகளைப் பயன்படுத்துதல்:
நபி(ஸல்) அவர்கள் சிறுவர்களுடன் நெருக்கமான சினேகம் கொண்டு அவர்களின் ஆளுமை விருத்திக்குப் பங்காற்றினார்கள். இவ்வாறே சிறுவர்களின் உள்ளத்தை ஈர்க்கும் மென்மையான, அன்பான வார்த்தைகளைப் பயன்படுத்துவார்கள்.

சிலபோது ‘யா குலாம்!’ (பையனேஃசிறுவனே) என அழைப்பார்கள். சிலபோது ‘அருமை மகனே!’ எனச் செல்லமாக அழைப்பார்கள். தனது பணியாளான அனஸ்(ரழி) அவர்களை நபி(ஸல்) அவர்கள் ‘யா புனைய!’ (எனது அன்பு மகனே! சின்ன மகனே! என்று அர்த்தம் தொணிக்கும் பதம்) கொண்டு அழைத்துள்ளார்கள்.
சிலபோது புனைப்பெயர் வைத்து அழைப்பார்கள். அதில் சிலபோது நகைச்சுவையும் இழையோடியிருக்கும். அலி(ரழி) அவர்கள் கோபத்தோடு மண்ணில் படுத்திருந்து மண் ஒட்டிய நிலையில் காட்சியளித்த போது, ‘யா அபத்துராப்!’ (மண்ணின் தந்தையே!) என அழைத்துள்ளார்கள். இவ்வாறு ஒரு நபித்தோழரை ‘இரண்டு காதுகளையுடையவரே!’ என்றும், மற்றும் ஒருவரை ‘துல்யதைன்!’ (இரு கைகளையுடையவரே!) என்றும் அவர் கூறி அழைத்துள்ளார்கள். சிலபோது ‘யப்ன அஹீ!’ (என் சகோதரனின் மகனே!) என்று அழைப்பார்கள். இவ்வாறு உரையாடும் போது அவர்கள் தயக்கமின்றிப் பெரியவர்களுடன் பழகும் பக்குவத்தை அடைவார்கள்.
சிறுவர்களின் உணர்வுகளை மதித்தல்:
சிறுவர்களின் உணர்வுகளை மதித்து நடக்கும் போது அவர்கள் தாம் சமூக அந்தஸ்த்தைப் பெறுவதாக உணர்கின்றனர். அவர்களது உரிமைகள் மறுக்கப்படுவதாக அவர்கள் உணர்ந்தால் அவர்கள் உள ரீதியாக ஊனமுறுகின்றனர். எனவே அவர்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் மதித்து நடக்க வேண்டும்.

ஒரு சபையில் நபி(ஸல்) அவர்களுக்குப் பால் கொடுக்கப்பட்டது. அதை அருந்தி விட்டு நபி(ஸல்) அவர்கள் வலது பக்கம் பார்த்தார்கள். அங்கே இப்னு அப்பாஸ் எனும் சிறுவர் இருந்தார். இடது பக்கம் அபூபக்கர்(ரழி) போன்ற பெரியவர்கள் இருந்தார்கள். அப்போது பால் கிண்ணத்தைப் பெரியவர்களுக்குக் கொடுக்க விரும்பிய நபி(ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களிடம் ‘பெரியவர்களுக்குக் கொடுப்பதற்கு எனக்கு அனுமதியளிப்பாயா!’ எனக் கேட்டார்கள். அவர் மறுத்த போது கிண்ணத்தை அவரது கையிலேயே கொடுத்தார்கள்.
சிறுவர்களின் உரிமைகளையும், உணர்வுகளையும் நபி(ஸல்) அவர்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து நோக்கியுள்ளார்கள் என்பதற்கு இந்த நபிமொழி நல்ல சான்றாகும்.
விளையாட அனுமதியுங்கள்!
சிறுவர்கள் விளையாட்டையும், வெளியில் பயணம் செல்வதையும் விரும்புவார்கள். குறிப்பாகப் பெற்றோர்களுடன் பயணிப்பதில் அவர்களுக்கு அலாதிப் பிரியம் உண்டு. எனவே இவற்றைப் பெற்றோரும், பெரியோர்களும் மதித்து நடக்க வேண்டும்.

சில பெற்றோரும், பெரியோரும் சிறுவர்கள் விளையாடுவதை அனுமதிக்க மாட்டார்கள். ‘திண்டால் உண்டால் சும்மா இருக்க வேண்டியது தானே!’ எனத் தமது நிலையிலிருந்து சிறுவர்களை நோக்குவர். சிறுவர்களை விளையாட அனுமதிப்பது அவர்களின் ஆளுமைகளை விருத்தி செய்யும்.
விளையாடும் போது சட்டத்திற்குக் கட்டுப்படவும், தோல்வியைத் தாங்கிக்கொள்ளவும், கூட்டு முயற்சியில் ஒருவருக்கொருவர் உறுதுணையாகச் செயல்படவும், தலைமை தாங்கவும், தலைமைக்குக் கட்டுப்படவும் அவர்கள் பழக்கப்படுகின்றனர்.
நபி(ஸல்) அவர்கள் ஆகுமான விளையாட்டுக்களை அங்கீகரித்துள்ளார்கள். அபூதல்ஹா(ரழி) அவர்களது மகன் அபூ உமைர் குருவிக் குஞ்சோடு விளையாடுவதை நபி(ஸல்) அவர்கள் தடுக்கவில்லை. ஆயிஷா(Ë) அவர்கள் திருமணத்தின் பின் நபி(ஸல்) அவர்களின் வீடு செல்லும் போது தனது விளையாட்டுப் பொருட்களையும் எடுத்துச் சென்றார்கள். அதை நபி(ஸல்) அவர்கள் அங்கீகரித்தார்கள். ஆயிஷா(Ë) அவர்களின் தோழிகள் அவர்களுடன் நபி(ஸல்) அவர்களின் வீட்டில் விளையாடுவதையும் அங்கீகரித்தார்கள். இந்த அங்கீகாரம் விளையாட்டின் அவசியத்தையும், அதன்பால் சிறுவர்களுக்குள்ள தேவையையும் உணர்த்துகின்றது.
இன்றைய சிறுவர்கள் தமது விளையாடும் உரிமையை இழந்து நிற்கின்றனர். ‘படி! படி!’ என்ற பெற்றோரின் திணிப்பு, பாடசாலை-பள்ளிக்கூடம்-டியூஷன் என அவர்களது இயல்பு வாழ்வு இயந்திரமயமாக்கப்பட்டுள்ளது. இது தவறாகும்.
படிப்பு என்பது களைப்பும் சோர்வும் தரும் ஒரு அம்சமாகும். அந்தக் களைப்பும் சோர்வும் நீங்கிப் புத்துணர்ச்சி பெற விளையாட்டு மிக அவசியமாகும். தொடர்ந்து சிறுவர்கள் படிப்பது உள்ளத்தைச் சாகடித்து விடும். அவர்களது கனவுகளை நசுக்கி விடும். இதன் பின் அவர்கள் படிப்பது ஒழுங்காக ஏறாது. எனவே இடைக்கிடையே அவர்கள் விளையாட வேண்டும். அந்த விளையாட்டுக்கள் அவர்களது உள்ளத்திற்கு ஊக்கமளிப்பதாகவும், உடலுக்கு உற்சாகம் அளிப்பதாகவும் இருக்க வேண்டும். இன்று எமது சிறுவர்களிடம் வளர்ந்து வரும் கம்ப்யூட்டர் கேம்ஸ், ஃபோன் கேம்ஸ் என்பன உடலுக்கு உற்சாகமளிக்காதவை. அவை பார்வைக்குச் சோர்வை அளிக்கும். ஓரளவு இந்த விளையாட்டுக்களை அனுமதித்தாலும் தொடர்ந்து மணிக்கணக்கில் இந்த விளையாட்டுக்களில் ஈடுபடுவது விளையாட்டின் எத்தகைய நன்மைகளையும் அளிக்காது என்பது கவனத்திற்கொள்ளத்தக்கதாகும்.
விளையாடும் சிறுவர்களை உற்சாகப்படுத்துதல்:
நபி(ஸல்) அவர்கள் சிறுவர்கள் ஒன்றுசேர்ந்து விளையாடும் போது அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்கள். அம்பெறிந்து விளையாடியவர்களைப் பார்த்து, ‘இஸ்மாயீலின் பிள்ளைகளே! நீங்கள் அம்பெறியுங்கள்! உங்கள் தந்தை அம்பெறிபவராக இருந்தார்’ எனக் குறிப்பிட்டார்கள். இதேவேளை மோசமான விளையாட்டில் ஈடுபடும் போது கண்டித்தும் உள்ளார்கள். அம்பெறிந்து விளையாடும் போது உயிருள்ள பிராணிகளை இலக்காக வைத்து எறிபவர்களைச் சபித்துள்ளார்கள். இந்த வகையில் விளையாட்டை ஊக்குவித்த நபி(ஸல்) அவர்கள் சிறுவர்கள் விளையாடும் போது பார்வையாளராக இருந்து அவர்களை ஊக்குவித்துமுள்ளார்கள். ஒரு முறை அனஸ்(ரழி) அவர்களை நபி(ஸல்) அவர்கள் ஒரு வேலைக்காகத் தேடிய போது அவர் சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தார். நபி(ஸல்) அவர்கள் அந்தச் சிறுவர்களுக்கு ஸலாம் கூறி அனஸ்(ரழி) அவர்களை ஒரு தேவைக்காக அனுப்பி விட்டு ஒரு நிழலில் அமர்ந்து அனஸ்(ரழி) வரும் வரை விளையாட்டை அவதானித்தார்கள். பெரியவர்களும், பெற்றோர்களும் தம்மைப் பார்த்துக்கொண்டிருப்பதாக அறிந்தால் சிறுவர்கள் இன்னும் அதிக உற்சாகத்துடன் விளையாடுவார்கள்.

பிரிக்கக் கூடாது:
குழந்தைகளையும், பெற்றோர்களையும் அல்லது அந்தக் குழந்தைகள் ஒட்டி உறவாடி வாழ்ந்தவர்களையும் பிரிப்பது கொடிய குற்றமாகும். பெற்றோரின் அரவணைப்பில் வாழ்வது என்பது குழந்தைகளின் உரிமையாகும். இன்று இந்த உரிமைகளும் தந்தைகளிடமிருந்து பிரிக்கப்பட்டு விட்டது.

வறுமை, சீதனம் சேர்த்தல், ஆடம்பர மோகம், பிறரைப் போல வாழும் ஆசை, பிறரின் தூண்டுதல் போன்ற பல காரணங்களால் பல தாய்மார்கள் பெற்றெடுத்த பிள்ளைகளைப் பிறரின் பொறுப்பில் போட்டு விட்டு வெளிநாடு செல்கின்றனர். தனது பிள்ளைகளை ஏக்கத்தில் தவிக்க விட்டு விட்டு பணத்திற்காகப் பிறரின் பிள்ளையை அரவணைத்து வளர்க்கின்றனர். தாய்ப்பாசம் இல்லாது வாழும் இந்த மலர்கள் செய்த குற்றம் என்ன?
இவ்வாறே தந்தையரின் வெளிநாட்டு வேலைவாய்ப்பால் தந்தையின் அரவணைப்பைக் குழந்தைகள் இழக்கின்றனர். போர்க் காலத்தில் கூட குழந்தைகளையும் பெற்றோர்களையும் பிரிப்பதை இஸ்லாம் தடுத்துள்ளது.
ஆடு-மாடு போன்ற கால்நடைகள், பறவைகள் என்பன போன்ற உயிரினங்களுக்குள் கூடத் தாய்க்கும், சேய்க்குமிடையில் பிரிவினையை உண்டுபண்ணுவதை இஸ்லாம் தடுத்துள்ளது. ஆடு-மாடுகளை விற்கும் போது தாயையும், கன்றையும் தனித்தனியாகப் பிரித்து விற்பதை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். குழந்தைகள் பெற்றோரை விட்டும் பிரிந்து வாழ்ந்தால் அவர்களது மன வளர்ச்சியும், ஆளுமை விருத்தியும் பாதிக்கப்படும். பின்வரும் ஹதீஸ் மூலம் இவ்விடயத்தில் இஸ்லாம் காட்டிய கரிசனையைக் கண்டுகொள்ள முடியும்.
பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும், இரு சகோதரர்களுக்குமிடையில் பிரிவினையை உண்டுபண்ணுபவனை நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். அதுமட்டுமன்றி சபையில் வரும் போது தந்தைக்கும், பிள்ளைக்குமிடையில் அமர்வதையும் நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள். தந்தை, தான் தனது குழந்தையின் இயல்புகளையும், பழக்கங்களையும், தேவைகளையும் அறிந்திருப்பார். குழந்தை சிலபோது பசியை உணரலாம்; தூங்க விரும்பலாம்; மலசல தேவையை வெளியிடலாம். சபையில் பெற்றோர் பிள்ளையிடம் இருக்கும் போது இந்தத் தேவைகளை உணர்ந்து செயல்படலாம். அந்தக் குழந்தைக்கு வழிகாட்டலாம். இதற்கு மாற்றமாகக் குழந்தைக்கும் பெற்றோருக்குமிடையில் அமர்வது பல சங்கடங்களை ஏற்படுத்தும்.
குழந்தை, தான் தனித்து விடப்பட்டது போன்ற உணர்வை அடையலாம். கூட்டம் எப்போது கலையும்? என்ற எதிர்பார்ப்பே குழந்தையிடம் இருக்கும். கூட்டம் கலைந்ததும் தந்தையைப் பிரிந்து விட்டால் என்ன செய்வது? என்ற அச்சம் அதை ஆட்கொள்ளும். அந்தக் கூட்டத்திலிருந்து அந்தப் பிள்ளை எந்தப் பயனையும் பெறாது. எனவேதான் தந்தைக்கும், அவரது குழந்தைக்கும் நடுவில் அவைகளில் அமர்வதை நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள். (இப்னுமாஜா)
எனவே, பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் அல்லது அந்தப் பிள்ளையை அன்புடன் அரவணைப்பவர்களுக்குமிடையில் பிரிவை ஏற்படுத்துவது குழந்தைகளின் ஆளுமை விருத்திக்கு ஆபத்தானது என்பதை அறியலாம்.
எனவே சிறுவர்களுக்கும், அவர்கள் அன்புடன் பழகுபவர்களுக்குமிடையில் பிரிவினையை உண்டுபண்ணுவதைத் தவிர்த்தல் வேண்டும். தனிப்பட்ட ரோசம், கோபத்திற்காகப் பெரியவர்கள் இளம் பிஞ்சுகளின் இதயத்தில் அம்பைப் பாய்ச்சக் கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.