உலகம் சுற்றிய பேரரசர் துல்கர்னைன்- 3 [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-22]

துல்கர்னைன் ஈமானிய உறுதியுடனும் மக்களின் எழுச்சியுடனும் அநியாயக்கார அரசனை எதிர்கொண்டார். இதன் மூலம் தனது நாட்டை அநியாயம் நிறைந்த ஆட்சியின் பிடியில் இருந்து விடுவித்தார். ஆனால் அண்டை நாடுகளில் அநியாயமும் அக்கிரமமும் தலைவிரித்துத் தாண்டவமாடும் போது நீதியையும் நியாயத்தையும் நேசிக்கும் இவரால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. எனவே துல்கர்னைன் அல்லாஹ்வின் உதவியுடன் தனது நாட்டை விடுவித்ததுடன் எதிரி அரசனையும் தோற்கடித்து அந்த எல்லைகளையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார். துல்கர்னைன் வெறுமனே தனது நாட்டின் விடுதலையை மட்டுமே நாடியிருந்தால் அவர் இத்துடன் தன் பணிகளை நிறுத்தியிருப்பார். துல்கர்னைன் நாட்டையும், அதிகாரத்தையும் விரும்பியிருந்தால் தனது நாட்டையும் அண்டை நாட்டையும் ஆள்வதே அவருக்குத் திருப்தியைக் கொடுத்திருக்கும். ஆனால், துல்கர்னைன் உண்மையான முஃமினான இருந்தார். ஒரு முஃமின் தனது மகிழ்வை இறைநம்பிக்கையில் தான் காண்பான். அவன் தனது வெற்றியை ஆட்சி அலங்காரத்திலோ அழியும் செல்வத்திலோ காணமாட்டான். அல்லாஹ்வின் பூமியெல்லாம் அநியாயமும் அக்கிரமமும் ஆட்சி செய்யும் போது தனது நாடு மட்டும் குழப்பங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டால் போதும் என்றும் அவன் நம்பமாட்டான்.

உலகின் இரு ஓரங்கள்
இவ்வகைகயில் தனது நாட்டில் நீதி நிலைநிறுத்தப்படுவது போலவே உலகெங்கும் உண்மை ஓங்கவேண்டும். அக்கிரமமும் அநியாயமும் அழிய வேண்டும் என்று அவர் நாடினார். எனவே, தனது படையுடன் உலகெங்கும் சுற்றித்திரிந்து அதன் கிழக்கிலும் மேற்கிலும் அல்லாஹ்வின் வார்த்தையை உயர்த்த முடிவு செய்தார். அத்தோடு தான் கனவில் ஏற்கனவே கண்டபடி உலகின் இரு ஓரங்களையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முடிவு செய்தார். சூரியன் அஸ்தமிக்கும் வேளையில் தனது படைகளை அவர் தயார் செய்தார். பயணத்திற்குத் தேவையான எல்லா வளங்களையும் அல்லாஹ் அவருக்கு வழங்கியிருந்தான். (நிச்சயமாக நாம் அவருக்குப் பூமியில் (அவருடைய) ஆட்சியை நிறுவ) வசதியளித்தோம்; ஒவ்வொரு பொருளிலிருந்தும் (தக்க பயனை அடையும்) வழியை அவருக்கு நாம் கொடுத்தோம். ஆகவே, அவர் ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார் என்று இதுகுறித்து குர்ஆன் கூறுகின்றது).

இவ்வாறு மேற்குத் திசையை நோக்கிப் பயணித்த அவர் ஒரு விசாலமான சம தரையை அடைந்தார். கண்ணுக்கெட்டும் தூரம்வரை அது பரந்திருந்தது. கறுப்புக் களிமண் அந்த இடத்தை மூடியிருந்தது. சூரியன் மறையும் போது அந்தக் காட்சியைப் பார்த்து சிந்தித்துக் கொண்டிருந்தார். சூரியனின் சிவப்புக் கதிர்கள் வானைப் பிரகாசிக்கச் செய்தன. சூரியன் கொஞ்சம் கொஞ்சமாகச் சாய்ந்து சென்றது. அது அப்படியே அந்த களிமண்ணால் மூடப்பட்ட சதுப்பு நிலப்பரப்புக்குள் நுழையப் போவது போல் தோற்றமளித்தது. அல்லாஹ்வின் அளப்பெரும் ஆற்றலைப் பற்றி சிந்தித்து அவனை அவர் தூய்மைப்படுத்தி புகழ்ந்தார்.

மேற்குத் திசையை கைப்பற்றினார்
அவர் கனவில் கண்ட உலகின் ஒரு கொம்பாகிய மேற்குத்திசையை அவர் கைப்பற்றினார். அங்கு வாழ்ந்த மக்கள் அல்லாஹ்வுக்கு இணைவைத்துக் கொண்டிருந்தனர். அவர்களைத் தண்டிப்பதா இல்லையா என்று முடிவு செய்யும் உரிமையை அல்லாஹ் அவருக்கு வழங்கினான். அவர் அந்த மக்களிலுள்ள அநியாயக்காரர்களைத் தண்டிப்பதாகவும், அவர்களிலுள்ள நல்ல மக்களுக்கு நன்மை செய்வதாகவும் முடிவு செய்தார். (திருக்குர்ஆன் 10:86&88).

அல்லாஹ் அவருக்கு மிக நுட்பமான அறிவையும் திறமைகளையும் வழங்கியிருந்தான். மேற்கைக் கைப்பற்றிய அவர் அங்கு பல நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தினார். அவை அத்தனைக்கும் முதலாக அவர் செய்தது அல்லாஹ்வை வணங்க ஒரு மஸ்ஜிதை நிறுவியதுதான். ஏனெனில், மஸ்ஜித்தான் அல்லாஹ்வின் அருள் இறங்கும் இடம். அதுதான் ஆன்மீக வாழ்வின் ஜீவ ஊற்று. எனவே, மஸ்ஜிதை முதலில் நிறுவினார். என்னதான் புரட்சி செய்தாலும் நல்ல அகீதாவும், நல்ல இபாதத்தும் இல்லாத புரட்சியில் அல்லாஹ்வினது அருளும் அபிவிருத்தியும் இருக்காது. எனவே சீரிய சிந்தனையையும் நேரிய இபாதத்தையும் வளர்க்கும் முக்கிய தளமாக மஸ்ஜித் அமைக்கப்பட்டது. 400 முழ நீளம் 200 முழ அகலம், 100 முழ உயரம் கொண்ட ஒரு கட்டிடமாக இது இருந்தது. 24 முழ உயரத்தில் அத்திபாரம் இடப்பட்டது. மிக நுட்பமான பொறியிலாளர்களின் மேற்பார்வையில் பணிகள் வெகுவிரைவாக நடந்தன.

கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. கூரை எழுப்ப வேண்டியிருந்தது. நாம் இன்று சிமெண்ட், தண்ணீர், மண் என்பனவற்றைக் கலந்து கான்கிரிட் போடும் முறையை அவர்கள் அறிந்திருக்கவில்லை. எனவே, கட்டப்பட்ட கட்டிடம் நிறைய மண்ணைப் போட்டார்கள். அதன்பின் ஈயத்தைக் கரைத்து மேலே ஊற்றினார்கள். ஈயம் காய்ந்ததன் பின்னர் கட்டிடத்தினுள் போட்ட மண்ணை எடுத்தனர். ஈயம் மட்டும் கூரையாக இருந்தது. அதன்பின்னர் அதற்கு வெள்ளைப் பூசி மெருகூட்டினர். பணிகள் முடியும் போது அங்கு காணப்பட்ட மிக அழகிய கட்டிடமாக அது காட்சியளித்தது. இவ்வாறு இறைநம்பிக்கையை போதித்து இறையில்லத்தையும் அங்கு அவர் நிறுவினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.