ஆற்றில் விடப்பட்ட மூஸா நபி! [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-27] | பிர்அவ்னின் உள்ளத்தில் அல்லாஹ் மாற்றத்தை ஏற்படுத்தினான்.

ஆற்றில் விடப்பட்ட மூஸா நபி!

பிர்அவ்ன் எகிப்தை ஆண்டுவந்த கொடுங்கோல் மன்னன் ஆவான். அவன் இஸ்ரவேல் சமூகத்தை அடிமைப்படுத்தி ஆட்சி செய்து வந்தான். இஸ்ரவேல் சமூகம் எழுச்சி பெற்றுவிடக் கூடாது என்பதற்காக குறிப்பிட்ட ஆண்டுகளில் பிறக்கும் ஆண் குழந்தைகளைக் கொன்று வந்தான். இஸ்ரவேல் சமூகத்தில் பிறக்கும் ஒரு ஆண் குழந்தையால் தனது ஆட்சிக்கு ஆபத்து வரும் என அவனுக்கு ஆரூடம் கூறப்பட்டதும் இதற்கு ஒரு காரணமாகும்.

இந்தக் காலகட்டத்தில் தான் மூஸா நபி பிறந்தார்கள். குழந்தை பிறந்த செய்தியை பிர்அவ்னின் படையினர் அறிந்தால் கழுத்தை அறுத்துக் கொன்று விடுவார்கள். என்ன செய்வது என்று ஏங்கினார் மூஸா நபியின் தாயார். அந்த தாய் மனம் ஆழ்ந்த துயரில் மூழ்கியது. இந்த சூழலில் தான் மூஸா நபியின் தாயார் உள்ளத்தில் அல்லாஹ் ஒரு செய்தியைப் போட்டான். குழந்தையை நீங்கள் உங்களுடன் வைத்திருக்கலாம். குழந்தைக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படும் என நீங்கள் அஞ்சினால் குழந்தையை ஒரு பெட்டியில் போட்டு அதை ஆற்றில் போட்டு விடுங்கள். அந்தக் குழந்தையை மீண்டும் அல்லாஹ் உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பான் என்பதுதான் அந்த செய்தியாகும்.

மூஸா நபியின் தாய் தண்ணீர் புகாவண்ணம் ஒரு பெட்டியைச் செய்து அதில் மூஸா நபியை வைத்து ஆற்றில் விட்டார்கள். அந்த பெட்டியை யார் எடுக்கிறார்கள் என்ற தகவலை அறிய மூஸா நபியின் மூத்த சகோதரியை கண்காணிப்பதற்காக அனுப்பினார்கள். பெட்டி ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. அது பிர்அவ்னின் கைக்குக்
கிடைத்தது. பிர்அவ்ன் குழந்தையைக் கொல்ல முற்பட்ட போது பிர்அவ்னின் மனைவி “வேண்டாம் கொன்று விடாதீர்கள். இந்தக் குழந்தையை நாம் நமது வளர்ப்புப் பிள்ளையாக எடுத்துக் கொள்வோம்” என்றாள். பிர்அவ்னின் உள்ளத்தில் அல்லாஹ் மாற்றத்தை ஏற்படுத்தினான். அவனும் சம்மதித்தான். குழந்தையை அரண்மனைக்கு எடுத்துச் சென்றனர். இப்போது குழந்தைக்குப் பால் கொடுக்க வேண்டும். பால் கொடுக்க தாய்மார்கள் அழைக்கப்பட்டனர். குழந்தை பசியால் கத்தினாலும் யாரிடமும் பால் குடிக்க மறுத்துவிட்டது. இது அல்லாஹ்வின் ஏற்பாடாகும். இதையெல்லாம் கண்ணுற்ற மூஸா நபியின் சகோதரி, “நீங்கள் சம்மதித்தால் இந்தக் குழந்தையைப் பாலூட்டிப் பராமரிக்கக் கூடிய ஒரு நல்ல குடும்பத்தை நான் காட்டித் தருகிறேன். அவர்கள் உங்கள் விஷயத்தில் நல்ல முறையில் நடப்பார்கள்” என்றாள்.

அரச குடும்பமும் சம்மதித்தது. ஆற்றில் போடப்பட்ட குழந்தை மீண்டும் மூஸா நபியின் தாயிடமே வந்து சேர்ந்தது. மூஸா நபியைக் கொல்ல நினைத்த பிர்அவ்னின் செலவிலேயே அவர் அவரின் தாயின் பராமரிப்பிலேயே வளர்க்கப்பட்டார். மூஸா நபி சகல கலைகளையும் கற்று மிகவும் வீரத்துடனும் ஆற்றல்களுடனும் வளர்க்கப்பட்டார்.

இந்த சம்பவத்தின் மூலம் அல்லாஹ்வின் முடிவை யாராலும் மாற்ற முடியாது என்பதை நாம் அறியலாம். அல்லாஹ் தான் நாடியதைச் செய்யும் ஆற்றல் மிக்கவன். இவ்வாறே மூஸா நபியின் தாயின் ‘தவக்குல்’ இறைவன் மீது பரம் காட்டும் உறுதியான நம்பிக்கையை அறியலாம். இவ்வாறே சந்தர்ப்ப சூழ்நிலையைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மூஸா நபியின் சகோதரியின் சாணக்கியத்தை நாம் அறியலாம். அல்லாஹ் நினைத்தால் கல்மனதையும் மாற்றுவான் என்பதை பிர்அவ்னின் மனமாற்றத்தை வைத்து அறியலாம்.

இவ்வாறு பல படிப்பினைகளைத் தரும் இச்சம்பவம் அல்குர்ஆனின் 28:7-13ல் காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.