அழைப்புப் பணியின் அவசியம் (தொடர்-7)

மாற்ற வேண்டியது மார்க்கத்தையா? மக்களையா?
இப்போது இன்னுமொரு சந்தேகம் எழலாம். தக்பீர் நெஞ்சில் கட்டினால் மக்கள் அடிக்கின்றனர், ஏசுகின்றனர் எனவே இந்த சின்ன விடயத்தை விட்டுக் கொடுக்கலாம் தானே? எங்கே கட்டினால் என்ன? இடத்தைக் கொஞ்சம் மாற்றிக் கொண்டால் என்ன குறைந்தா போகப்போகிறது? இப்படியும் சில அழைப்பாளர்கள் சிந்திக்கலாம்.

இஸ்லாமிய பிரச்சாரம் என்றால் மார்க்கக் கருத்திற்கேற்ப மக்கள் நடத்தை, சிந்தனை என்பவற்றை மாற்றுவதேயன்றி, மக்கள் நிலைக்கேற்ப மார்க்க முடிவுகளை மாற்றுவதல்ல என்பதை ஒவ்வொரு அழைப்பாளனும் அழுத்தமாக உள்ளத்தில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.
இத்தகைய சிந்தனைப் போக்கால் தான் முன்னைய வேதங்களில் மனித யூகங்கள் நுழைந்து அதன் தூய்மை கெட்டது. மார்க்க விடயத்தில் மாற்றம் செய்வது அது சிறிதாக இருந்தாலும் கூட கண்டிக்கத் தக்கதே! இதில் இஸ்லாம் யாருக்கும் எவ்வித உரிமையையும் வழங்கவில்லை, இதனைப்பின்வரும் வசனங்கள், நிகழ்ச்சிகள் மூலம் மிகத்தெளிவாக அறியலாம்.
“இன்னும் நேரான வழி இன்னதென்று தனக்குத் தெளிவானதன் பின்னர் எவர் (தம்முடைய) இத்தூதருக்கு மாறு செய்து, விசுவாசிகளின் வழியல்லாத (வேறு வழியான) தைப் பின்பற்றுகிறாரோ அவரை நாம், அவர் விரும்பிய (தவறான) வழியிலேயே திருப்பிவிடுவோம். (பின்னர்) அவரை நரகத்தில் புகுத்தி விடுவோம். அது சென்றடையும் இடத்தில் மிகக் கெட்டது”.
(4:115)

அறிந்த உண்மையை உதறித்தள்ளிவிட்டு மாற்று வழியில் செல்ல முடியாது என்பதை மேற்படி வசனம் தெளிவு படுத்துகிறது.
“அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் யாதொரு காரியத்தை முடிவெடுத்து விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் சுயமாக வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு விசுவாசியான எந்த ஆணுக்கும், எந்த பெண்ணுக்கும் உரிமையில்லை. (அதில்) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் மாறு செய்கிறாரோ அவர், பகிரங்கமாக வழிகேடாக திட்டமாக வழிகெட்டுவிட்டார். (33:36)
இஸ்லாம் கூறும் முடிவுகளில் மாற்றம் செய்ய எவருக்கும் எவ்வித உரிமையும் கிடையாது எனவும், அவ்விதம் செய்வது வழிகேடு என்பதையும் மேற்படி வசனம் உணர்த்துகின்றது.
மார்க்கத்தில் சின்ன மாறுதல் கூடச் செய்ய எவருக்கும் உரிமையில்லை என்பதையும், சுன்னாக்களை சில்றைகளாக்கக் கூடாது என்பதனையும், சின்ன விடயங்கள் கூட பிரச்சாரத்திற்குட்பட்டவையே என்ப தனையும் தெளிவுபடுத்தும் சில சம்பவங்களை இனிக் கவனிப்போம்.
1. பாராஃ இப்னு ஆஸிப் எனும் தோழருக்கு நபி(ஸல்) அவர்கள் உறங்கும் போது ஓத வேண்டிய ஒரு “துஆவை” கற்றுக் கொடுத்தார்கள். அதை அவர் திரும்பக் கூறும் போது “வநபிய்யிக” எனக் கூற வேண்டிய இடத்தை “வரஸூலிக” என மாற்றிக் கூறிய போது, “இல்லை” எனக் கூறிக் கண்டித்துவிட்டு “வநபிய்யிக” என்றே ஓத வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் திருத்திக் கொடுத்தார்கள். (ஆதாரம் : புகாரி 6311, 5025)
“நபி” என்பதை “ரஸூல்” என மாற்றியதைக் கூட நபி (ஸல்) அவர்கள் அனுமதிக்க வில்லை என இந் நபிமொழி தெளிவுபடுத்துகின்றது. இதன் மூலம் சுன்னாவில் ஒரு சிறு மாறுதலும் செய்ய அனுமதியில்லை என்பது தெளி வாகின்றது.
2. “நபி (ஸல்) அவர்கள் பெண்கள் பள்ளிக்குச் செல்ல அனுமதி கேட்டால் மறுக்காதீர்கள் எனக் கூற நான் கேட்டேன் என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள். இது கேட்ட (அவரது மகன்) பிலால் இப்னு அப்துல்லாஹ் அவர்கள் (காலம் கெட்டு விட்டதைக் காரணம் கூறி) “நான் அனுமதிக்கமாட்டேன்” எனக் கூறிவிட்டார். இது கேட்ட இப்னு உமர் பிலாலைக் கோபத்தோடு நோக்கி நெஞ்சில் அடித்துவிட்டு, “நான் நபி (ஸல்) அவர்களது ஹதீஸைக் கூறும் போது நீ அதனை மறுத்துப் பேசுகின்றாயா?” எனக் கேட்டுவிட்டு கடுமை யாகத் திட்டினார்கள். பின்னர் நான் உன்னுடன் பேசமாட்டேன் எனக்கூறிவிட்டு, அதே நிலையிலேயே மரணித்தார்கள்.
(புகாரி 865,873,5235 தாரமி 1278,1279, அபூதாவூத் 564 , இப்னு மாஜா 16, ஷரஹ் ஷஹீஹ் முஸ்லிம் பாகம் 4, பக்கம்161,141)
பெண்கள் தொழும் இடத்தைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு அவர்களது இல்லமே ஏற்றது என்று நபி (ஸல்) அவர்களே கூறியுள்ளார்கள். (அபூதாவூத் 563) அதிலும் குறிப்பாக வீட்டில் அவர்களுக்கெனத் தனி அறை இருப்பின் அதுவே நல்லது. என்றும் கூட கூறியுள்ளார்கள். (அபூ தாவூத் 566) பெண்களுக்கு கூட்டுத் தொழுகை கடமையில்லை. இவ்வளவு இருந்தும் கூட அனுமதி கேட்டால் மறுக்க வேண்டாம் என்று கூறியுள்ள ஒரு கூற்றை மறுத்த மைக்காக இப்படிக் கண்டிக்கப்பட்டுள்ளாரே! இன்று எத்தனை நபி வழிகள் எவ்வித நியாயமுமின்றி மறுப்புக்கும் எதிர்ப்புக்கும், கேலிக்கும் உள்ளாக்கப் படுகின்றன. இது போன்ற சில்லறை விடயத்திற்காக இப்படி ஆத்திரப் பட்டுள்ளாரே இப்னு உமர் அலி என்ன தீவிர வாதியா? குழப்பவாதியா? பிரிவினைவாதியா?.
3. அப்துல்லாஹ் இப்னு முஅப்பல்(ரழி) அவர்கள், விரலிடுக்கில் கல்லை வைத்துச் சுண்டி விளையாடிக் கொண்டிருந்த ஒருவரைக் கண்டு “அவரிடம் இவ்வாறு செய்யாதே! நபி (ஸல்) அவர்கள் இதனைத் தடுத்துள்ளார்கள். ஏனென்றால், இதனால் வேட்டையாடவோ, விரோதிகளை எதிர்க்கவோ முடியாது. இது உன் தோழனின் பல்லை உடைத்து விடலாம் அல்லது கண்ணைக் கெடுத்து விடலாம் எனக் கூறினார். மீன்டும் ஒரு முறை அதே மனிதரை அதே விளையாட்டில் ஈடுபட்டிருக்கக் கண்டபோது இதைத் தவிர்க்குமாறு நபி(ஸல்) அவர்கள் கூறிய ஹதீஸை நான் கூறியதன் பின்னரும் நீ அதைச் செய்கின்றாயே! நான் உன்னுடன் இனிக் கதைக்கவே மாட்டேன் எனக் கூறினார்.
(ஆதாரம் : இப்னு மாஜா (17), முஸ்லிம், பாடம் :கிதாபுஸ் ஸைத்)

இமாம் நவவி (ரஹ்) அவர்கள் மேற்படி ஹதீஸிற்கு விளக்கமளிக்கும் போது “பித்அத்” புரிவோர், பாவிகள் அறிந்து கொண்டே சுன்னாவைப் புறக்கணிப்போர் போன்றோரை நிரந்தரமாக வெறுப்பதற்கு மேற்படி நிகழ்ச்சியில் ஆதாரமுண்டு. மூன்று நாட்களுக்கு மேல் வெறுக்கக் கூடாது என்பது சுயமாக உலகாதாய காரணங்களுக்காக வெறுப்பதையே குறிக்கும் எனக் குறிப்பிடுகின்றார்கள். (ஷரஹ் ஷஹீஹ் முஸ்லிம் பாகம்: 13,பக்கம் 106)
ஒரு ஹதீஸை எவ்வித காரணமுமின்றி மீறிய ஒருவரை வெறுத்த நபித் தோழர் தீவிரவாதியா? அல்லது சில்லறைப் பிரச்சினையை பெரிது படுத்தியவரா?
4. மிஸ்ரிப்னு மர்வான் வெள்ளிக் கிழமை குத்பாவின் போது கையை உயர்த்திப் பிரார்த்திப்பதைக் கண்ட உமாரதிப்னுருவய்பா என்ற ஸஹாபி “இந்த இரு கைகளையும் அல்லாஹ் சபிப்பானாக! நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் இருக்கையில் துஆவின் போதோ அதல்லாத வேளையிலோ சுட்டுவிரலால் சைக்கினை செய்வதை விட அதிகமாகக் கையை உயர்த்துவதை நான் பார்த்ததே இல்லை” எனக் கூறி சைக்கினையும் செய்து காட்டினார். (ஆதாரம் : அபூதாவூத்)
இந்தச் சின்ன விஷயத்தைப் போய் இந்த மனிதர் பகிரங்கமாகக் கண்டித்துப் பெரிது படுத்தியுள்ளாரே! இந்த ஸஹாபி சில்லறைவிடயங்களைப் பெரிது படுத்தும் தஃவா அணுகுமுறை தெரியாத மனிதராகவல்லவா இருக்கிறார் என்று கூறப் போகிறார்களா?
5. (உம்றாவுடைய விடயத்தில்) இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் நபி மொழி ஒன்றை ஆதாரமாகக் கொண்டு ஒரு தீர்ப்பு வழங்கினார்கள். அதைக் கேட்ட சிலர், “அபூபக்கர், உமர்(ரழி) ஆகிய இருவரும் இதற்கு மாற்றமாகக் கூறுகிறார்களே” என்று வினவிய போது இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள், “உங்கள் மீது கல்மாரி பொழிந்து விடும்” என நான் பயப்படுகின்றேன். அல்லாஹ்வின் தூதர் கூறினார் என நான் கூறும் போது அபூபக்கர் கூறினார். உமர் கூறினார் என்கிறீர்களே எனக்கேட்டு இப்போக்கைக் கண்டித்தார்கள். (ஆதாரம் : அஹ்மத், தபராணி)
இது நபி வழி தான் எனத்தெரிந்த பின்னரும் அதற்கு மாற்றமாக சுய கருத்தை, சமூக நடத்தையை முன்வைப்பது சின்ன விஷயமா? அப்படி நபித்தோழர்கள் எவரேனும் கருதியதற்கான ஆதாரங்களைக் காட்ட முடியுமா? அவர்கள் அப்படிக் கருதவில்லையானால் இந்தக் கருத்து சுன்னத் வல் ஜமாஅத்தின் கருத்தாக இருக்க முடியுமா? வெற்றி பெற்ற கூட்டத்தின்கருத்துக்கு மாற்றமான ஒரு கருத்தைத் தமது பிரச்சாரத்திற்கும் அமைப்பிற்கும் அடிப்படையாகக் கொள்வது எம்மை எங்கே கொண்டு போய்ச் சேர்க்கும்? இவற்றையெல்லாம் சற்று சிந்தித்துப் பார்க்கக் கூடாதா? மார்க்கத்தின் ஏதேனும் ஒரு விடயத்தை சில்லறை என ஒதுக்கக் கூடாது எனக் கூறும் நபிமொழியைப் புறக்கணிக்கலாமா?
“உன்சகோதரனை இன்முகத்தோடு நோக்குவது போன்ற ஒரு நல்லறத்தைக் கூடக் குறைத்து மதித்து விடாதே”
அறிவிப்பவர் : அபுதர் (ரலி)
ஆதாரம் : முஸ்லிம்

இறுதியாக,
நபி வழிகள் எதுவாக இருந்தாலும் அது உயர்வாகவே நோக்கப்பட வேண்டும். நபிவழி மறுப்பு, எதிர்ப்பு, இழிவு என்பவற்றுக்குள்ளாக்கப்படக் கூடாது. சுன்னத்துத்தானே என அற்பமாக நாம் எண்ணவும் கூடாது. ஏனெனில் இது கூட நபிவழியை உரியமுறையில் மதிக்காத போக்கேயாகும்.

நபி வழியைச் செயல்படுத்துவது குழப்பமாகவோ, அதைப்பெரிது படுத்துவதாகவோ இருக்காது. அதை மறுப்பதும், செய்பவர்களை எதிர்ப்பதும் தான் குழப்பு வதாகவும் சமூக ஒற்றுமையைச் சிதைப்பதாகவும் இருக்கும்.
எனவே, சுன்னாவை சில்லறைப் பிரச்சினை என்போருக்கும், சுன்னாக்கள் நடைமுறைப்படுத்தப்படும் போது அதை செயல் படுத்துவோரை எதிர்த்து சமூக ஒற்றுமையைக் குழப்புவர்களுக்கும் இது விடயத்தில் தெளிவையும் நல்லறிவையும் வழங்கும் விதத்தில் எமது பிரச்சாரத்தை அமைத்துக் கொள்வோமாக.
நல்லதை ஏவினால் போதுமா?
அழைப்புப் பணியில் ஈடுபடுவோர் நல்லறங்களை மட்டும் ஏவினால் போதும் தீமைகளை அவர்கள் விலக்க வேண்டியதில்லை. நன்மையை ஏவினால் அதைச் செய்வோர் காலப் போக்கில் தீமைகளில் இருந்து தாமாகவே ஒதுங்கிக் கொள்வார்கள். வெளிச்சம் வந்தால் இருள் தானாக அகன்று விடும். இருளை நாமாக அகற்ற வேண்டிய தேவை இருக்காது.

அழைப்பாளர்கள் தவறுகளைத் தடுக்க முற்பட்டால் அதனால் தவறு செய்வோர் சினமுறுவர். அழைப்பாளனைப் புறக்கணிப்பர். எனவே, தவறு செய்பவர்களோடு நாம் கொஞ்சம் விட்டுக் கொடுத்துத்தான் போக வேண்டும். அவர்களோடு சேர்ந்து நாம் செயல்பட்டால் தான் நாம் சொல்வதை அவர்கள் கேட்பார்கள் என்று சில அழைப்பாளர்கள் எண்ணுகின்றனர்.
அது மட்டுமின்றி இப்படி தஃவத் பணிபுரிவதுதான் “ஹிக்மத்”தான வழி எனவும் வாதிடுகின்றனர். இதற்கு மாற்றமான முறையில் தஃவத் பணிபுரிவோரை முட்டாள்கள், அரை வேக்காடுகள், மக்களை புரிந்து கொள்ளாதவர்கள், நுணிப்புல் மேய்பவர்கள் என்றெல்லாம் ஏளனமும் செய்கின்றனர்.
இஸ்லாமிய அழைப்புப் பணியின் அணுகு முறையாக இதனை நாம் ஏற்க முடியமா? என்பது பற்றி ஆராய்வோம்.
உதாரணங்கள் ஆதாரங்களாகாது:
பெரும்பாலும் இத்தரப்பினர் தமது வாதங்களுக்கு உதாரணங்களையே ஆதாரங்களாக எடுத்து வைப்ப துண்டு. ஒரு உண்மையை விபரிப்பதற்கு உதாரண ங்களைப் பயன்படுத்துவதை இஸ்லாம் அங்கீகரிக்கின்றது. ஆனால் உதாரணங்களையே முழு ஆதாரமாக நாம் கொள்ள முடியாது. ஒளியை ஏற்றினால் இருள் தானாக அகன்றுவிடும் என்று இத்தரப்பார் வாதிப்பர். இதே பிரச்சினையை உதாரணத்தை அடிப்படை ஆதாரமாகக் கொண்டு வாதிப்பதாயின் பின்வருமாறும் கூறலாம்.

ஒரு நிலத்தில் பயிர் நடுவதாயின் முதலில் நிலத்தில் உள்ள களைகளை அகற்ற வேண்டும். பயிரை நாட்டினால் களைகள் தாமாக அழிந்து விடும் என நாம் கூற முடியாது. எனவே நன்மையை ஏவுவதற்கு முன் அவனிடம் இருக்கும் தீமைகள் எனும் களைகளைக் களைய வேண்டும்.
மேற்படி உதாரணத்தை வைத்து நாம் முடிவு செய்தால் ஒளி வந்தால்….. உதாரணத்திற்கு நேர்மா ற்றமான முடிவைப் பெற முடிகின்றதல்லவா? எனவே, உதாரணங்கள் மூல ஆதாரங்கள் அல்ல. ஆதாரங்களின் அடிப்படையில் பெற்ற முடிவுகளை விளக்கும் ஒரு ஊடகமாக நாம் உதாரணங்களைக் கொள்ள வேண்டும்.
தீமையைத் தடுங்கள்:
அல்குர்ஆனில் சில குறிப்பிட்ட விடயங்கள் இணைத்துப் பேசப்படுவதுண்டு. அவற்றை நாம் பிரித்து நோக்குவது வழி கேட்டிற்கே வழி வகுக்கும்.

உதாரணமாக, “அல்லாஹ்வைப் பின்பற்றுங்கள் அவன் தூதரையும் பின்பற்றுங்கள்” “தொழுகையை நிலை நிறுத்தி ஸகாத்தும் கொடுங்கள்” போன்ற வசனங்களைக் கூறலாம்.
அல்லாஹ்வைப் பின்பற்றுவோம். அவன் தூதரைப் பின்பற்ற மாட்டோம் என்றோ, அல்லாஹ்வைப் பின்பற்றினால் அவன் தூதரையும் பின்பற்றித் தானே ஆக வேண்டும் எனவே நாம் அல்லாஹ்வைப் பின்பற்றுங்கள் என்று மட்டும் தான் போதிப்போம் என்றோ கூறுவது வழிகேடாகும்.
இவ்வாறே, அல்குர்ஆனில் நன்மையை ஏவித் தீமையைத் தடுங்கள் என்று இரண்டும் இணைந்தே பேசப்படுகின்றது. அவற்றுக்கிடையில் பிரிவை ஏற்படுத்தி நன்மையை ஏவினால் போதும் எனக் கூறுவது தெளிவான வழிகேடேயாகும். இதோ அல்குர்ஆன் இரண்டையும் இணைத்துக் கூறும் சில வசனங்கள்.
“உங்களில் ஒரு கூட்டத்தார் (மனிதர்களை) நன்மையின் பால் அழைக்கின்றவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுகின்றவர்களாகவும், தீய செயல்களிலிருந்து (அவர்களை) விலக்குகின்றவர்களாகவும் இருக்கட்டும். அவர்களேதாம் வெற்றி பெற்றோர்”. (3:104)
“(விசுவாசங் கொண்டோரே!) மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தார்களிலெல்லாம்) மிக்க மேன்மையான சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள். (ஏனெனில்) நன்மையான காரியங்களை நீங்கள் ஏவுகிறீர்கள். தீமையை விட்டும் (அவர்களை) நீங்கள் விலக்குகிறீர்கள்.” (3:110)
மேற்படி வசனங்களில் நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தல் என்ற இரு விடயமும் இணைத்துக் கூறப்பட்டிருப்பதைக் காணலாம். நன்மையை ஏவினால் தீமை தானாக அழிந்து விடும் என்ற அற்புதத் தத்துவம்(?) அல்லாஹ்வுக்குத் தெரியாமல் போய் விட்டதா? அல்லாஹ்வுக்குத் தெரியாத ஒரு ஹிக்மத்தான அணுகு முறையைத் தாம் கண்டு பிடித்துவிட்டதாகக் இவர்கள் கூறப் போகின்றனரா?
இது இஸ்லாமிய சிந்தாந்தமா?
தவறுகளைக் கண்டும் காணாதது போல் அல்லது அது தவறு அல்ல என்பது போல் நடந்து கொள்ளச் சொல்லும் இந்நயவஞ்சகப்போக்கு இஸ்லாமிய சிந்நாத்தம் அல்ல என்பதை இத்தரப்பார் சிந்திக்கத் தவறி விட்டனர்.

“அதர்மம் அதிகரிக்கும் போது அதனை அழிக்கக் கடவுள் அவதாரம் எடுப்பார்” என இந்து மதம் கூறுவதால் அதர்மத்தை அழிக்க ஒரு இந்து முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை என்ற சிந்தனையை அதன் அங்கத்த வர்களுக்கு அளிக்கின்றது. எனவேதான் தீமையைக் கண்டால் விலக்கு என்று அல்ல விலகி விடு எனப் போதிக்கின்றனர். தீமையைப் பார்க்காதே. தீமையைப் பேசாதே! தீமையைக் கேட்காதே. என்று போதித்தவர்கள் கூட தீமையை எதிர் என்றோ, தடு என்றோ போதிக்க வில்லை.
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் கொடு உன் ஒரு உடையைக் கேட்டால் மற்றொரு ஆடையையும் சேர்த்துக் கொடு. தீமையோடு எதிர்த்து நில்லாதே என்கிறது கிறிஸ்தவ மதம்.
ஏனைய மதங்களோடு ஒப்பிடும்போது தன் அங்கத்தவர்களுக்கு தீமையை எதிர்த்துப் போராடும் உணர்வை வழங்கியிருப்பது இஸ்லாத்தின் ஒரு தனிப்பட்ட சிறப்பம்சம் என்பதை ஒரு ஆய்வாளன் அறிந்துகொள்ளலாம். இதனால்தான் இஸ்லாம் சர்வதேச மட்டத்தில் அதிக எதிர்ப்பையும் சந்தித்து வருகின்றது.
எனவே, மேற்படி தகவல்களிலிருந்து “தீமையை எதிர்க்காமை” என்ற இந்த தஃவத் அணுகு முறை இஸ்லாமிய சித்தாந்தம் அல்ல என்பதையும் இது இந்து, கிறிஸ்தவ சமய அணுகு முறைகள் என்பதையும் அறிய முடிகின்றது!
தீமையைத் தடுக்காதோர் நிலை:
தீமையைத் தடுக்காமை இறை கோபத்தைத் தேடித் தரும் தீய சிந்தனையாகும். இதனை அல்குர்ஆன் கூறும் பின்வரும் சம்பவம் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

“பனு இஸ்ரவேலர்களுக்கு சனிக்கிழமையில் வேலை செய்வது தடுக்கப்பட்டிருந்தது. கடலோரத்தில் வாழ்ந்த ஒரு கூட்டத்தை அல்லாஹ் சோதிப்பதற்காக அன்றைய தினத்தில் மீன்களை அதிகமாக நீர் மட்டத்திற்கு வரச்செய்தான். இதனைக் கண்ட ஒரு கூட்டம் மீன்பிடிக்கிறது. இன்னும் ஒரு கூட்டம் மீன்பிடிப்பதைத் தடுக்கிறது. இன்னுமொரு கூட்டம் தவறுசெய்யாமலும், தவறுசெய்வோரைத் தடுக்காமலும் இருக்கிறது. அல்லாஹ்வின் கட்டளைவந்தபோது தவறு செய்தவர்களும் தவறைத் தடுக்காதவர்களும் குரங்குகளாக மாற்றப்பட்டனர்.” (பார்க்க: 7,163-166)
மேற்படி சம்பவத்தில் தீமையைத் தடுத்தோர் தவிர்ந்த மற்றைய தீமை செய்தோர்-நன்மை செய்தோர் ஆகிய இரு தரப்பாரும் தண்டிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
தவறின் பங்குதாரர்கள்:
தீமையைத் தடுக்காதோரையும் இஸ்லாம் தவறு செய்பவர்களாகவே நோக்குகின்றது. இதோ தீமையைத் தடுக்காதோரை உவமிக்க நபி(r) அவர்கள் கூறும் உதாரணத்தைப் பாருங்கள்.

அல்லாஹ்வின் வரையறைகளைப் பேணுபவருக்கும் மீறுபவருக்கும் உதாரணம் ஒரு கப்பலில் பயணம் செய்யும் கூட்டத்தை ஒத்ததாகும். அதில் சிலர் கப்பலின் மேல் தளத்திலும் சிலர் கீழ்த் தளத்திலும் இருக்கின்றனர். கீழ்த்தளத்தில் உள்ளோருக்கு நீர் தேவைப்பட்டால் அவர்கள் மேலே சென்று தான் எடுக்க வேண்டும். எனவே, அவர்கள் நாம் நமது தளத்தில் துவாரமிட்டால் (அடிக்கடி மேலே சென்று) மேல் தளத்தில் இருப்பவர்களுக்கு இடைஞ்சல் செய்யாதிருக்கலாம் எனத் தமக்குள் கூறிக்கொண்டனர். மேல் தளத்தில் இருப்போர் கீழ்த்தளத்தில் இருப்போரைத் தடுக்காமல் அவர்கள் விருப்பப்படி நடக்க விட்டால் இரு தரப்பினரும் அழிந்து விடுவர். மாற்றமாக அவர்களைத் தடுப்பார்களாயின் அனைவரும் பாதுகாக்கப்படுவர். என நபி(r) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : நுஃமான் இப்னு பஷீர் (ரழி) ஆதாரம் : புகாரி

மேற்படி உதாரணம் தவறைத் தடுக்காதோரும் பாவத்தில் பங்கு தாரார்கள் என்பதை விளக்குகின்றது. ஒரு சமூகத்தில் தவறு பகிரங்கமாக நடந்து, அதைத் தடுக்கும் ஆற்றல் உள்ளவர்கள் இருந்தும் அதைத் தடுக்கா விட்டால் அல்லாஹ்வின் தண்டனை அனைவரையும் வந்தடையும். என்பதை நபி மொழிகள் உறுதி செய்கின்றன.
சேர்ந்து திருத்துதல்:
இத்தரப்பார் தவறு செய்பவர்களுடன் சேர்ந்து சென்றால் தான் அவர்களைத் திருத்த முடியும் என நம்புகின்றனர். நாம் செய்யும் நல்லற ங்களில் அவர்களை இணைப்பதற்காக அவர்கள் செய்யும் சில தவறுகளில் நாம் உளப்பூர்வமாக இல்லாவிட்டாலும் உடலளவிலாவது அவர்களுடன் ஒத்துழைப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்கின்றனர்.

பனு இஸ்ரவேலர்களும் இதே நிலையில் தான் வழிகெட்டனர். அவர்கள் சபிக்கப்பட்டதற்கான காரணத்தையும், அவர்களில் ஏற்பட்ட முதல் பலவீனத் தையும் நபி(r) அவர்கள் பின்வருமாறு விபரித்துக் கூறுகின்றார்கள்.
பனு இஸ்ரவேலர்களில் குறைபாடு முதலில் எப்படி நுழைந்தது எனின், அவர்களில் ஒரு நல்ல மனிதர் தவறு செய்யும் ஒருவரைக் கண்டால் “அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! நீ செய்த (இந்தத்) தவறை விட்டுவிடு இது உனக்கு ஆகாது” என்றெல்லாம் ஆரம்பத்தில் கூறுவார். ஆனால், மறு தினமும் அதே நபரை அதே நிலையில் கண்டாலும் கூட அவரோடு சேர்ந்து இவர் உண்பதையும் குடிப்பதையும், அமர்வதையும் தவிர்க்க மாட்டார். அவர்கள் தவறு செய்பவர்களுடன் அதே நிலையில் இணைந்திருந்த போது அல்லாஹ் ஒருவருடைய உள்ளத்தைப் போன்று மற்றவர் உள்ளத்தையும் மாற்றி விட்டான். எனக் கூறி விட்டு,
“இஸ்ராயீலின் சந்ததிகளில் எவர்கள் நிராகரித்தார்களோ அவர்கள் தாவூத், மர்யமுடைய மகன் ஈஸா ஆகியோரின் நாவாலும் சபிக்கப்பட்டேயிருக்கின்றனர். ஏனென்றால், அவர்கள் வரம்பு கடந்தும், பாவம் செய்தும் வந்தனர்”.
“(அன்றி) அவர்கள் செய்து வந்த எந்த விலக்கப்பட்ட காரியத்தையும் ஒருவருக்கொருவர் தடை செய்யவுமில்லை. அவர்கள் செய்து கொண்டிருந்தவையும் நிச்சயமாக மிகத் தீயவை. அவர்களில் பெரும் பான்மையினர், நிராகரிப்போரையே தோழமை கொள்வதை (நபியே) நீர் காண்பீர். அல்லாஹ் அவர்கள் மீது கோபிக்கும் படி, அவர்கள் தமக்குத் தாமாகவே தேடியனுப்பியது மிகக் கெட்டது. அவர்கள் (நரக) வேதனையில் என்றென்றுமே தங்கி விடுவார்கள்”.
“அவர்கள் அல்லாஹ்வையும், இந்த நபியையும், அவருக்கு அருளப்பெற்ற (வேதத்)தையும் (உண்மை யாகவே) விசுவாசங் கொண்டிருந்தால், (நிராகரித்த) அவர்களை (த் தங்களுக்கு)த் தோழர்களாக எடுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால், அவர்களில் பெரும்பாலோர் பாவிகளாகவே இருக்கின்றனர்” (5:78-81) என்ற வசனங்களை ஓதினார்கள். அதன் பின் அல்லாஹ்வின் மீது சத்தியமாக நீங்கள் நன்மையை ஏவிக் கொண்டே இருங்கள். தீமையைத் தடுத்துக் கொண்டே இருங்கள். அநியாயக் காரரின் கரத்தைப் பிடித்து இழுத்து வந்து சத்தியத்தில் நிறுத்துங்கள். இல்லையெனில் உங்களில் ஒருவரின் உள்ளத்தைப் போல் மற்றவர் உள்ளத்தையும் அல்லாஹ் மாற்றி விடுவான். அதன் பின் இஸ்ரவேலர்கள் சபிக்கப்பட்டது போல் நீங்களும் சபிக்கப்பட்டு விடுவீர்கள்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரழி)
ஆதாரம் : அபூதாவூத் (4336), திர்மிதி (3050), இப்னு மாஜா (4006)

சேர்ந்து திருத்துதல் என்ற கோட்பாடு மேற்படி ஹதீஸிற்கு முரணானது என்பதைக் காணலாம்.
நல்லோருடன் மோதுவதா?
தீயோருடன் ஒத்துப் போனால் தான் தீமையை ஒழிக்கலாம் என நம்பும் இவர்கள் நல்லோருடன் எதிர்த்து நிற்கும் போக்கைக் கடைப்பிடிப்பது தான் புரியாத புதிராக உள்ளது. இத்தரப்பார் தீயோருடன் இணைந்து செல்ல நாமும் சற்றுத் தீமை செய்ய வேண்டும் என்பதை நிரூபிக்க ஒரு ஆதாரம் கூறுவர். மது போதையுடைய ஒரு சாரதி தவறான பக்கத்தில் வாகனத்தைச் செலுத்தி வருகின்றார். எதிர்த் திசையில் வரும் நாம், நாம் போகும் பக்கம் சரியான பக்கம் தானே எனச் சென்றால் முட்டிக்கொள்ளத் தான் நேரிடும். எனவே, மோதலைத் தவிர்க்க நாம் “ரோங்சைட்” டில் போய்த்தான் ஆக வேண்டும் என்கின்றனர்.

சந்தர்ப்ப வசத்திற்கு இவ்வுதாரணம் பொருத்த மாகப்பட்டாலும் இதே உதாரணத்தை இப்படி நோக்கிப் பாருங்கள்.
எதிர்த் திசையில் இரண்டு வாகனங்கள் வருகின்றன. ஒன்று சரியான பக்கத்திலும் மற்றையது “ரோங் சைட்டி”லும் வருகின்றது. முட்டித்தான் ஆக வேண்டும் என்றால் ரோங் சைட்டில் வரும் வாகனத்தோடு மோதுவதா? அல்லது சரியான பக்கத்தில் வரும் வாகனத்தோடு அதாவது நாம் ரோங்சைட் போய் மோதுவதா?
முன்னையது பாதிப்பை ஏற்படுத்தினாலும் குற்றத்தை எதிர்த்தரப்பு சாரதி மீது போட்டு நீதியை நமக்கு சாதகமாக்கும். பின்னையது இழப்புடன் குற்றத்தையும் எம்தலையில் சுமத்திவிடும். அத்தோடு தவறான திசையில் வந்தவரைப் பாதுகாப்பதற்காக நாமும், சரியான திசையில் வந்த சாரதியும் பாதிப்புக்களைச் சந்திக்க நேரிடும்.
நியாய உணர்வும் புத்தியுமுடையவன் முன்னை யதைத்தான் தேர்ந்தெடுப்பான். ஆனால், இத்தரப்பார் பின்னையதைத்தான் தேர்ந்தெடுக்கின்றனர்.
தீயோருடன் சேர்ந்து செல்ல வேண்டும் என்பதற்காக நல்லோரை பகைத்துக் கொள்கின்றனர். ஏகத்துவ வாதிகளுக்கு எதிர்ப்புக் கொடி காட்டி சடங்கு வாதிகளுடன் சல்லாபம் புரிகின்றனர். உண்மையா ளர்களுக்கு இடையூறு செய்து அசத்திய வாதிகளுக்கு உற்சாக மூட்டுகின்றனர். தம்மைக் கூட காபிர், வழி கேடன் எனத்தூற்றுவோருடனும் சினேகம் கொண்டு நட்புப் பாராட்டும் அதேநேரம் நல்லோரை சினத்தோடு நோக்குகின்றனர். இது நீதி நெறி தவறாத ஒரு முஸ்லிமின் வழிமுறையாக இருக்குமா?
யூத கிறிஸ்தவர்களின் முன்மாதிரி:
தவறு செய்பவர்களுடன் சேர்ந்து செல்லும் வழி முறை யூத கிறிஸ்தவர்களின் வழிமுறை. இஸ்லாமிய வழிமுறை அல்ல. இதனையே நாம் மேலே கூறிய ஹதீஸ் உணர்த்துகின்றது.

ஆரம்பத்தில் தவறு செய்பவர்களுடன் சேர்ந்து இருந்தவர்கள் பின்னர் தவறைச் செய்பவர்களாகவே மாறி விட்டனர் என்பதை மேற்படி ஹதீஸ் விளக்குகின்றது. இதே நிலையை இன்று நாம் நிதர்சனமாகக் கண்டு வருகின்றோம்.
ஆரம்பத்தில் ஏகத்துவத்தை தெளிவாக எடுத்துக் கூறி சிர்க் பித்அத்தை வன்மையாகக் கண்டித்த சிலர், சிர்க் பித்அத்தை கண்டிக்காமல் சேர்ந்து மார்க்கப்பணி புரிய முற்பட்டனர்.
சேர்ந்து செல்ல வேண்டும் என்பதற்காக கப்ருவழிபாடு புரிவோரையும் கண்டிக்காது தமது அழைப்புப் பணியில் பங்கெடுக்க வைத்தனர். மௌலிது, கத்தம், ராத்திபு போன்ற நிகழ்ச்சிகளுக்கும் சென்று உதவி, ஒத்தாசை புரிந்து அவர்களையும் தம்மோடு இணைத்துக் கொண்டனர்.
காலப்போக்கில் நன்மையை ஏவி அதன் மூலம் தீமையைத் தானாக வெளியேற்றி விட வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்ட வர்களை விட கத்தம், மௌலீது, ராதிபு போன்ற பித்அத்துக்களையே மார்க்கமாக நம்பிய அழைப்பாளர்களின் எண்ணிக்கை பெருக ஆரம்பித்தது.
காலப் போக்கில் சிர்க், பித்அத் போன்ற அனாச்சா ரங்களை யாராவது கண்டித்துப் பேசினால் அதை எதிர்க்கும் குழுவினராக மேற்படி அழைப்பாளர்கள் மாறிவிட்டனர்.
இதைக் கண்கூடாகக் கண்டாலும் கூட தடுக்கும் ஆற்றல் அற்றவர்களாக ஆரம்பகால அழைப்பாளர்கள் மௌனம் சாதிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இப்போது மேல் மட்ட நல்லெண்ணம் கொண்ட வர்களால் கூட, கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு மார்க் கத்தைப் பற்றிய சரியான அறிவில்லாத அழைப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் நல்லெண்ணம் கொண்ட மேல்மட்டத்தவர்களும் கீழ் மட்ட அழைப்பாளர் களுக்கேற்ப தலையசைக்கும் நிலை அல்லது அவர்களின் தவறுகளுக்கு உதவி செய்யும் நிலை தோன்றியுள்ளது. அல்லாஹ் கெட்டவர்களின் உள்ளத்தைப் போல நல்லவர்களின் உள்ளத்தையும் மாற்றி விட்டானோ என்னமோ?
இந்நிலை ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
உங்களில் யாராவது தீமையைக் கண்டால் அதை அவர் தன் கையால் தடுக்கட்டும். அதற்கு முடியாவிட்டால் தன் நாவால் தடுக்கட்டும். அதற்கும் முடியாவிட்டால் உள்ளத்தால் அதை வெறுத்து ஒதுங்கிக் கொள்ளட்டும். இதுவே ஈமானின் மிகப் பலவீனமான நிலையாகும்.
அறிவிப்பவர் : அபு ஸயீதுல் குத்ரி (ரழி)
ஆதாரம் : முஸ்லிம், அபு தாவுத் (1140, 4340),
திர்மிதி (2173), நஸயி, இப்னு மாஜா(4013)

தவறைத் தடுக்க முடியாது எனின் ஒதுங்குதல் அவசியம் என்பதை மேற்படி ஹதீஸின் மூலம் புரிய முடிகின்றது.
எனவே நன்மையை ஏவித் தீமையைத் தடுக்கும் பணி ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். தவறைத் தடுக்க முடியாத சூழ்நிலை இருந்தால் தவறோடு சம்பந்தப்படாமல் ஒதுங்துதல் வேண்டும். தவறு செய்பவனுடன் தவறு செய்யும் சந்தர்ப்பத்தில் எமக்கு எவ்விதத் தொடர்பும் இருக்கக் கூடாது.
நாம் இதுவரை மார்க்கத்தை மறைத்தல் என்பது எவ்விதத்திலும் இஸ்லாமிய பிரச்சார அணுகு முறையாக இருக்காது என்பதைக் கண்டோம்.
இக்கருத்துக்குச் சாதகமாக எடுத்து வைக்கப்படும் வாதங்களையும் அதன் பலமற்ற தன்மை பற்றியும் விரிவாக ஆராய்ந்தோம்.
நாமறிந்த வகையில் இஸ்லாத்தை எம்மால் முடிந்தவரை தெளிவாக மக்கள் முன் ஒளிவு மறைவு, கூட்டல் குறைத்தல், திரித்தல் இன்றி எடுத்து வைப்பதே அழைப்புப் பணியாகும். அவ்வாறு எடுத்து வைக்கும் போது ஏற்படும் இன்னல்களை ஏற்றுத் தனக்குத் தொல்லை தருபவர்களின் ஹிதாயத்திற்காகப் பிரார்த்திப்பவனே அழைப்பாளன் ஆவான்.
எல்லாம் வல்ல அல்லாஹூத் தஆலா சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக.
வாஆகிரு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி
ரப்பில் ஆலமீன் வல்லாஹு அஃலம்.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.