அல்குர்ஆன் விளக்கம் – மரண சாசனம்

    இந்த வசனம் மாற்றப்பட்ட வசனங்களில் ஒன்றாகும். ஒருவர் தனது சொத்தில் பெற்றோர், உறவினர்களுக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என மரண சாசனம் எழுதி வைப்பது ஆரம்பத்தில் கடமையாக இருந்தது. அதையே இந்த வசனம் கூறுகின்றது. இதன் பின்னர் ஸூறா நிஸாவின் ‘ஆயதுல் மவாரிஸ்’ எனப்படும் வாரிசுரிமைச் சட்டங்கள் தொடர்பான 4:11-12-13, 4:17 ஆகிய வசனங்கள் அருளப்பட்டன. இந்த வசனங்களில் ஒருவர் மரணித்துவிட்டால் அவரது பெற்றோர், மனைவி, ஆண்மக்கள், பெண் பிள்ளைகள், சகோதர சகோதரிகள் என்போர் அவரது சொத்தில் எத்தனை விகிதத்தைப் பெறுவார்கள் என்பது குறித்து தெளிவாகக் கூறப்பட்டுவிட்டது. ஒருவர் மரண சாசனம் செய்தாலும், செய்யாவிட்டாலும் இந்தப் பங்கு குர்ஆனில் கூறப்பட்ட விதத்தில் பங்கிடப்படும்.

குர்ஆனில் அல்லாஹ் வாரிசுரிமை பெறுவோர் குறித்து குறிப்பிட்டுவிட்டான். அவர்களுக்கு அதற்கு மேலாக எந்த வஸிய்யத் – மரண சாசனமும் செய்ய முடியாது. இருப்பினும் குர்ஆனில் குறிப்பிடப்படாத உறவினர்களுக்கோ அல்லது பொதுக் காரியங்களுக்கோ ஒருவர் வஸிய்யத் செய்யும் உரிமை பெற்றுள்ளார். இதனை மேற்படி 2:180 வசனத்தை மாற்றிய வாரிசுரிமைச் சட்டம் வசனங்கள் மூலமே அறியலாம். அல்லாஹ் சொன்ன விதத்தில் சொத்தை எப்போது பங்கு பிரிக்க வேண்டும் என்பது பற்றி இந்த வசனங்கள் கூறும் போது (இவ்வாறு பங்கீடு செய்வது) அவர் செய்த மரண சாசனம் அல்லது கடன் என்பவற்றை நிறைவேற்றிய பின்னரே ஆகும் எனக் கூறப்பட்டுள்ளது.

‘இரு பெண்களுக்குரிய பங்கு போன்றது ஒரு ஆணுக்கு உண்டு என உங்கள் பிள்ளைகள் விடயத்தில் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான். அவர்கள் இரண்டுக்கு மேற்பட்ட பெண்களாக இருந்தால் அவன் விட்டுச் சென்றதில் மூன்றில் இரு பங்கு அவர்களுக்குண்டு. அவள் ஒருத்தியாக இருந்தால் (அதில்) அரை வாசி அவளுக்குண்டு. (மரணித்த) அவருக்கு பிள்ளை இருப்பின் அவர் விட்டுச் சென்றதில் அவரது பெற்றோர் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பங்குண்டு. அவருக்கு பிள்ளையில்லாமல் அவரது பெற்றோரே அவருக்கு வாரிசாக இருப்பின் அவரது தாய்க்கு மூன்றில் ஒரு பங்குண்டு. அவருக்கு சகோதரர்கள் இருப்பின் அவரது தாய்க்கு ஆறில் ஒரு பங்குண்டு. (இவ்வாறு பங்கீடு செய்வது) அவர் செய்த மரண சாசனம், அல்லது கடன் என்பவற்றை நிறைவேற்றிய பின்னரேயாகும். உங்கள் பெற்றோர் மற்றும் உங்கள் பிள்ளைகளில் உங்களுக்கு அதிகமாகப் பயனளிப்பதில் உங்களுக்கு மிக நெருக்கமானவர்கள் யார்? என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள். (இவை) அல்லாஹ்வினால் விதிக்கப் பட்டவையாகும். நிச்சய மாக அல்லாஹ் நன்கறிந்தவனாக வும் ஞானமிக்கவனாகவும் இருக்கின்றான்.’ (4:11)
எனவே, வாரிசுரிமைச் சட்ட வசனங்கள் இறக்கப்பட்ட பின்னரும் ஒருவர் மரண சாசனம் செய்யலாம். ஆனால், சில விடயங்களைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.

01.    குர்ஆனில் சொத்துப் பங்குத் தொகை குறிப்பிட்டுச் சொல்லப்பட்ட வாரிசுகளுக்கு வஸிய்யத் செய்ய முடியாது.

02.    செய்யப்படும் வஸிய்யத் முழுச் சொத்தில் 1Æ3 பங்கை விட அதிகப்பட முடியாது.

சிலர் வாரிசுகள் மீது கொண்ட கோபத்தின் காரணமாக முழுச் சொத்தையும் பொதுக் காரியங்களுக்கு தர்மம் செய்துவிடுகின்றனர். இஸ்லாம் இதை அங்கீகரிக்காது.

ஸஃத்(வ) அவர்கள் தனது முழுச் சொத்தையும் தர்மம் செய்ய வஸிய்யத் செய்ய முற்பட்டார்கள். நபி(ச) அவர்கள் வேண்டாம் எனக் கூறினார்கள். பின்னர் 1Æ2 பகுதியை தர்மம் செய்ய முற்பட்ட போது அதையும் வேண்டாம் என்ற நபி(ச) அவர்கள் 1Æ3 பகுதியை வஸிய்யத் செய்ய அனுமதியளித்தார்கள் என நபிமொழிகள் கூறுகின்றன.

முன்னர் மரண சாசனம் செய்வது கடமை என்றிருந்த நிலை நீங்கிவிட்டது.

நீக்கப்பட்ட சலுகை:

‘கணக்கிடப்பட்ட சில தினங்களில் (அது நிறைவேற்றப்பட வேண்டியதாகும்.) ஆனால், உங்களில் எவர் நோயாளியாக அல்லது பயணத்தில் இருக்கிறாரோ (அவர்) வேறு நாட்களில் கணக்கிட்டு (நோற்று)க் கொள்ளட்டும். எனினும், (முதுமை அல்லது நிரந்தர நோய் போன்ற காரணங்களால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்கட்டும். எனினும், எவரேனும் தானாக விரும்பி அதிகமாகக் கொடுத்தால் அது அவருக்கு நல்லது. நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நல்லதாகும்.’ (2:184)

ஆரம்பத்தில் நோன்பு விதியாக்கப்பட்ட போது விரும்பியவர்கள் நோன்பைப் பிடிக்கலாம். சக்தியிருந்தும் பிடிக்க விரும்பாதவர்கள் ஒரு ஏழைக்கு உணவை தர்மம் செய்து நோன்பை விடலாம். இருப்பினும் நோன்பு நோற்பதே சிறந்தது என்று சலுகை அளிக்கப்பட்டது. பின்னர்,

‘எனவே, உங்களில் யார் அம்மாதத்தை அடைகின்றாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும். யார் நோயாளியாக அல்லது பயணத்தில் இருக்கின்றாரோ (அவர்) வேறு நாட்களில் கணக்கிட்டு (நோற்று)க் கொள்ளட்டும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவையே விரும்புகின்றான். அவன் உங்களுக்குக் கஷ்டத்தை விரும்பவில்லை. (நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் முழுமைப்படுத்துவதற்காகவும், அல்லாஹ் உங்களை நேர்வழியில் செலுத்தியதற்காக அவனைப் பெருமைப் படுத்துவதற்காகவும், நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும் (இவ்வாறு செய்தான்.)’ (2:185)

என்ற வசனத்தின் மூலம் நோன்பு நோற்க சக்தியுள்ளவர்கள் கட்டாயம் நோன்பு நோற்றேயாக வேண்டும் என சட்டம் விதியாக்கப்பட்டது.

எனினும், 2:184 வசனம் சொன்ன சலுகையை நிரந்தர நோயாளிகள், வயோதிபம் காரணமாக நோன்பு நோற்கும் ஆற்றல் அற்றோர், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிப் பெண்கள் போன்றோர் பயன்படுத்தலாம். அவர்கள் நோன்பு நோற்பதற்குப் பகரமாக ஒரு நோன்புக்கு ஒரு ஏழைக்கு உணவு என்ற அடிப்படையில் தர்மம் செய்துவிட்டால் போதுமானதாகும்.

நோன்பு கால இரவுகளில் இல்லறம்:

‘நோன்பு (கால) இரவில் உங்கள் மனைவியரிடம் உறவு கொள்வது உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர் களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். உங்களுக்கு நீங்களே (இரகசியமாக) துரோகமிழைத்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான். எனவே, உங்கள் பாவமன்னிப்பை ஏற்று உங்களை மன்னித்தான். இப்போது முதல் (நோன்பு கால இரவில்) உங்கள் மனைவியருடன் உறவு கொண்டு அல்லாஹ் உங்களுக்கு விதித்ததைத் தேடிக் கொள்ளுங்கள். இன்னும் ஃபஜ்ரு நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்ற) கறுப்பு நூலிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்ளூ பருகுங்கள்ளூ பின்னர் இரவு வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள். இன்னும் நீங்கள் மஸ்ஜித்களில் (தங்கி) இஃதிகாப் இருக்கும் போது அவர்களுடன் உறவு கொள்ளாதீர்கள். இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும். ஆகவே, இவற்றை நெருங்காதீர்கள். இவ்வாறே, மனிதர்கள் (தன்னை) அஞ்சி நடப்பதற்காக அல்லாஹ் தனது வசனங்களை அவர்களுக்கு  தெளிவு படுத்துகின்றான்.’ (2:187)

ஆரம்ப காலத்தில் நோன்பு காலத்தில் இரவில் கூட உடலுறவில் ஈடுபடுவது தடுக்கப்பட்டிருந்தது என்பதை இந்த வசனத்தின் மூலம் அறியலாம். இதனால் ஒரு மாதம் முழுமையாக இல்லற வாழ்வை விட்டும் ஒதுங்கியிருக்க வேண்டிய நிலை இருந்தது. சில நபித்தோழர்கள் இரவு நேரங்களில் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தாம்பத்திய வாழ்வில் ஈடுபட்டு அதனால் மனம் நொந்த நிலையில் இருந்தனர். அதை அல்லாஹ் மன்னித்தது மட்டுமன்றி நோன்பு கால இரவுகளில் தாம்பத்தியத்தியத்தில் ஈடுபட இருந்த தடையையும் இந்த வசனம் மூலம் நீக்கி விடுகின்றான். இப்போது நோன்பு காலங்களிலும் பகல் நேரத்தில் இல்லறத்தில் ஈடுபடலாகாது. இரவு நேரங்களில் இல்லறம் அனுமதிக்கப்பட்டுள்ளது.

அடுத்து அஹ்லுல் குர்ஆன் எனும் பெயரில் குர்ஆன் மட்டுமே இறைச் செய்தி எனக் கூறும் ஒரு கூட்டத்தினர் இருந்து வருகின்றனர். குர்ஆன் அல்லாத இறைச் செய்தியும் உண்டு என இந்த வசனம் கூறி அவர்களது வாதத்தையும் மறுக்கின்றது.

நோன்பு கால இரவுகளில் குடும்ப வாழ்வில் ஈடுபடக் கூடாது என்று ஆரம்பத்தில் தடை இருந்தது. இந்த வசனம் மூலம் அந்தத் தடை நீக்கப்படுகின்றது. ஆனால், ஆரம்பத்தில் இடப்பட்ட தடை சம்பந்தமான எந்த செய்தியும் குர்ஆனில் இல்லை. அது நபி(ச) மூலமாகவே இடப்பெற்றிருக்க வேண்டும் குர்ஆன் மட்டுமன்றி நபி(ச) அவர்களின் வாக்குகளும் சட்டமியற்றும் அதிகாரம்மிக்க வேத செய்தி (வஹி) என்பதை இதன் மூலம் அறியலாம்.

அவர்களைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள்:

‘அவர்களை (போரின் போது) நீங்கள் எங்கு கண்டாலும் கொல்லுங்கள். இன்னும், உங்களை அவர்கள் வெளியேற்றியவாறே நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள். குழப்பம் விளைவிப்பது கொலையை விடக் கொடியதாகும். மஸ்ஜிதுல் ஹராமில் உங்களுடன் அவர்கள் போரிடும் வரை நீங்கள் அவர்களுடன் அங்கு போரிட வேண்டாம். ஆனால், உங்களுடன் அவர்கள் போரிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள். இதுதான் நிராகரிப்பாளர்களுக்குரிய கூலியாகும்.’ (2:191)
அவர்களைக் கொல்லுங்கள் என குர்ஆன் கூறுவதை சிலர் வேண்டுமென்றே தவறாகச் சித்தரிக்கின்றனர். முஸ்லிம் அல்லாதவர்களை இஸ்லாம் கொல்லச் சொல்கின்றது என்று கூறி இஸ்லாம் தீவிரவாதத்தைப் போதிப்பதாக நிலைநாட்ட முற்படுகின்றனர். இந்த வசனம் முஸ்லிம் அல்லாதவர்களைக் கொலை செய்யுமாறு கூறவில்லை.

போர்க்களத்தில் முஸ்லிம்களுடன் போர் செய்பவர்களைப் பற்றிப் பேசும் வசனமே இதுவாகும். இந்த வசனத்திற்கு முந்திய, பிந்திய வசனங்களைப் பார்த்தால் முஸ்லிம்களுடன் போர் செய்பவர்களுடன் போர் செய்ய ஏவப்படுவதுடன் அதில் கூட வரம்பு மீறிச் செல்லலாகாது என்ற போர் தர்மமும் போதிக்கப்பட்டுள்ளது என்பதையும் அறியலாம். 2:191 இது முன்னைய வசனமாகும்.

‘எனினும் அவர்கள் (போரிடாது) விலகிக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்ளூ நிகரற்ற அன்புடையவன்.’

‘குழப்பம் நீங்கி அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரித்தாகும் வரை அவர்களுடன் போரிடுங்கள். ஆனால், அவர்கள் (போரிலிருந்து) விலகிக் கொள்வார்களானால் அநியாயக்காரர்கள் மீதே தவிர எந்த வரம்பு மீறுதலும்  கூடாது.’ (2:192-193)

போர் செய்தவர்கள் போரில் இருந்து விலகிவிட்டால் அவர்கள் மீது வரம்பு மீறக் கூடாது என இந்த வசனம் கண்டிக்கின்றது. பொதுவாக போரில் தோல்வியுற்றவர்கள் மீது அக்கிரமங்கள் கட்டவிழ்த்துவிடப்படுவதே வழமையாகும். இஸ்லாம் இதைத் தடுக்கின்றது. நபியவர்கள் மக்கா வெற்றியின் போது தமது உறுப்பினர்களைக் கொலை செய்தவர்கள், தம்மை ஊரை விட்டும் விரட்டியவர்கள், தமது சொத்துக்களைச் சூறையாடியவர்கள் என அனைவருக்கும் பொது மன்னிப்பளித்து இந்தப் போர் நெறியை நடைமுறைப்படுத்தியும் காட்டியுள்ளார்கள். முஸ்லிம் அல்லாதவர்களைக் கொலை செய்யுமாறு குர்ஆன் கூறுவதாக இஸ்லாத்தின் மீது காழ்ப்புணர்வு கொண்டவர்களே கூறி வருகின்றனர்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.