மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (தொடர் 06)

‘முஹம்மத்(ஸல்) சூனியம் செய்யப்பட்டவர்?’
இஸ்லாத்தின் எதிரிகள் நபி(ஸல்) அவர்களை மஸ்ஹூர் – சூனியம் செய்யப்பட்டவர் என விமர்சித்துள்ளனர். அப்படி விமர்சித்தவர்களைக் குர்ஆன் அநியாயக்காரர்கள் என்று கூறுகின்றது. இதன் மூலம் அவர்களது விமர்சனம் அல்லாஹ்வால் மறுக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்க நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக ஹதீஸ் கூறுகின்றது. எனவே இந்த ஹதீஸை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற தோரணையில் வாதித்து சகோதரர் ஹதீஸை மறுக்கின்றார்.
இந்த வாதம் தவறானதாகும். இந்த வாதத்தை முன்வைப்பதன் மூலம் சகோதரர் தனக்குத் தானே முரண்படுகின்றார்.
சூனியம் என்றால் வெறும் சூழ்ச்சி, தந்திர வித்தை, மாயாஜாலம், மெஜிக் என்று விளக்கம் கூறி விட்டு இந்த இடத்தில் ‘மஸ்ஹூர்’ என்பதற்கு விளக்கமளிக்கும் போது அவருக்கு மாற்றுக் கருத்துடையவர்கள் கூறும் விளக்கத்தையே ஏற்றுக்கொண்டு வாதிப்பதன் மூலம் தனக்குத் தானே முரண்படுகின்றார்.
‘மஸ்ஹூர்’ – ‘சூனியம் செய்யப்பட்டவர்’ என்ற மொழிபெயர்ப்புக்கு அவரது விளக்கப்படி சூழ்ச்சிக்குள்ளானவர், மாயாஜால வித்தைக்குள்ளானவர், மெஜிக்குக்குள்ளானவர் என்றல்லவா அர்த்தமும் விளக்கமும் எடுத்திருக்க வேண்டும்? இந்த வாதத்தை முன்வைத்ததன் மூலம் அவர் சூனியம் என்ற ஒன்று இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்கிறார்.
எனவே, இந்த வாதத்தை முன்வைத்ததன் மூலம் அவர் தனக்குத் தானே முரண்படுவதுடன் சூனியத்திற்கு வெறும் தந்திர வித்தை, மெஜிக், மாயாஜாலம் என்று இது வரை அவர் அளித்த அர்த்தமற்ற வாதத்தை அவரே தவறு என ஒப்புக்கொண்டவராகின்றார்.
அடுத்தது, இந்த இடத்தில் பயன்படுத்தப்பட்ட ‘மஸ்ஹூர்’ என்ற பதத்திற்கு மூன்று அர்த்தங்கள் அறபு மொழி அடிப்படையிலும் அல்குர்ஆன் விளக்கவுரையாளர்களின் வியாக்கியானங்களின் மூலமும் கொடுக்கலாம். அதில் எந்த அர்த்தத்தைக் கொடுத்தாலும் இந்த வசனங்களுக்கும் – நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஹதீஸுக்குமிடையில் எந்த முரண்பாடு எழாது. இதை அவரும் தெளிவாகவே விளங்கி வைத்துள்ளார்.
நபியே மனிதர்களிடமிருந்து உம்மைப் பாதுகாப்போம் (5:67) என்ற குர்ஆன் வசனம் ‘யாரும் நபியைக் கொல்ல முடியாது’ என்றே கூறுகின்றது என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டே நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்ட ஹதீஸ் இந்த வசனத்திற்கு முரண்பட்டது என்று வாதிட்டது போல் இந்த வசனத்திற்கும் ஹதீஸுக்குமிடையில் எந்த முரண்பாடும் இல்லை என்பதை அறிந்துகொண்டே அவர் இந்த வாதத்தை முன்வைத்துள்ளார்.
இந்த வசனம் நேரடியாக நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்ய முடியாது என்பதைத்தான் கூறுகின்றது என்பதை அவர் தெளிவாகத் தெரிந்திருந்தால், இதையே முதல் வாதமாக வைத்து ‘வெட்டு ஒன்று துண்டு இரண்டு’ எனப் பிரச்சினையை முடித்திருப்பார். பல்வேறு வாதங்களை முன்வைத்து மக்கள் மனதில் குறித்த ஹதீஸ் குறித்து சந்தேகங்களை ஏற்படுத்தி, அதன் பின்னர் இந்த வாதத்தை முன்வைப்பதன் மூலம் இந்த வாதம் வலுவற்றது என்பதைப் புரிந்துகொண்டே இந்த வாதத்தை முன்வைத்துள்ளார் என யூகிக்கலாம். (இந்த யூகத்திற்கு வலுவூட்டுவதாக அவரது எழுத்து அமைந்துள்ளதைப் பின்னர் குறிப்பிடுவோம்.)
முரண்பாடு இல்லையே!
அல்குர்ஆனில் மஸ்ஹூரா – சூனியம் செய்யப்பட்டவர் என்ற வார்த்தை நபி(ஸல்) அவர்களைக் குறித்து காஃபிர்களால் இரு இடங்களிலும், மூஸா நபியைக் குறித்து பிர்அவ்னால் ஒரு இடத்திலும் பயன்படுத்தப் பட்டுள்ளது.

பிர்அவ்னும் மூஸா நபியும்:
நிச்சயமாக நாம் மூஸாவுக்குத் தெளிவான ஒன்பது அத்தாட்சிகளை வழங்கினோம். (தமது சமூகமாகிய) அவர்களிடம் அவர் வந்தபோது (என்ன நிகழ்ந்தது? என நபியே!) நீர் இஸ்ராஈலின் சந்ததியினரிடம் கேட்டுப்பாரும். ‘மூஸாவே! நிச்சயமாக சூனியம் செய்யப்பட்டவராக உம்மை நான் எண்ணுகிறேன்’ என்று பிர்அவ்ன் அவரிடம் கூறினான். (17:101)

பிர்அவ்ன் மூஸா நபியை சூனியம் செய்யப்பட்டவர் எனக் கூறியதைக் குர்ஆனோ, மூஸா நபியோ ஏற்றுக்கொள்ளவில்லை.
இதற்குப் பதில் கூறும் போது மூஸா(அலை) அவர்கள்,
‘வானங்கள் மற்றும் பூமியின் இரட்சகனே இவைகளைத் தெளிவான சான்றுகளாக இறக்கி இருக்கிறான் என்பதை நிச்சயமாக நீ அறிவாய். ‘பிர்அவ்னே! நிச்சயமாக நான் உன்னை அழிவுக்குள்ளாக்கப் படுபவனாகவே எண்ணுகிறேன்’ என (மூஸா) கூறினார்.’
(17:102)

மேற்படி வசனத்தின் மூலம் அவன் கூறியதை மறுத்ததுடன் அவன் அழிவுக்குள்ளாகக்கூடியவன் என்றும் மூஸா நபி கூறினார் என்பது தெளிவாகின்றது. எனினும் மூஸா நபி பின்னர் சூனியத்திற்குள்ளானார்கள் எனக் குர்ஆன் கூறுகின்றது. சூனியக்காரர்கள் கயிறுகளையும் தடிகளையும் போட்ட போது அவர்களது சூனியத்தின் காரணமாக அவை பாம்புகள் போன்று போலித் தோற்றத்தை ஏற்படுத்தின. மக்களுக்கு மட்டுமன்றி மூஸா நபிக்குக் கூட அவை பாம்பாகத் தென்பட்டன. அவர் அச்சமுற்றார். இதைக் குர்ஆன் உறுதி செய்கின்றது. (20:65-68)
பிர்அவ்ன் மூஸா நபியை சூனியம் செய்யப்பட்டவர் என்கின்றான்! அவன் சொன்னபடியே அவர் சூனியம் செய்யப்பட்டார். அதன் பாதிப்புக்குள்ளானார். இப்போது பிர்அவ்ன் சொன்னது சொன்னபடி நடந்தது என்று யாரும் கூறுவார்களா? மூஸா நபிக்கு சூனியத்தால் கயிறும், தடியும் பாம்பாகத் தென்பட்டது என்று கூறுவது பிர்அவ்னை உண்மைப்படுத்துவதாகுமா? குர்ஆனைப் பொய்ப்படுத்துவதாகுமா? குர்ஆன் குர்ஆனுக்கே முரண்படுகின்றதா?
இப்படி இருக்க அநியாயக்காரர்கள் நபியை சூனியம் செய்யப்பட்டவர் என்று கூறினர். நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்ற ஹதீஸை ஏற்றுக்கொண்டால் அது குறைஷிகளின் கூற்றை உண்மைப்படுத்துவதாகி விடும் என விவாதிப்பது எப்படி நியாயமாகும்?
பிர்அவ்னும், குறைஷிகளும் மற்றக் காஃபிர்களும் நபிமார்களைப் பார்த்துச் சூனியம் செய்யப்பட்டவர் என்று கூறியது வேறு அர்த்தத்திலாகும். ஹதீஸ் கூறும் செய்தி வேறு செய்தியாகும். இரண்டுக்குமிடையில் எந்த முரண்பாடும் இல்லை. அப்படி இருப்பதாகக் கூறினால் மூஸா நபியும் சூனியத்திற்குள்ளாகியுள்ளார் எனக் குர்ஆன் கூறுகின்றது. அதை நம்பக்கூடாது நம்பினால் குர்ஆனை மறுக்க நேரிடும். அல்லாஹ்வையும், மூஸா நபியையும் பொய்ப்பித்து பிர்அவ்னை உண்மைப்படுத்த நேரிடும் என்று கூறுவதாக அமைந்து விடும். இந்த ஒரு விளக்கமே இவரின் இந்த வாதத்தின் போலித் தன்மையை நிரூபிக்கப் போதிய சான்றாகும். எனினும், மேலதிக விளக்கத்திற்காக இந்த வசனங்கள் எங்கே? எந்தெந்த? அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் இதன் உண்மையான விளக்கம் என்ன? என்பதையும் விரிவாக நோக்குவோம்.
சூனியம் செய்யப்பட்டவர்:
‘அல்லது ஒரு புதையல் இவருக்குக் கொடுக்கப் பட்டிருக்க வேண்டாமா? அல்லது அவருக்கு ஒரு தோட்டம் இருந்து, அதிலிருந்து அவர் உண்ண வேண்டாமா? (என்றும் கூறுகின்றனர்.) ‘நீங்கள் சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே பின்பற்றுகின்றீர்கள்’ என்று அநியாயக்காரர்கள் கூறுகின்றனர்.’ (25:08)

‘அவர்கள் உம்மிடம் செவியேற்கும் போது எதை செவியேற்கின்றார்கள் என்பதையும், ‘சூனியம் செய்யப்பட்ட மனிதரை அன்றி வேறு எவரையும் நீங்கள் பின்பற்றவில்லை’ என்று அநியாயம் செய்தோர் இரகசியம் பேசிக்கொள்வதையும் நாம் நன்கறிவோம்.’ (17:47)
இந்த இரு வசனங்களிலும் நபி(ஸல்) அவர்களையும் (17:101), மூஸா நபியையும் (26:153), ஷுஐப் நபியையும் (26:185) இதன் பன்மைப் பதம் ஸாலிஹ் நபியையும், குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இடங்களில் இவர்களின் ஒட்டுமொத்தப் போதனைகளையும் சூனியத்தின் உளறல் என்ற அடிப்படையிலேயே இவ்வாறு கூறினர் என்பதை இந்த வசனங்களின் முன்-பின் வசனங்களை அவதானிக்கும் போது அறிந்துகொள்ளலாம்.
17:47 ஆம் வசனத்தில் அநியாயக்காரர்கள் நபியை சூனியம் செய்யப்பட்டவர் என்று கூறியதாக வருகின்றது. அதற்கு அடுத்து வரும் வசனங்களில்
‘எலும்புகளாகவும், உக்கிப்போனவர்களாகவும் நாம் ஆகிய பின்னர் நிச்சயமாக நாம் புதியதொரு படைப்பாக எழுப்பப்படுவோமா?’ என அவர்கள் கேட்கின்றனர். (17:49)
எனவே, நபி(ஸல்) அவர்களது போதனை சூனியத்திற்குள்ளானவனின் உளறல் என்ற அர்த்தத்திலேயே காஃபிர்கள் இப்படிக் கூறியுள்ளனர் என்பதை அறியலாம்.
25:8 ஆம் வசனத்திலும் நபி(ஸல்) அவர்களை மஸ்ஹூர்-சூனியத்திற்குள்ளானவர் எனக் கூறியதாக குர்ஆன் குறிப்பிடுகின்றது. அதற்கு முந்தைய வசனங்களைப் பார்த்தால் தூதுத்துவத்தை முழுமையாக மறுப்பதற்காகத்தான் இப்படிக் கூறினர் என்பதைப் புரியலாம்.
‘இது பொய்யே அன்றி வேறில்லை. இதனை இவரே இட்டுக்கட்டிக்கொண்டார். வேறு ஒரு கூட்டத்தினரும் இதற்காக அவருக்கு உதவி புரிந்துள்ளனர்’ என நிராகரித்தோர் கூறுகின்றனர். இதனால் அவர்கள் நிச்சயமாக அநியாயத்தையும் பொய்யையுமே கொண்டு வந்துள்ளனர்.
‘(இவை) முன்னோர்களின் கட்டுக்கதைகளாகும். இவற்றை இவரே எழுதச்செய்துகொண்டார். அது இவருக்குக் காலையிலும் மாலையிலும் படித்துக் காட்டப்படுகின்றது’ என்றும் கூறுகின்றனர்.
வானங்கள் மற்றும் பூமியின் இரகசியங்களை நன்கறிந்தவனே இதனை இறக்கி வைத்தான் என (நபியே) நீர் கூறுவீராக! நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான்.
அல்லது ஒரு புதையல் இவருக்குக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டாமா? அல்லது அவருக்கு ஒரு தோட்டம் இருந்து, அதிலிருந்து அவர் உண்ண வேண்டாமா? (என்றும் கூறுகின்றனர்.) ‘நீங்கள் சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே பின்பற்றுகின்றீர்கள்’ என்று அநியாயக்காரர்கள் கூறுகின்றனர். (25:4,5,6,8)
இவ்வாறே ஸாலிஹ்(அலை) அவர்களையும் இப்படி விமர்சித்தனர். அவர்களது சமூகத்திற்குத் தன்னை ஒரு இறைத் தூதர் என அவர் அறிமுகம் செய்து, போதனை செய்த போது அவரது தூதுத்துவத்தை முழுமையாக மறுக்கும் விதமாக,
அ(தற்க)வர்கள், ‘நீர் சூனியம் செய்யப்பட்டவர்களில் உள்ளவர்தாம்’ என்று கூறினர். (26:153)
இவ்வாறே ஷுஐப்(அலை) அவர்கள் தன்னை இறைத் தூதராக அறிமுகப்படுத்திப் போதனை செய்த போது,
அ(தற்க)வர்கள், ‘நிச்சயமாக நீர், சூனியம் செய்யப்பட்டவர்களில் உள்ளவர் தாம்’ என்று கூறினர். நீர் எம்மைப் போன்ற மனிதரேயன்றி வேறில்;லை. நிச்சயமாக உம்மை நாம் பொய்யர்களில் உள்ளவராகவே எண்ணுகின்றோம். (26:185-186)
இந்த அடிப்படையில் நோக்கும் போது நபிமார்களது முழுத் தூதுத்துவத்தை மறுப்பதற்காகவே சூனியம் செய்யப்பட்டவர்கள் என அவர்கள் கூறினர் என்பதை அறியலாம். இவர்கள் சூனியம் செய்யப்பட்டதனால் உளருகின்றனர் என அவர்கள் கூறினர்.
அவர்களின் இந்தக் கூற்றை மறுப்பது நபிக்குச் சூனியமே செய்ய முடியாது என்பதை மறுப்பதாகாது! நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்ட ஹதீஸை நம்புவது காஃபிர்களை உண்மைப்படுத்துவதாகவோ குர்ஆனைப் பொய்ப்படுத்துவதாகவோ ஒருபோதும் அமையாது. எனவே, நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஹதீஸிற்கும் இந்த வசனங்களின் போக்கிற்கும் எந்த முரண்பாடும் இல்லை.
இதைச் சகோதரர் தெளிவாக விளங்கியிருந்ததனால்தான் இதை முதல் வாதமாகவோ, இறுதி வாதமாகவோ வைக்கவில்லை. அத்துடன் சூனியம் செய்யப்பட்டவர் என்று என்ன எண்ணத்தில் காஃபிர்கள் கூறினர் என்பதை அவரே எழுதும் போது,
‘வேறு சில வேளைகளில் இவருக்கு யாரோ சூனியம் வைத்திருக்க வேண்டும் என்று விமர்சனம் செய்தனர். இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டு அதனால் மனநிலை பாதிக்கப்பட்டு உளறுகிறார் என்பது இந்த விமர்சனத்தின் கருத்தாகும்.’ (பிஜே தர்ஜமா பக்:1302)
காஃபிர்கள் கூறிய அர்த்தம் வேறு. அதைத்தான் குர்ஆனின் போக்கு கண்டிக்கின்றது என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டே தவறான வாதத்தை முன்வைத்துக் குர்ஆனுக்கும் ஆதாரபூர்வமான ஹதீஸுக்குமிடையில் முரண்பாடு இருப்பதாகச் சித்தரிக்கும் இவரது தவறான போக்கையும் ஹதீஸ் மீதும், ஹதீஸ் நூற்கள் மீதும், கடந்த கால ஹதீஸ் கலை அறிஞர்கள் அனைவர் மீதும் சந்தேகத்தைத் தோற்றுவிக்கும் இவரது ஆபத்தான போக்கு குறித்தும் மக்கள் விழிப்புடனிருக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
இது வரை நாம் கூறிய விளக்கங்களும் சகோதரர் பிஜே தனது தர்ஜமாவில் குறிப்பிட்டுள்ள மேற்படி கூற்றும் இந்த வசனங்களின் அர்த்தம் வேறு, நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஹதீஸின் அர்த்தம் வேறு என்பதைப் புரிந்துகொள்ளப் போதுமான சான்றுகளாகும். இருப்பினும் ‘மஸ்ஹூர்’ என்ற சொல்லுக்கு இன்னும் இரண்டு விளக்கங்கள் கூறப்படுகின்றன. அவையும் குர்ஆனினது போக்கையும், அறபு மொழியையும் அடிப்படையாகக் கொண்டு அறிஞர்களால் வழங்கப்பட்ட விளக்கங்களே! அந்த விளக்கங்கள் குறித்த பல்வேறுபட்ட குர்ஆன் விளக்கவுரை நூற்கள் பேசியுள்ளன. அவற்றையும் அறிந்துகொள்வது மேலதிக விளக்கத்திற்கு ஏற்றதாக இருக்கும் என எண்ணுகின்றோம்.
சூனியக்காரர் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்ட ‘சூனியம் செய்யப்பட்டவர்’ என்ற பதம்:
அறபு மொழி வழக்கிலும் அல்குர்ஆனிய நடையிலும் செய்தவன் என்பதைச் செய்யப்பட்டவன் என்ற பதம் கொண்டு பயன்படுத்தும் நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
உதாரணமாக மூஸா(அலை) அவர்கள் ஒன்பது அத்தாட்சிகளைக் காட்டுகின்றார்கள். இது குறித்துக் குர்ஆன் கூறும் போது,
நிச்சயமாக நாம் மூஸாவுக்;குத் தெளிவான ஒன்பது அத்தாட்சிகளை வழங்கினோம். (தமது சமூகமாகிய) அவர்களிடம் அவர் வந்த போது (என்ன நிகழ்ந்தது? என நபியே!) நீர் இஸ்ராஈலின் சந்ததியினரிடம் கேட்டுப்பாரும். ‘மூஸாவே! நிச்சயமாக சூனியம் செய்யப்பட்டவராக உம்மை நான் எண்ணுகிறேன்’ என்று பிர்அவ்ன் அவரிடம் கூறினான்.
(17:101)

என்று கூறுகின்றது. ஒன்பது அத்தாட்சிகளை-அற்புதங்களைக் காட்டிய பின் மூஸா நபியைப் பார்த்துச் சூனியக்காரன் எனக் கூறுவானா? சூனியம் செய்யப்பட்டவன் என்று கூறுவானா? என்று கேட்டால் சூனியக்காரன் என்றுதான் கூறுவான் என்று யாரும் பதிலளிப்பர். சகோதரர் கூட அப்படித்தான் பதிலளிப்பார். அவர் அவரது தர்ஜமாவில் இதை எழுத்து மூலம் அளித்துமுள்ளார்.
‘நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் செய்து காட்டிய அற்புதங்களைக் கண்ட போது, ‘இவர் சூனியம் செய்கிறார்’ என்று சிலவேளை விமர்சனம் செய்தனர். (பக்:1302)
எனவே, அற்புதம் செய்தவரைப் பார்த்து مسحور சூனியம் செய்யப்பட்டவர் என்று கூறப்பட்டாலும் அதன் அர்த்தம் ساحر சூனியம் செய்பவர் என்பதுதான். இதை நான் எனது சொந்தக் கருத்தாகக் கூறவில்லை.
மூஸா நபி குறித்து மஸ்ஹூர்-சூனியம் செய்யப்பட்டவர் என்ற பதம் சூனியக்காரர் என்ற அர்த்தத்தில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என அறபு மொழியை அறிந்த அல்குர்ஆன் விளக்கவுரையாளர்கள் பலரும் குறிப்பிட்டுள்ளனர். உதாரணமாக,
002
பொருள்:
(மூஸாவே உன்னை நான் சூனியம் செய்யப்பட்டவராகக் கருதுகிறேன்.) இந்தப் பதம், ‘சூனியக்காரர்’ என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது. அல்லாஹ் மிகவும் அறிந்தவன்.  (தப்ஸீர் இப்னு கதீர்)

அல் பராஉ அவர்களும், அபூ உபைதா அவர்களும் இதன் அர்த்தம் ‘சூனியம் செய்யப்பட்டவர் என்பதல்ல, சூனியம் செய்பவர்’ என்பதுதான் என்று கூறுகின்றனர்.
003
பொருள்:
இன்னும் முஹம்மத் இப்னு ஜரீர் அவர்கள் ‘சூனியம் செய்யப்பட்டவர்’ என்பதன் அர்த்தம் ‘சூனியக் கலை பற்றிய அறிவைப் பெற்றவர். நீ செய்யக்கூடிய இந்த அதிசய செயல்கள் எல்லாம் உனது சூனியத்தால் செய்கிறாய் என்பது இதன் அர்த்தம் என்கின்றார்கள். (சுருக்கம் தப்ஸீர் பகவி)
அல்குர்ஆன் விளக்கவுரையாளர்களின் கூற்றை ஏற்றுக்கொள்ளாதவர்கள் அறபு மொழி வழக்கையாவது ஏற்றுக்கொள்வார்கள் என எண்ணுகின்றேன்.
அத்துடன் மூஸா நபி ஒன்பது அற்புதங்களைக் காட்டிய போது சூனியம் செய்யப்பட்டவர் என்று கூறியதாக ஒரு இடத்தில் வருகின்றது. மற்றொரு இடத்தில் தெளிவாகவே அத்தாட்சிகளைப் பார்த்த போது சூனியக்காரன் என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.
(அனைவரும்) காணும் வகையில் அவர்களிடம் நமது அத்தாட்சிகள் வந்த போது, ‘இது தெளிவான சூனியமே’ என்று அவர்கள் கூறினர்.
இன்னும், அவர்களது உள்ளங்கள் அவற்றை உறுதியாக நம்பியிருந்தும், அநியாயமாகவும் ஆணவத்துடனும் அவற்றை அவர்கள் மறுத்தனர். குழப்பம் விளைவித்தோரின் இறுதி முடிவு என்னவாயிற்று? என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக! (27:13-14)
‘அவர்கள் (இவர்) சூனியக்காரரும், பெரும் பொய்யருமாவார்’ எனக் கூறினர். (40:24)
இது போன்ற வாதங்களை முன்வைத்து ‘சூனியம் செய்யப்பட்டவர்’ என்பது அதன் அர்த்தம் அல்ல; ‘சூனியக்காரர்’ என்பதுதான் அதன் அர்த்தம் என்கின்றார்கள்.
இதற்கு மற்றுமொரு உதாரணத்தை இதே சூறாவில் காணலாம்.
‘குர்ஆனை நீர் ஓதினால் உமக்கும் மறுமையை நம்பிக்கை கொள்ளாதோருக்கும் இடையில், மறைக்கப்பட்ட ஒரு திரையை நாம் ஏற்படுத்தி விடுவோம்.’ (17:45)
இந்த வசனத்தில் حجابا مستورا (மறைக்கப்பட்ட திரை) என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் حجابا ساترا (மறைக்கும் திரை) என்பதுதான் இதன் அர்த்தம் என அல்குர்ஆன் விளக்கவுரைகள் கூறுகின்றன. இதைப் பின்வரும் கூற்று உறுதி செய்கின்றது.
001
‘செய்யப்பட்டவன்’ என்ற பதம், ‘செய்பவன்’ என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படலாம் என்ற அறபு இலக்கண மரபுக்கு இவை ஆதாரமாக அமைகின்றன.
அல்குர்ஆனின் இலக்கிய நடை
இவ்வாறு கூறும் போது ஏன் அல்குர்ஆன் இந்த மொழி நடையைக் கடைபிடிக்க வேண்டும். வெறுமனே ஸாஹிர் என்றே கூறி விட்டுப் போகலாமே! என்ற ஐயம் பலருக்கு ஏற்படலாம். இது குறித்த சிறு விளக்கத்தைப் பெறுவது நல்லது.

அல்குர்ஆன் பொருளை மட்டுமன்றி அழகிய இலக்கிய நயம் கலந்த சொற்பயன்பாட்டிலும் கவனம் செலுத்துகின்றது. இந்த மஸ்ஹூர்-சூனியம் செய்யப்பட்டவர் என்ற பதம் பயன்படுத்தப்பட்ட ஆயத்துக்கு முந்தைய வசனங்கள் மஸ்ஹூரா என்ற சொல்லை ஒத்த ஓசை நயமுடையதாக அமைந்திருப்பதை அவதானிக்கலாம்.
நபி(ஸல்) அவர்களைக் குறித்து மஸ்ஹூரா என அவர்கள் கூறிய வசனத்திற்கு முந்தைய-பிந்திய வசனங்களின் முடிவை அவதானித்தால் இந்த உண்மையை அறியலாம். 17 ஆம் அத்தியாயத்தின் 33 ஆம் வசனம் மன்ஸூரா என்றும், 34 ஆம் வசனம் மஸ்ஊலா என்றும், 35 ஆம் வசனம் தஃவீலா என்றும், 36 ஆம் வசனம் மஸ்ஊலா என்றும், 37 ஆம் வசனம் தூலா என்றும், 38 ஆம் வசனம் மக்ரூஹா என்றும், 39 ஆம் வசனம் மத்ஹூரா என்றும், 40 ஆம் வசனம் அழீமா என்றும், 41 ஆம் வசனம் நுபூரா என்றும், 42 ஆம் வசனம் ஸபீலா என்றும், 43 ஆம் வசனம் கபீரா என்றும், 44 ஆம் வசனம் கபூரா என்றும், 45 ஆம் வசனம் மஸ்தூரா என்றும், 46 ஆம் வசனம் நுபூரா என்றும், 47 ஆம் வசனம் மஸ்ஹூரா, இவ்வாறு இலக்கிய நயத்துடனும் ஒத்த ஓசை நயத்துடனும் அமைந்திருப்பதை அவதானிக்கலாம். இவ்வாறே 25:8 வசனத்திற்கு முந்திய-பிந்திய வசனங்களும் ‘மஸ்ஹூரா’ என்ற ஓசை நயத்துடன் ஒன்றித்திருப்பதை அறியலாம். எனவே, அறபு இலக்கண விதிகளில் இடமிருப்பதாலும், அல்குர்ஆன் பயன்படுத்தியிருப்பதாலும், இந்த இடத்தில் ‘மஸ்ஹூர்’ என்ற பதம் பயன்படுத்தப்பட்டாலும் அது ‘ஸாஹிர்’ என்ற அர்த்தத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி ‘சூனியக்கார மனிதனைத்தான்’ இவர்கள் பின்பற்றுகின்றனர் என்று அநியாயக்காரர்கள் கூறகின்றனர் என்பது அந்த வசனத்தின் விளக்கமாகும்.
அனைத்து இறைத் தூதர்களும் ‘சூனியக்காரர்கள்’ என எதிரிகளால் விமர்சிக்கப்பட்டுள்ளனர்.
‘இவ்வாறே, இவர்களுக்கு முன்பிருந்தோரிடம் எந்தத் தூதர் வந்த போதும், ‘(இவர்) சூனியக்காரர் அல்லது பைத்தியக்காரர்’ என அவர்கள் கூறாமல் இருந்ததில்லை.’ (51:52)
எனக் குர்ஆனும் கூறுகின்றது. இந்த அடிப்படையில் அர்த்தம் செய்யும் போது அந்த அர்த்தத்திற்கும், ஹதீஸிற்குமிடையில் எந்த முரண்பாடும் இல்லை என்பது தெளிவு. முன்னைய அர்த்தத்தின்படி சூனியம் செய்யப்பட்ட மனிதர் என்று அர்த்தம் செய்தாலும், காஃபிர்கள் கூறிய நோக்கத்திற்கும் இந்த ஹதீஸ் கூறும் அர்த்தத்திற்குமிடையில் பாரிய வேறுபாடு உள்ளது என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டோம்.
சந்தேக நிவர்த்தி:
‘மஸ்ஹூர்’ என்ற பதம் ‘ஸாஹிர்’ (சூனியக்காரர்) என்ற அர்த்தத்திலும் பயன்படுத்தப்படலாம் என்பதை அறபு மொழி வழக்கின் படியும் அல்குர்ஆன் ஒளியிலும் நாம் விளக்கியுள்ளோம். எனினும், அதற்கான காரணம் கூறும் போது ஓசை நயம், இலக்கிய நயம் குறித்துப் பேசியுள்ளோம். இதை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் குர்ஆனின் அடிப்படையிலும், குர்ஆன் விளக்கவுரைகளின் அடிப்படையிலும் நாம் கூறியதை மறுப்பதற்கு வாய்ப்பு இல்லை எனக் கருதுகின்றோம். இருப்பினும் அல்குர்ஆன் ஓசை நயம் குறித்துக் கவனம் செலுத்துகின்றது என்பதை நிரூபிக்கச் சிறியதொரு உதாரணத்தைத் தர விரும்புகின்றோம்.

அல்குர்ஆனில் மூஸா-ஹாரூன் ஆகிய நபிமார்கள் பற்றிக் கூறும் போது முதலில் மூஸா நபியையும், அடுத்ததாக ஹாரூன் நபியையும் குறிப்பிடப்படும். (2:248, 7:122) 10:75, 21:48, 23:45, 26:48, 37:114, 37:120) இவ்வாறு அனைத்து இடங்களிலும் மூஸா-ஹாரூன் என இடம்பெற்றிருக்க,
சூனியக்காரர்கள் சுஜூது செய்தவர்களாக வீழ்த்தப்பட்டு, ‘ஹாரூன் மற்றும் மூஸா வின் இரட்சகனை நாம் நம்பிக்கை கொண்டு விட்டோம்’ எனக் கூறினர்.
(20:70)

என மேற்படி வசனத்தில் மட்டும் ‘ஹாரூன் வ மூஸா’ என மாறி இடம்பெற்றுள்ளது. குறிப்பாக, 7:122, 26:48 ஆகிய வசனங்களும் இதே செய்தியைத்தான் பேசுகின்றது. எனினும், 20:70 இல் மட்டும் ஹாரூன் நபியின் பெயர் முற்படுத்தப்பட்டுள்ளது. ஏனெனில், இந்த வசனங்களுக்கு முந்திய வசனங்கள் அல்கா, தஸ்ஆ, மூஸா, அஃலா, அதா என இடம்பெறுவதால் இந்த ஓசை நயத்திற்கு ‘ஹாரூன்’ என்பதை இறுதியாக முடிப்பதை விட ‘மூஸா’ என்பதைக் கொண்டு வருவதே பொருத்தமாகும். இதே போல இதற்குப் பிந்திய வசனங்கள் அப்கா, துன்யா, அப்கா, யஹ்யா, உலா எனத் தொடர்கின்றன. இந்த இடத்தில் வழமை போன்று ஹாரூன் நபியின் பெயரை இறுதியில் போட்டால் ஓசை நயம் அடிபடுகின்றது. எனவே, ஓசை நயத்தைக் கருத்தில் கொண்டு ‘மூஸா’ என்ற பதம் இறுதியில் போடப்பட்டுள்ளது.
எனவே, நபி(ஸல்) அவர்களைச் சூனியம் செய்யப்பட்டவர் என்பதற்குப் பயன்படுத்தப்பட்ட அந்த இடத்தில் ‘சூனியம் செய்பவர்’ என்ற அர்த்தமுடைய ‘ஸாஹிர்’ என்ற பதம் பயன்படுத்தப்படாமல் ‘மஸ்ஹூர்’ என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது!
‘ஸாஹிர்’ என்பதற்குப் பகரமாக ‘மஸ்ஹூர்’ என்ற பதம் பயன்படுத்தப்பட்டிருப்பதை குர்ஆனின் மூலமே நாம் நிரூபித்திருப்பதால் இந்தக் காரணத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால் கூட இந்த வாதத்தின் வலிமை குன்றாது என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.
உணவு உண்பவர்:
மஸ்ஹூர்-சூனியம் செய்யப்பட்டவர் என்ற வசனத்திற்கு அறபு மொழி அகராதியின்படி அல்குர்ஆன் விளக்கவுரையாளர்கள் பலரும் ‘மஸ்ஹூர்’ என்றால், ‘உணவு உண்பவர்’ என்ற விளக்கத்தினை அளித்துள்ளனர். தமிழ் மொழிக்கு இது புது விளக்கமாகத் தெரிந்தாலும், பல குர்ஆன் விளக்கவுரைகள் இது குறித்துப் பேசியுள்ளன.

004-5
நபி(ஸல்) அவர்களை அவர் மஸ்ஹூர்ரான மனிதர் என்று கூறினர். பிரபலமான கருத்தின்படி சூனியத்தைக் குறிக்கும் மற்றொரு கருத்தின்படி ‘ஸஹ்ர்’ என்றால் நுரையீரலைக் குறிக்கும். அதாவது, நீங்கள் முஹம்மதைப் பின்பற்றினால் உண்டு-குடிக்கக்கூடிய (சாதாரண) மனிதனைத்தான் பின்பற்றுகின்றீர்கள் என அவர்கள் கூறியுள்ளனர். (லபீத் இப்னு ரபீஆ எனும்) கவிஞனின் கூற்றும் இம்ரஉல் கைஸ் என்ற கவிஞனின் கவிதையும் இந்த மொழி நடைக்குச் சான்றாகும்.  (சுருக்கம்)
006
நுரையீரல் உள்ள ஒரு மனிதனைத்தான் நீங்கள் பின்பற்றுகின்றீர்கள். அவர் உண்கிறார்; பருகுகிறார்; உணவின் பாலும், பாணத்தின் பாலும் தேவையற்ற ஒரு மலக்கை நீங்கள் பின்பற்றவில்லை என்பதே இந்த வசனத்தின் அர்த்தமாகும். (குர்தூபி)
இவ்வாறே ‘மஸ்ஹூர்’ என்பதற்கு ‘உணவு உண்பவர்’, ‘சாதாரண மனிதர்’ என்ற கருத்து இருப்பதாகப் பல அறிஞர்களும் குறிப்பிட்டுள்ளனர். சில அறிஞர்கள் இந்தக் கருத்தை ஏற்க மறுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற கருத்தை அங்கீகரிக்கும் அறிஞர்கள் இவரும் எம்மைப் போலவே உணவு உண்ணக்கூடிய சாதாரண மனிதர் இவர் எப்படி இறைத் தூதராக இருக்க முடியும்? என்ற கருத்தில் நபித்துவத்தை மறுத்ததைச் சுட்டிக்காட்டுகின்றனர்.
26:153, 185 ஆகிய இரண்டு வசனங்களிலும் இந்தப் பதம் பயன்படுத்தப்பட்ட பின்னர், ‘நீரும் எம்மைப் போன்ற மனிதர்தான்’ என்று காஃபிர்கள் கூறியுள்ளனர். இதிலிருந்து ‘முஸஹ்ஹரீன்’ என்ற பதத்தை ‘சூனியம் செய்யப்பட்டவர்’ என்ற அர்த்தத்தில் அவர்கள் பயன்படுத்தவில்லை. ‘எம்மைப் போல உணவு உண்ணக்கூடிய சராசரி மனிதர்’ என்ற அர்த்தத்திலேயே பயன்படுத்தியுள்ளனர் என்பது புலனாகின்றது.
இவ்வாறு நோக்கும் போது, நபி(ஸல்) அவர்கள் குறித்து ‘மஸ்ஹூர்’ என்ற பதம் பயன்படுத்தப்பட்ட போதும் ‘இவரும் எம்மைப் போன்ற மனிதர்தானே’ என்ற இதே தோரனையில்தான் பேசப்படுகின்றது.
‘இத்தூதருக்கு என்ன நடந்தது? உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடந்து திரிகின்றார். இவருடன் ஒரு வானவர் இறக்கப்பட்டு, அவர் இவருடன் எச்சரிக்கக் கூடியவராக இருக்க வேண்டாமா?’ என்றும் கூறுகின்றனர்.  (25:7)
என நபி(ஸல்) அவர்கள் உணவு உண்பவராக இருக்கிறார். அதுவும் கஷ்டப்பட்டு உண்பவராக எம்மைப் போலவே இருக்கின்றார். இப்படிப்பட்ட சராசரி மனிதர் எப்படி இறைத் தூதராக இருக்க முடியும்? என்ற அர்த்தத்தில்தான் உணவு உண்ணக்கூடிய ஒருவரைத்தான் நீங்கள் பின்பற்றுகின்றீர்கள் என அநியாயக்காரர்கள் கூறியதாகக் குர்ஆன் குறிப்பிடுகின்றது.
இந்த அடிப்படையில் நீங்கள் மஸ்ஹூரான ஒருவரைப் பின்பற்றுகிறீர்கள் என்ற வசனத்திற்குச் சூனியம் செய்யப்பட்டவர் அல்லது சூனியக்காரரை அல்லது உணவு உண்பவரை என்ற எந்த அர்த்தத்தை எடுத்தாலும் அந்த அர்த்தத்திற்கும் நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஆதாரபூர்வமான அறிவிப்புக்குமிடையில் எந்த முரண்பாடும் இல்லை என்பது தெளிவு.
இந்த வசனமும், ஹதீஸும் முரண்படுவதாகக் குர்ஆனுக்கு விளக்கம் எழுதிய எந்த அறிஞரும் கருதவில்லை. முற்கால அறிஞர்களில் (முஃதஸிலா போன்ற வழிகேடர்களைத் தவிர) எவரும் இந்த வசனம் அந்த ஹதீஸிற்கு முரண்பட்டதாகக் கருதவில்லை. அப்படி இருக்கும் போது இவருக்கு மட்டும் இந்த வசனங்களுக்கும், ஹதீஸிற்குமிடையில் முரண்பாடு இருப்பதாகத் தோன்றுகின்றது என்றால் அவர்கள் அனைவரும் குர்ஆனைத் தவறாகப் புரிந்துகொண்டார்கள் என்று கூறுவதா? அல்லது இவர் தான் புரிந்துகொள்வதில் ஏதோ தவறு விடுகின்றார் எனக் கருதுவதா? எது நடுநிலையான முடிவாக இருக்கும்? அவர்கள் அனைவருக்கும் தவறு வருவதற்கான வாய்ப்பை விட இவர் ஒருவருக்குத் தவறு வருவதற்கான வாய்ப்புத்தானே அதிகமாக உள்ளது?
இவர் இவரது விளக்கவுரையில் ‘அவர்கள் சூனியம் செய்யப்பட்டவர்’ என்று கூறியது நபிமார்களின் தூதுத்துவத்தையே முற்று-முழுதாக உளறல் என்று கூறுவதற்காகத்தான் என்று கூறியிருக்கும் போது, அப்படிக் கூறி விட்டு அந்த அர்த்தத்தில் கூறப்பட்ட குர்ஆன் வசனத்திற்கும், இந்த நபிமொழிக்கும் முரண்பாடு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறதல்லவா? எனவே, இந்த ஹதீஸை ஏற்பது குறைஷிக் காஃபிர்களின் கூற்றை உண்மைப்படுத்துவதாக இருக்கின்றது என்ற தவறான வாதத்தின் அடிப்படையில் இந்த ஹதீஸை மறுப்பது தவறானதாகும் என்பது தெள்ளத்-தெளிவாகத் தெரிகின்றது.
அடுத்ததாக, இந்த ஹதீஸின் வார்த்தைப் பிரயோகங்களில் முரண்பாடு இருக்கின்றது என்ற அடிப்படையில் இந்த ஹதீஸை நிராகரிப்பது நியாயம்தானா? என்பதை ஆராய்வோம்.
குறிப்பு: இன்ஷா அல்லாஹ். அடுத்த இதழுடன் இந்த ஹதீஸ் சம்பந்தமான அனைத்து வாதங்களுக்கும் மறுப்பு கூறப்பட்டு விடும். எனவே, இது குறித்த மேலதிக சந்தேகங்கள் இருப்பின் வாசகர்கள் எழுத்து மூலம் அறியத் தந்தால், ‘இன்ஷா அல்லாஹ்’ அடுத்தடுத்த இதழ்களில் அவற்றுக்கு பதில் தரலாம்.
உண்மை உதயம் மாதஇதழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.