பித்அத்தின் தீய விளைவுகள் – 1

முஸ்லிம் உம்மத்தில் இஸ்லாத்தின் பெயரில் தோன்றிய வழிகேடுகளே பித்அத்துகளாகும். இந்த பித்அத்துகளால் பல்வேறுபட்ட பாரதூரமான எதிர்விளைவுகள் உருவாகின்றன. ஆனால், பித்அத்தான விடயங்களைச் சாதாரணமாகக் கருதும் சிலர், அவற்றைச் செய்வதில் பின்னிற்பதில்லை.

அது போல், பித்அத் பற்றிப் பேசுபவர்களை சின்னத்தனமாய் நோக்கும் நிலையும் காணப்படுகிறது. எது எவ்வாறாயினும், பித்அத் புரிவோர் பல பாதிப்புகளை சம்பாதிக்கின்றனர் என்பது நபி(ஸல்) அவர்களின் கண்டிப்பான எச்சரிக்கையாகும். அப்பாதிப்புகளை முறையாக உணர்ந்தால்தான் பித்அத் எவ்வளவு பாரதூரமான குற்றம் என்பதை உணரலாம். எனவே பித்அத் ஏற்படுத்தும் தீய விளைவுகள் குறித்து சுருக்கமாகப் புரிந்துகொள்ள முனைவோமாக!

(1) குப்ருக்கு இட்டுச் செல்லுதல்:
பித்அத், குப்ர் அல்ல என்றாலும் அது காலப் போக்கில் குப்ர் ஏற்பட வழி விடுகின்றது. நபியைப் புகழ வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். மவ்லூதுகளை உருவாக்கினார்கள்; புகழ்ந்தார்கள். ஷிர்க்கையும், குப்ரையும் ஏற்படுத்தும் அளவுக்கு புகழ் பாக்கள் வரம்பு மீறிச் சென்றன. இறந்து விட்ட நல்லடியார்களை கண்ணியப்படுத்துவதற்காக கப்ருகளைக் கட்டினர். அதுவே இறந்தவர்களிடம் பிரார்த்தனை புரிதல், அவர்களுக்காக அறுத்துப் பலியிடல், அவர்களுக்காக நேர்ச்சை வைத்தல் எனப் பல ஷிர்க்குகளை ஏற்படுத்தியது.

எனவே பித்அத் ஷிர்க்குக்கும், குப்ருக்குமான பாதையைத் திறந்து விடுகின்றது என்ற வகையில் பாரதூரமாகப் பார்க்கப்பட வேண்டிய விடயமாகும் என்பதை மறுக்க முடியாது.
“நீங்கள் உங்களுக்கு முன்பிருந்தவர்களின் வழிமுறைகளைச் சாணுக்குச் சாண், முழத்துக்கு முழம் பின்பற்றுவீர்கள். அவர்கள் ஒரு உடும்புப் பொந்தினுள் நுழைந்தாலும் நீங்கள் அவர்களைப் பின்பற்றி நுழைவீர்கள்!” என நபி(ஸல்) கூறினார்கள். நபித் தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் யூதர்களும், கிறிஸ்தவர்களுமா?” எனக் கேட்டனர். அதற்கு, நபி(ஸல்) அவர்கள் “வேறு யார்?” எனக் கேட்டார்கள்.
(புகாரி 7320, முஸ்லிம் 2669)

அந்நியர்களைப் பின்பற்றுவதன் மூலம் இந்த உம்மத் தடம் மாறிச் செல்லும் என்பதை இந்த ஹதீஸ் உறுதி செய்கின்றது.
அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
“வேதத்தைக் கையில் வைத்துக் கொண்டே எப்படி அவர்கள் நிராகரிப்பில் வீழ்ந்தார்களோ அதே நிலை இந்த உம்மத்திலும் தோன்றும்! (யெமனைச் சேர்ந்த) தவ்ஸ் குலத்துப் பெண்கள் சிலைகளைச் சுற்றி வராத வரையில் மறுமை நாள் ஏற்பட மாட்டாது!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 7116, 6699, முஸ்லிம் 2906, 7482)

முஸ்லிம் உம்மத்தில் சிலை வணக்கம் ஏற்படும் என இந்த ஹதீஸ் கூறுகின்றது. இது ஒரேயடியாக ஏற்படும் தீடீர் மாற்றமாக இருக்காதது. கொஞ்சம் கொஞ்சமாக மார்க்கத்தை விட்டும் தடம் புரண்டு சென்று ஈற்றில் இந்த நிலைக்கு தவ்ஸ் கோத்திரம் வந்து நிற்கும் என்பதைத்தான் இந்த ஹதீஸ் எடுத்துக் காட்டுகின்றது.
எனவே பித்அத்கள்தான் இந்த உம்மத்தில் ஷிர்க்கும், குப்ரும் தோன்றுவதற்கு வழிவகுக்கின்றன என்பது எச்சரிக்கையுடன் பார்க்கப்பட வேண்டிய அம்சமாகும்.
(2) அல்லாஹ்வின் மீதும், தூதர் மீதும் இட்டுக்கட்டுதல்:
பித்அத் செய்வோர் அல்லாஹ்வின் மீதும், அவனது தூதர் மீதும் அதிகமதிகம் பொய்களை இட்டுக்கட்டிக் கூறுகின்றனர். அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்லாதவற்றைச் சொன்னதாகத் துணிந்து கூறுவார்கள்.

இந்த வகையில் பித்அத்துகள் அல்லாஹ்வின் மீதும், அவனது தூதர் மீதும் இட்டுக்கட்டுதல் என்ற பெரும் குற்றத்துக்கு வழி வகுக்கின்றது.
“அல்லாஹ்வின் விடயத்தில் அறிவின்றித் தர்க்கம் புரிவோரும், மூர்க்கத்தனமான ஒவ்வொரு ஷைத்தானையும் பின்பற்றுவோரும் மனிதர்களில் உள்ளனர். நிச்சயமாக யார் (ஷைத்தானாகிய) அவனைப் பின்பற்றுகிறானோ அவனை அவன் வழிகெடுத்து, நரக வேதனையின்பால் வழி நடத்துவான் என அவன் மீது விதிக்கப்பட்டு விட்டது.” (22:3-4)
“அறிவின்றியும், நேர்வழி இல்லாமலும், ஒளி பொருந்திய வேதமில்லாமலும் அல்லாஹ்வின் விடயத்தில் தர்க்கம் புரிவோரும் மனிதர்களிலுள்ளனர். அவன் அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழிகெடுப்பதற்காகத் தனது கழுத்தைத் திருப்பிக் கொண்டவன். அவனுக்கு இவ்வுலகில் இழிவுதான். மேலும், நாம் அவனுக்கு மறுமை நாளில் சுட்டெரிக்கும் வேதனையைச் சுவைக்கச் செய்வோம்.” (22:8-9)
“..அல்லாஹ்வின் விடயத்தில் எவ்வித அறிவோ, வழிகாட்டலோ, ஒளி பொருந்திய வேதமோ இன்றி தர்க்கிப்போரும் மனிதர்களில் உள்ளனர். அல்லாஹ் இறக்கியவற்றையே பின்பற்றுங்கள் என அவர்களுக்குக் கூறப்பட்டால், “இல்லை! எமது மூதாதையர்கள் எதி லிருக்கக் கண்டோமோ அதையே நாம் பின்பற்றுவோம் என அவர்கள் கூறுகின்றனர். ஷைத்தான் அவர்களை நரக வேதனையின் பால் அழைத்தாலுமா? (பின் பற்றுவர்?)” (31:20-21)
மேற்படி வசனங்கள் அல்லாஹ்வின் விடயத்தில் தகுந்த ஆதாரம் இல்லாமல் பேசுவது எவ்வளவு பாரதூரமானது என்பதையும், அவர்களது பண்புகள் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்பன பற்றியும் பேசுகின்றன.
அனஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
“யார் என் மீது வேண்டுமென்றே இட்டுக் கட்டுகின்றாரோ அவர் தனது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக்கொள்ளட்டும்!” என இது குறித்து நபி(ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள்.
(புகாரி 168, முஸ்லிம் 2)

எனவே பித்அத் அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர் மீதும் இட்டுக்கட்டுதல் எனும் நரகத்துக்கு இட்டுச் செல்லும் பெருங்குற்றத்துக்குக் காரணமாக அமைகின்றது என்ற வகையிலும் எச்சரிக்கையுடன் கையாளப்பட வேண்டிய அம்சமாகத் திகழ்கின்றது.
(3) ஸுன்னாவை வெறுக்கும் மனோநிலை ஏற்படல்:
பித்அத் செய்வோர் ஸுன்னாவை வெறுக்கின்றனர். ஹதீஸ்களைப் புறக்கணிக்கின்றனர். சில போது ஹதீஸ்களையும், ஸுன்னத்துகளையும் கேலி செய்தும், கிண்டல் செய்தும் பேசுகின்றனர். இது பித்அத்தால் ஏற்படும் பெரிய விபரீதங்களில் ஒன்றாகும்.

அல்லாஹ்வின் தூதரையோ, அவரது போதனைகளையோ கிண்டல் செய்வதும், கேலி செய்வதும் குப்ரை ஏற்படுத்தும் குற்றங்களாகும்.
“(இது பற்றி) அவர்களிடம் நீர் கேட்டால், “நாங்கள் (வீண்) பேச்சில் மூழ்கியும், விளையாடிக் கொண்டுமிருந்தோம்” என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள். அல்லாஹ்வையும், அவனது வசனங் களையும், அவனது தூதரையுமா நீங்கள் பரிகசித்துக் கொண்டிருந்தீர்கள்? என்று (நபியே!) நீர் கேட்பீராக!”
“போலிக் காரணம் கூறாதீர்கள். நீங்கள் நம் பிக்கை கொண்ட பின்னர் நிச்சயமாக நிராகரித்து விட்டீர்கள். உங்களில் ஒரு கூட்டத்தை நாம் மன்னித்தாலும் மற்றொரு கூட்டத்தாரை அவர்கள் குற்றம் புரிபவர்களாக இருந்த காரணத்தினால் நாம் தண்டிப்போம் (என்றும் கூறுவீராக!)” (9:65-66)
அல்லாஹ்வையும், அவனது ஆயத்துகளையும், அவனது தூதரையும் கேலி செய்தவர்களைப் பார்த்து நீங்கள் ஈமானுக்குப் பின்னர் நிராகரித்து விட்டீர்கள் என இந்த வசனம் கூறுவதால் அல்லாஹ்வின் தூதரையோ, அவரது போதனைகளையோ கேலி செய்வது குப்ரை ஏற்படுத்தும் குற்றச் செயல் என்பது உறுதியாகின்றது. பித்அத் செய்வோர் இந்தக் குற்றத்தைச் செய்கின்றனர்.
அடுத்து ஸுன்னாவையும், ஸுன்னாவைப் போதிக்கும் அறிஞர்களையும் பகைத்துக்கொள்கின்றனர். அவர்களுக்கு எதிராகச் செயற்படுகின்றனர். அவர்களை அவமதிக்கின்றனர். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அவர்கள் மீதான கோபத்தையும், வெறுப்பையும் வெளிப்படுத்துகின்றனர்.
அறிஞர் இஸ்மாயில் இப்னு அப்துர் ரஹ்மான்(றஹ்) அவர்கள் இது பற்றிக் கூறும் போது;
“பித்அத்காரர்களுக்கெனப் பல வெளிப்படை யான அடையாளங்கள் உள்ளன! அவர்களின் வெளிப்படையான அடையாளங்களில் பிரதானமானது நபி(ஸல்) அவர்களது செய்திகளைச் சுமந்திருப்போர் மீது வெறுப்பை வெளிப்படுத்துவதும், அவர்களை இழிவுபடுத்துவதுமாகும்!” எனக் குறிப்பிடுகின்றார்கள்.
(அகீதது அஹ்லுஸ் ஸுன்னா வ அஸ்ஹாபுல் ஹதீஸ் 299)

எனவே, பித்அத் செய்வோர் இந்தக் குற்றத்திலும் வீழ்கின்றார்கள். இதுவும் பித்அத் ஏற்படுத்தும் தீய விளைவுகளில் ஒன்றாகும்.
(4) அமல்கள் புறக்கணிக்கப்படுதல்:
பித்அத் செய்வோர் பணத்தையும், நேரத்தையும், காலத்தையும் செலவிட்டு இல்லாத வழிபாடுகளைச் செய்கின்றனர். அவை அத்தனையும் புறக்கணிக்கப்படும் என்பது நபியவர்களது எச்சரிக்கையாகும்.

அல்லாஹ்வினால் அவர்களுக்கு எந்த நற்கூலியும் வழங்கப்படாத அதே நேரத்தில் அவர்கள் தண்டனையையும் சந்திக்க நேரிடும்.
“எமது மார்க்கத்தில் இல்லாததை எவர் செய்கின்றாரோ அது நிராகரிக்கப்படும்!” என்ற ஹதீஸ்களும், பித்அத் வழிகேடு என்று என்று கூறும் ஹதீஸ்களும் இதைத்தான் கூறுகின்றன. எனவே பித்அத் செய்வோர் தமது இம்மை-மறுமை இரண்டையும் தாமே அழித்துக்கொள்கின்றனர். ஷைத்தான் நன்மையைக் காட்டி இவர்களை நரகத்துக்கு அழைத்துச் சென்று விடுகின்றான்.
(5) மோசமான முடிவைச் சந்திக்க நேரும்:
தவறுகள் செய்வோர் அவற்றைத் தவறு என்று அறிந்தே செய்கின்றனர். திருடுதல், பொய் சொல்லுதல், விபசாரம் செய்தல் – இவையெல்லாம் ஹறாம் என்பது அனைவருக்கும் தெரியும். இவற்றைச் செய்வோர் தாம் செய்வது தவறு என்பதை உணர்ந்தே செய்கின்றனர். இவர்கள் அல்லாஹ்விடம் தவ்பாச் செய்ய அதிகம் வாய்ப்புள்ளது.

பித்அத் புரிவோர் நல்லறம் புரிவதாகவே நினைத்துக்கொள்கின்றனர். ஆனால் அவர்கள் தவறுதான் செய்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் தவ்பாச் செய்யாமல் மரணித்து மோசமான இறுதி முடிவை அடைவர். இந்த வகையில் ஷைத்தானுக்குப் பெரும் பாவங்களை விட பித்அத் விருப்பத்துக்கு உரியதாகும்.
இது குறித்து இமாம் சுப்யான் அத்தவ்ரீ(றஹ்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்;
“பெரும் பாவங்களை விட பித்அத்துகள் ஷைத்தானுக்கு விருப்பத்துக்கு உரியதாகும். ஏனெனில் பெரும் பாவங்களிலிருந்து பாவ மன்னிப்புக் கோரப்படலாம். ஆயினும் பித்அத்துகளில் இருந்து பெரும்பாலும் பாவ மன்னிப்புக் கோரப்படுவதில்லை!” என்று குறிப்பிடுகின்றார்கள்.
(ஷரஹுஸ் ஸுன்னா லில் பகவீ)

எனவே தீய இறுதி முடிவை ஏற்படுத்தக் கூடியது என்ற வகையில் பித்அத் குறித்து எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டியுள்ளது.
(6) தலைகீழாக மாறி விடும் பித்அத்காரனின் அறிவு:
பித்அத் செய்வோர் நல்லதைத் தீமை என்றும், தீமையை நன்மை என்றும் தலைகீழாக விளங்கிக்கொள்வர். மார்க்கத்தில் இல்லாததை மார்க்கக் கடமை போலக் கருதிச் சண்டையும் செய்வர். மார்க்கத்தில் உள்ளதைச் சில போது கண்டுகொள்ளாது விட்டு விடுவர்.

தொப்பி போடாமல் தொழுபவருக்கு எதிராகப் போர்க் கொடி தூக்குவர். பெண்கள் தலை மூடாதது குறித்துக் கண்டுகொள்ள மாட்டார்கள். இந்த நிலை அவர்களிடத்தில் குழப்பமான ஒரு பார்வையை ஏற்படுத்தி விடும்.
இவர்களின் இந்தத் தவறான புரிதல் பற்றி ஹுதைபா(ரழி) பின்வருமாறு கூறுகின்றார்கள்;
“பித்அத் பரவும். அதிலொன்று விடுபடும் போது மக்கள் ஸுன்னா விடுபட்டது என்று கூறுவர்!”
இதே கருத்தை இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்களும் குறிப்பிடுகின்றார்கள். மார்க்கத்தின் ஒரு கடமை விடுபட்டாலும் கவலைப்படாத பித்அத்காரர் ஒருவர் கூட்டு துஆவோ, தல்கீனோ, பாத்திஹாவோ விடுபடும் போது அதற்கெதிராகப் போராடுபவராக மாறி விடுகின்றார். இந்த தலைகீழாக மாறி விளங்கும் போக்கு மடமைப் போக்கு என்பது பித்அத் ஏற்படுத்தும் தீய விளைவுகளில் ஒன்றாகும்.
ஒரு விடயத்தைத் தவறாக விளங்கிக்கொள்தல் தவறில் பாதியாகும். இந்தப் பாவத்தில் இருந்தும் பா(த்)திலில் இருந்தும் விடுபட பித்அத் குறித்து மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.