உலகம் சுற்றிய பேரரசர் துல்கர்னைன் – 2 [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-21]

துல்கர்னைன் இளமைப் பருவத்தை அடைந்த போது தனது சமூகத்தின் அடிமைத்தனத்தையும் பலவீனத்தையும் கண்டு கலங்கினார். இந்த அடிமைத்துவ ஆஸ்திகளையெல்லாம் அறுத்தெறிந்து தன் சமூகத்தைச் சுதந்திரமடையச் செய்ய வேண்டும் என்று அவர் மனம் ஆயிரம் விடுத்தம் அடித்துச் சொன்னது. சிறிது காலத்திலேயே துல்கர்னைன் பிரபல்யம் பெற்றார். அவரது கருத்துக்கள் வெகுவேகமாகப் பரவின. மக்கள் அவரால் கவரப்பட்டனர். மக்கள் அவரால் கவரப்பட்டனர். அந்தப் பகுதி மக்கள் அனைவரும் அவருக்குக் கட்டுப்பட்டனர். அவரது தலைமையை ஏற்றனர். இழந்த உரிமைகளை மீளப் பெற்று, பூரண சுதந்திரத்தை அடையும் வரை அவருக்குக் கட்டுப்பட்டு எதிரிகளுடன் போராடத் தயார் என்று அவருக்குச் சத்தியம் செய்து கொடுத்தனர். இதன்பின் மக்கள் மனதில் மானத்தோடு வாழ வேண்டும் என்ற உணர்வு மேலோங்கி இருந்தது. துல்கர்னைனும் தனது மக்கள் மீது நம்பிக்கை கொள்ளலானார்.

கப்பம் கட்ட எதிர்ப்பு
இந்த நாட்டு மக்கள் அண்டை நாட்டு அநியாயக்கார அரசனுக்கு வருடா வருடம் கப்பம் கட்டுவது வழக்கம். ஒவ்வொரு வருடமும் தூய்மையான தங்கத்திலான சில முட்டைகளை அவர்கள் கப்பம் செலுத்த வேண்டும். அந்த அரசன் வருடா வருடம் தனது தூதர்களை அனுப்புவான். இவர்கள் பவ்வியமாக கப்பத்தை அவர்களிடம் செலுத்துவர். துல்கர்னைனின் பிரச்சாரம் வலுப்பெற்றிருந்த வேளையில் தூதர்கள் கப்பம் சேர்க்க வரும் காலமும் வந்தது. தூதர்களும் வந்தனர். துல்கர்னைன் தூதர்களைத் துரத்தியடித்தார். அந்த அநியாயக்கார அரசனுக்கு ஒரு கடிதமும் அனுப்பினார். அதில், “அந்த முட்டை போடும் கோழியை நான் அறுத்துச் சாப்பிட்டு விட்டேன். இதன்பின் என்னிடம் கப்பம் எதுவும் உனக்கு வந்து சேராது” என்றும் எழுதினார். கடிதத்தைக் கண்ட அரசன் கோபத்தில் குமுறினான். எனினும் துல்கர்னைன் ஒரு சிறுவயது இளைஞர் என்பதை அறிந்ததும் அவருக்கு இது விளையாட்டாகப்பட்டது.

இந்தப் பொடிப்பயல் என்னுடன் மோதுவதா என்று தனக்குள் அவன் எண்ணிக் கொண்டான். தான் இதனைப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை என்பதைக் காட்டுவதற்காகவும் துல்கர்னைனை கேலி செய்யுமுகமாகவும் ஒரு கடிதத்தை அனுப்பினான். அதில், அரசனின் கேலியும் அதற்கு பதிலடியும் “இந்தக் கடிதத்துடன் அனுப்பியுள்ள பந்தும் மட்டைகளும் விளையாடுவதற்காகும். உனக்கு விளையாட்டுத் தான் பொருத்தம். ஆட்சிக்குரிய அருகதை உனக்கு இல்லை. ஆட்சி மோகத்தில் உன்னை அழித்துக் கொள்ளாதே! நீ எனக்குக் கட்டுப்பட வேண்டும். இல்லையென்றால் நான் அனுப்பிய எள்ளுப் போத்தல்களில் எள்ளுகளை விட அதிகமான தோழர்களும் படைகளும் உனக்கிருந்தாலும் உன்னை விலங்கிட்டு கைது செய்து வரும் படைதான் உன்னிடம் வரும்” என்று எச்சரித்து எழுதியிருந்தான்.

இந்தக் கேலியும் கிண்டலும் கலந்த கடிதத்திற்கு அதே தோரனையில் துல்கர்னைன் பதிலளித்தார். “உன் மடலில் உள்ளவை அறிந்தேன். ஆனால் உண்மை அதற்கு எதிர்மாறானதாகும். நீ அனுப்பி மட்டை, ஆட்சியாகும். இன்ஷாஅல்லாஹ் அதை நான் கைப்பற்றுவேன். பந்து உனது ஆட்சிக்குட்பட்ட பூமியாகும். மட்டையினால் நான் அதை அடிப்பேன். உனது படை நீ அனுப்பிய எள்ளின் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தபோதும் அதன் அதிகாரத்தை நான் அடைவேன்”.இப்படி பதில் மடல் அனுப்பிய துல்கர்னைன் இதனைக் கண்டு சினமுற்று அரசன் போருக்குத் தயாராவான் என்பதை உணர்ந்திருந்தார். எனவே, தனது தோழர்களை யுத்தத்திற்கு தயாராக இருக்குமாறு அழைப்பு விடுத்தார். மக்கள் தமது ஆயுதங்களைத் தயார் செய்து யுத்தத்திற்காக வெளியேறும் நாளை எதிர்பார்த்திருந்தனர். படை பரிபூரணமாகத் தயாராகி விட்டதை உணர்ந்த துல்கர்னை, எதிரியை முந்திக்கொள்வதற்கு இடம் கொடுக்காமல் தானே முதலில் படையை வழிநடத்தினார்.

படை திரண்டது எதிரிகள் உள்ளத்தில் அச்சம் எதிரிநாட்டு அரசப் படையை எதிர்கொள்ளத் தக்க எண்ணிக்கையில் வீரர்கள் இவர்களிடம் இருந்தனர். ஆயுதமும் போதியளவு இருந்தது. துல்கர்னைனின் படை வருவதை அறிந்த எதிர்நாட்டவரது உள்ளத்தில் அல்லாஹ் அச்சத்தைப் போட்டான். அச்சத்திற்குள்ளான பிரமுகர்களும் அறிஞர்களும் அரசனிடம் சென்று “நீங்கள் துல்கர்னைனுடன சமாதான ஒப்பந்தம் செய்வதுதான் நல்லது. அவர் பெரும் படையுடன் வருகிறார். அவரது வீரர்களும் கடுமையானவர்கள். அவர்களுடன் அவரது படையுடனும் மோதும் பலம் எமக்கில்லை. எனவே ஒப்பந்தம் செய்து கொள்வது நல்லது. நாட்டில் வளமுண்டு! நாம் இதுவரை அவர்களிடம் எடுத்தது போன்ற தொகையை நாமே அவர்களுக்கு வருடா வருடம் கப்பமாகக் கட்டிவிடலாம்” என்று கூறினர். இதைக் கேட்டு அரசன் சினமுற்றான். சிங்கம் போல கர்ஜித்தான். நாம் கப்பம் கட்டுவதா? நடக்காது. நடக்கவும் விடமாட்டேன். படையைத் திரட்டுங்கள் என்றான். அந்நாட்டு மக்களும் யுத்தத்திற்குத் தயாரானார்கள்.

துல்கர்னைனுக்கு, நடந்த செய்திகள் அத்தனையும் ஒற்றர்கள் மூலமாகக் கிடைத்தன. எனவே அவர் எதிர் நாட்டு மக்கள் உள்ளத்தில் அல்லாஹ் தான் அச்சத்தைப் போட்டுள்ளான். ஏனெனில் அவர்கள் மனோ இச்சைக்குக் கட்டுப்பட்டவர்கள். பாவங்களில் அதிகமாக ஈடுபடுபவர்கள். அவர்கள் பின்பற்றும் மதமும் போலியானது. அவர்கள் பல தெய்வங்களை வழிபடுகின்றார்கள். இதனால் தான் அல்லாஹ் எம்மைப் பற்றிய அச்சத்தை அவர்களது உள்ளத்தில் போட்டுள்ளான். எனவே, நீங்கள் இறையச்சத்துடன் செயல்படுங்கள். எதிரிகளை சந்திக்கும்போது ‘ஸப்ரு’டன் இருங்கள்.

நிச்சயமாக எமக்கு அல்லாஹ்வின் உதவி கிடைக்கும் என்று தனது வீரர்களுக்கு விபரமாக எடுத்துக் கூறினார். இரு படைகளும் சந்தித்த போது முஃமின்கள் மிகக் கடுமையாகவே போரிட்டனர். அநியாயக்கார அரசன் போர்க்களத்தில் கொல்லப்பட்டான். அவனது படை புறமுதுகிட்டு ஓடியது. துல்கர்னைன் தனது நாட்டை விடுவித்ததுடன் எதிர் நாட்டையும் கைப்பற்றினார். அங்கும் நீதி நெறியுடன் ஆட்சி செய்தார். இதனால் முஃமின்கள் பெரிதும் மகிழ்வுற்றனர். மக்கள் நிம்மதியுடன் வாழ்ந்தனர்.

(தொடரும் இன்ஷா அல்லாஹ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.